
’முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்’ என்பது நோய் அணுகாமல் இருப்பதற்காக எழுதப்பட்ட சித்தர் பாடல். ஆனால், தற்போதோ, முந்தைய நாள் சமைத்த உணவுகள், நாள்கள் பல கடந்தும் ஃப்ரிட்ஜ் உதவியுடன் சாப்பிடப்படுகின்றன. உண்மை என்னவென்றால், நாள் கணக்கில் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்துச் சாப்பிடும் உணவு, அமுதல்ல, விஷம்!
அவசர உலகில் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து சாப்பிடுவது சாதாரணமாக நடைபெறும் விஷயங்கள்தானே, இதில் என்ன தவறு, குறைந்த வெப்பநிலையில், உணவுப் பொருள்கள் கெடாமல் இருக்கப்போகிறது என்று கேட்கத் தோன்றலாம். நம்மையறியாமல் நமக்கு அடிக்கடி உண்டாகும் நோய்களுக்கு, இதுபோன்ற தவறான உணவு சேமிப்பு முறைகளும் முக்கியக் காரணமாகிறது என்பதே இதற்கான பதில்.
Also Read : பழைய சோறும், நீராகாரமும்…! பிரமிப்பூட்டும் பயன்கள்! பாரம்பரிய கோடை உணவை மிஸ் பண்ணாதீங்க!
ஃப்ரிட்ஜ் கண்டுபிடிக்கப்பட்டதற்கு முன்பு, உணவின் இயற்கைத்தன்மை மாறியதும் அதை தூக்கி எறிவதே நமது உணவியல் அடிப்படையாக இருந்தது. ஆனால் இன்று, சமைத்த உணவுகளை நீண்ட நாள்களுக்குப் பதப்படுத்தி, அதற்குள் புதுப்புது மாற்றங்களை ஏற்படுத்துகிறோம். இந்த உணவுகள், நமது உடலின் இயங்கியலைப் புரட்டிப்போட்டுக் கொண்டிருக்கின்றன. நோய்களை நாமே விரும்பி அழைக்கத் தொடங்கிவிட்டோம்!
சமைத்த உணவை சூடுபடுத்துவதில் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முதல் விஷயம், சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதால் உணவிலுள்ள ஊட்டச்சத்துகள் முழுவதும் அழிந்துவிடும். உணவில் ஸ்போர் (Spore) என ஒன்று இருக்கும். அதை பாக்டீரியாவின் குழந்தை எனலாம். முதல்முறை சமைக்கும்போது, அந்தச் சூட்டில் அந்த ஸ்போர் செயலிழந்து விடும். சமைத்த உணவை அறை வெப்பநிலையில் அல்லது ஃப்ரிட்ஜில் வைக்கும்போது அந்த ஸ்போர் மீண்டும் பாக்டீரியாவாக உருவெடுக்கும்.

பொதுவாக உணவை சூடுபடுத்தும்போது, முதல்முறை சமைக்கிற அளவுக்கு, தீவிரமாக சூடுபடுத்த மாட்டோம். அந்த நிலையில், மீண்டும் உயிர்பெற்ற பாக்டீரியா சாகாது. அதன் விளைவாக அந்த உணவைச் சாப்பிடும்போது அது ஃபுட் பாய்சனாகிறது. இந்த விதி சிக்கன், மஷ்ரூம், உருளைக்கிழங்கு, பிரியாணி என எல்லாவற்றுக்கும் பொருந்தும்.
உணவில் நைட்ரேட் என ஒன்று இருக்கும். இது காலிஃப்ளவர், கீரை வகைகளில் அதிகம் இருக்கும். சமைத்த உணவை மீண்டும் சூடுபடுத்தும்போது, இந்த நைட்ரேட், நைட்ரைட்டாக மாறும். அது புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது. அதாவது கல்லீரல் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய் உள்ளிட்ட பலவித புற்றுநோய் பாதிப்புக்கு காரணமாகக்கூடியது.
சில பொருள்களை ஃப்ரிட்ஜில் வைத்தாலும்கூட குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு பொருள்களின் தன்மை, மணம், சுவை, குணம் எல்லாமே மாறத்தொடங்கிடும். பூஞ்சைகளும் பரவத் தொடங்கிவிடும். முட்டையை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. முட்டையை அவித்தோ, குழம்பாகவோ, வறுவலாகவோ சமைத்தால் உடனே சாப்பிட்டுவிடவேண்டும். அதனை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள் வீணாவதோடு, வயிற்று உபாதைக்கும் வழிவகுத்துவிடும்.
பழங்களை அறை வெப்பநிலையில் வைத்து, ஃப்ரெஷ்ஷாகப் பயன்படுத்துவதே நல்லது. அப்படி வைத்தால்தான் அதிலிருக்கும் நுண்சத்துகள் முழுமையாகக் கிடைக்கும். வெட்டிய பழங்கள், சாலடுகளை ஃப்ரிட்ஜில் நீண்டநேரம் வைத்துப் பயன்படுத்தினால், அதில் இருக்கும் சத்துகள் முழுமையாகக் கிடைக்காது.
தர்பூசணிப் பழத்தை ஃப்ரிட்ஜுல் அதிகநேரம் வைத்திருந்தால் அதன் தன்மை வறண்டு அதிலுள்ள சத்துகள் கிடைக்காமல் போய்விடும், சுவையும் மாறிவிடும். ஆப்பிளை வெட்டி ப்ரிட்ஜில் வைத்தால் அதிலிருந்து வெளியேறும் ஒருவித வாயு மற்ற பழங்கள், காய்கறிகளின் தன்மையை மாற்றிவிடும். உதாரணத்துக்கு, வெட்டிய ஆப்பிளுக்கு அருகே கேரட்டை வைத்திருந்தால் கேரட்டின் சுவை கசப்புத்தன்மை மிக்கதாக மாறிவிடும்.
வாழைப்பழத்தை ஃப்ரிட்ஜில் வைக்கவே கூடாது. காற்றோட்டமாக அறை வெப்பநிலையில் வைத்துச் சாப்பிடுவதே நல்லது. உருளைக்கிழங்கை ஃப்ரிட்ஜில் வைத்தால் அதிலுள்ள மாவுப்பொருளின் தன்மை மாறிவிடும். மேலும், பூஞ்சை உண்டாகி நோயை வரவழைக்கும்.
நிறைய சமைத்து, மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி, இதுபோன்ற ஆபத்துகளை வரவழைத்துக்கொள்வதற்குப் பதில், அவ்வப்போது ஃப்ரெஷ்ஷாக சமைத்துச் சாப்பிடுவதுதான் ஆரோக்கியமானது.சமைத்த உணவுகளை, தொடர்ந்து ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தினால், அது அறிவியல் நமக்களித்த சாபம்! சமைப்பதற்குத் தேவையான சில பொருள்களைக் குறைந்த காலத்துக்கு மட்டும் ஃப்ரிட்ஜுக்குள் வைத்துப் பயன்படுத்தினால், அது வரம்! வரமும் சாபமும் நம் கையில்தான்!
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry