
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதம் கடுமையாக குறைந்து வருகிறது. இது பிஹாரை விட பாதியாகும். தேசிய சராசரியை விட கீழ்நிலையிலுள்ள இந்த புள்ளிவிவரங்கள், மக்கள் தொகை மாற்றத்தின் எதிர்காலப் பாதிப்புகள் குறித்து நுட்பமாக சிந்திக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.
சமீபத்தில் வெளியான SRS (Sample Registration Survey) 2021 அறிக்கையின் படி, தமிழ்நாட்டின் குழந்தைப் பிறப்பு விகிதம் 1.5 ஆகக் குறைந்துள்ளது. இதேபோல், ஆந்திரா மற்றும் கேரளா மாநிலங்களில் இந்த விகிதம் 1.5, கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் 1.6 ஆக உள்ளது. மக்கள் தொகையை நிலையாக பராமரிக்க தேவையான தேசிய சராசரி அளவான 2.1%-ஐ விட இது குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகும்.
வட மாநிலமான பிஹாரில் இந்த விகிதம் 3.0 ஆக இருக்கும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் 2.7%, மத்தியப் பிரதேசத்தில் 2.6%, ராஜஸ்தானில் 2.4% மற்றும் ஜார்கண்டில் 2.3% என தேசிய சராசரிக்கு மேல் உள்ளது. இந்தியாவின் தேசிய குழந்தைப் பிறப்பு விகிதம் தற்போது 2.0% ஆகும்.
குழந்தைகள் பிறப்பு குறைவாக இருப்பதால், மக்கள் தொகை சீராக வளரும் நிலையில் இருந்து, முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் நிலவுகிறது. கடந்த 1950-இல் 5.7ஆக இருந்த தேசிய விகிதம், தற்போது 2.0 ஆகக் குறைந்துள்ளது. தென் மாநிலங்களில் இது 2.1%ஐ விட நீண்ட காலமாகவே குறைவாக உள்ளது. கேரளா 1988-இல், தமிழ்நாடு 1993-இல், மற்ற தென் மாநிலங்கள் 2000-இல் இந்த நிலையைக் கடந்தன.
SRS தரவுகள் மற்றொரு முக்கிய மாற்றத்தையும் வெளிப்படுத்துகிறது. 0-14 வயதினரின் பங்கு 1971-இல் 41.2% இருந்த நிலையில், 2021-இல் 24.8% ஆக குறைந்துள்ளது. அதேவேளை, 15-59 வயதினரின் பங்கு 54.4% இல் இருந்து 66.2% ஆக அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டோரின் பங்கு 6% இருந்து 9% ஆக உயர்ந்துள்ளது.

2021 தரவுகளின்படி, தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோர் 12.9%. கேரளாவில் இது 14.4%. பிஹாரில் 6.9% மட்டுமே. ஐ.நா. மக்கள் தொகை நிதியத்தின் கணிப்புப்படி 2050-க்குள் இந்திய மக்கள் தொகையில் 20% பேர் முதியவர்களாக இருப்பர். 2046-க்குள் முதியவர்கள் எண்ணிக்கை, 0-14 வயதினரை விட அதிகமாகும். பெரும்பாலான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதால், முதியோர் பராமரிப்பு சுமை மாநில அரசுகளுக்கு அதிகரிக்கவிருக்கிறது. வேலை செய்யும் திறன் வாய்ந்த இளைஞர்களின் பங்களிப்பும் குறையும்.
மாநிலங்களுக்கு வழங்கப்படும் மத்திய நிதி, மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. இதன் காரணமாக, மக்கள் தொகை குறைந்த மாநிலங்கள் நிதி ஒதுக்கீட்டில் பின்னடைவை சந்திக்கும். எனவே, மக்கள் தொகையின் அடிப்படையில் மட்டுமே கணக்கிடுவதைவிட, உற்பத்தி திறனை அடிப்படையாகக் கொண்டு நிதியை நிர்ணயிக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
Also Read : வார விடுமுறைக்கு ஏற்ற தினம் ஞாயிறு மட்டுமா? வெள்ளி, சனிக்கு மாற்ற மத்திய அரசு பரிசீலிக்குமா?
“தரமா அல்லது எண்ணிக்கையா?” என்ற கேள்விக்கு, தென் மாநிலங்கள் தரத்தையே முன்னிறுத்தியுள்ளன. கல்வி மற்றும் சுகாதார விழிப்புணர்வால் தென்மாநிலங்களில் அதிகபட்சம் இரண்டு குழந்தைகள் மட்டுமே பெற்றுக் கொள்கின்றனர். இதற்கு மாறாக வட மாநிலங்களில் இன்றும் கல்வியறிவின் குறைவு காரணமாக குழந்தை பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.
இந்த விவகாரம்தான் தொகுதி மறுவரையறை வடிவில் தென் மாநிலங்களில் பிரச்சனையாக உருவாகி நிற்கிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பாஜக கூறி வருகிறது.ஆனால், இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதற்கு மக்கள் தொகை குறைவாக உள்ளதே காரணம். தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மேற்கு வங்கம், ஒடிசா, கர்நாடகா, இமாசலபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று கணிக்கப்படுகிறது.
முடிவுரை:
தமிழ்நாடு மற்றும் மற்ற தென் மாநிலங்களில் குழந்தைப் பிறப்பு விகிதத்தின் குறைவு, முதியோர் சவால்கள், வெளிவட்டார பணியாளர்கள் குறைவு போன்றவை பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் தாக்கங்களை உருவாக்கும். இதை எதிர்கொள்ள சுகாதாரம், வேலைவாய்ப்பு, முதியோர் பாதுகாப்பு உள்ளிட்ட திட்டங்களில் திட்டமிட்டு செயல்பட வேண்டிய கட்டாயம் தென் மாநிலங்களுக்கு உருவாகியுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry