தமிழக வெற்றிக் கழக விழாவில் ‘முருகன் பாடல்’ சர்ச்சை: விஜய் மற்றும் பாடகர் வேல்முருகன் மீது புகார்!

0
61
vijay-tvk-party-event-murugan-song-velmurugan-police-complaint
A police complaint has been filed against TVK chief Vijay and singer Velmurugan for allegedly altering the lyrics of the famous 'Maruthamalai Maamaniye' devotional song during the party's 3rd-anniversary event in Panaiyur.

சென்னை: ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ (தவெக) மூன்றாம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டங்கள், இப்போது சட்டச் சிக்கலில் முடிந்துள்ளன. கடவுள் வழிபாட்டுப் பாடலை அரசியல் ஆதாயத்திற்காகத் திரித்துப் பாடியதாகக் கூறி, நடிகர் விஜய் மற்றும் பாடகர் வேல்முருகன் உள்ளிட்டோர் மீது காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அதிரடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் உற்சாகமும்… பனையூர் கொண்டாட்டமும்!

நடிகர் விஜய் கடந்த 2024, பிப்ரவரி 2-ஆம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் பிரம்மாண்ட கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தப் புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகனின் இசைக்கச்சேரி நடைபெற்றது. கச்சேரியின் போது மேடையின் அருகே நின்றிருந்த தவெக தலைவர் விஜய், பாடல்களுக்குத் தகுந்தபடி உற்சாகமாக நடனமாடித் தொண்டர்களைக் குஷிப்படுத்தினார்.

வெடித்தது ‘மருதமலை மாமணி’ சர்ச்சை!

பிரச்சினை எங்கே தொடங்கியது என்றால், பாடகர் வேல்முருகன் பக்திப் பாடல்களைப் பாடத் தொடங்கியபோதுதான். தமிழர்களின் உணர்வோடு கலந்த, டி.எம். சௌந்தரராஜன் பாடிப் புகழ்பெற்ற “மருதமலை மாமணியே முருகையா…” என்ற பாடலை வேல்முருகன் பாடினார்.

அந்தப் பாடலின் சரணத்தில் வரும் ‘வருவாய் குகனே வேலவா’ என்ற புனிதமான வரிகளை மாற்றி, ‘வருவாய் எங்கள் தளபதியே! வருவாய் எங்கள் தமிழக வெற்றிக் கழகமே!’ எனப் பாடியுள்ளார். பக்திப் பாடலில் கடவுளின் பெயருக்குப் பதிலாக ஒரு அரசியல் தலைவரின் பெயரையும், கட்சியின் பெயரையும் சேர்த்தது அங்கிருந்த சிலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சட்ட நடவடிக்கை: வழக்கறிஞர் குற்றாலநாதன் அதிரடி!

இந்தச் சம்பவம் தொடர்பாக நெல்லை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் வழக்கறிஞர் குற்றாலநாதன் புகார் மனு அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியிருப்பதாவது:

“முருகப் பெருமானின் புகழைப் பாடும் பிரசித்தி பெற்ற பாடலைத் தன் இஷ்டத்திற்குத் திரித்துப் பாடி, கோடிக்கணக்கான முருக பக்தர்களின் மனதைப் பாடகர் வேல்முருகன் புண்படுத்தியுள்ளார். இது மத உணர்வுகளைக் கேலி செய்யும் செயல் மட்டுமல்லாது, சமூகத்தில் மத மோதல்களைத் தூண்டி சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்கும் முயற்சியாகும்.”

மேலும், இந்தப் பாடலைத் திரித்துப் பாடத் தூண்டுதலாக இருந்த தவெக தலைவர் விஜய், கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் பின்னணி: விஜய்க்குத் தொடரும் முட்டுக்கட்டைகள்?

ஏற்கனவே கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து விஜய் மக்கள் சந்திப்பு நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வந்தன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் தனது பரப்புரையை மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், இந்தப் புதிய சர்ச்சை தவெக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் “முருக பக்தர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பக்திக்கும் அரசியலுக்கும் உள்ள இடைவெளியைத் தவெக மறந்துவிட்டதா?” என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அனல் பறக்கின்றன.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry