
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆரோக்கியமான பானங்களை அருந்துவது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது. அவ்வாறு தினமும் காலை மஞ்சள் – சீரகம் கலந்த நீரை உட்கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
தினமும் காலை எழுந்தவுடன் டீ, காபி போன்ற பானங்களையே பெரும்பாலானோர் தேர்ந்தெடுப்பர். ஆனால், இது போன்ற பானங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்காது என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, காலையில் வெறும் வயிற்றில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடிய பானம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாக இருக்க வேண்டும்.
Also Read : பாத்திரம் துலக்கும் ஸ்பாஞ்சில் மறைந்திருக்கும் ஆபத்து..! எத்தனை நாட்களுக்கு ஸ்பாஞ்சை பயன்படுத்தலாம்?
தினந்தோறும் நாம் சமையலில் பயன்படுத்தும் பொருள்களைக் கொண்டு வெறும் வயிற்றில் அருந்தக் கூடிய பானங்களைத் தயார் செய்யலாம். அதன்படி, சீரகம் மற்றும் மஞ்சள் இரண்டுமே தனித்தனியே பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. பொதுவாக சீரகத் தண்ணீர் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும் ஒன்றாகும். இதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சளை சேர்த்து தயாரிக்கும் பானம் கூடுதல் நன்மைகளை தருகிறது.
எடை குறைப்புக்கு உதவும்
இந்த ஆரோக்கியமான பானம் அருந்துவது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. பசியைக் கட்டுப்படுத்தவும், அதிகளவிலான கொழுப்பைக் கரைக்கவும், உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவும். இதிலுள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள் வயிற்றுக்கு முழுமையான உணர்வை அளிக்கிறது. கூடுதலாக இவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், உணவை சிறந்த முறையில் உடைக்கவும் செய்கிறது.
செரிமானத்தை மேம்படுத்தும்
சீரகம் மற்றும் மஞ்சள் சேர்த்து தயாரிக்கப்படும் பானம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. வயிற்றுப்போக்கு, குமட்டல், மலச்சிக்கல் மற்றும் வாய்வு பிரச்சனை போன்றவற்றைத் தடுக்க இது உதவுகிறது. இவை செரிமான மண்டலத்தை நன்கு பராமரிக்கிறது. கூடுதலாக சீரகம் மற்றும் மஞ்சள் பானம் உடலில் கொழுப்பு, குளுக்கோஸ் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உடைக்கும் என்சைம்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது.

இரத்த சோகையைத் தடுக்கும்
சீரக – மஞ்சள் தண்ணீரானது இரும்புச்சத்துக்கான வலுவான ஆதாரமாகும். இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும். இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சீரக மஞ்சள் தண்ணீரை அருந்துவது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும் பலவீனம், சோர்வு போன்றவற்றிற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
கொலஸ்ட்ரால் என்ற மெழுகுப் பொருளானது இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும். கெட்ட கொலஸ்ட்ரால் இரத்த நாளங்களில் படிவதால் இதயம் இரத்தத்தை பம்ப் செய்வது கடினமாகும். இந்த கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பது மிகவும் அவசியமாகும். இதற்கு சிறந்த மற்றும் ஆரோக்கியமான பானமாக சீரகம் – மஞ்சள் பானம் இருக்கும். இது தமனிகள் அடைபடுவதற்கான வாய்ப்பைக் குறைத்து, இதய செயல்பாட்டை எளிதாக்க உதவுகிறது. மேலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான ஒரு எளிமையான வழியாக இரத்த நாளங்களை தளர்த்தி இரத்த அழுத்தத்தை பராமரிக்கும்.

சருமம், முடி ஆரோக்கியத்திற்கு
சீரகம் – மஞ்சள் தண்ணீரை உட்கொள்வதன் முக்கிய நன்மைகளில் ஒன்றாக சருமத்தை மேம்படுத்தும் திறன் அமைகிறது. இந்த பானம் உடலில் இருந்து நச்சுகளை அகற்றும் ஒரு சிறந்த இயற்கை நச்சு நீக்கியாக அமைகிறது. இந்த நீரில் உள்ள பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, செலினியம் போன்ற தாதுக்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியைத் தருகிறது.
இந்த நீரைப் பருகுவதன் மூலம் முகப்பருவைக் குறைக்கலாம். இதில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்ற குணங்கள், முதுமை அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. கூடுதலாக இந்த நீர் முடியின் மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது. மேலும் முடி உதிர்தலைக் குறைக்கிறது.
Also Read : தினமும் இரண்டே இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிடுங்க..! இதனால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?
மஞ்சளின் ஆரோக்கிய நன்மைகள்
அகத்தை சீராக்கும் சீரகத்தைப் போன்றே மஞ்சளிலும் ஆரோக்கிய நன்மைகள் கொட்டிக்கிடக்கின்றன. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற பொருள் அழற்சியைக் குறைத்து, மூட்டு வலி, கீல்வாதம் போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கிறது. செரிமானத்தை தூண்டி, கல்லீரலில் பித்த உற்பத்தியை அதிகப்படுத்துகிறது, இது கொழுப்பை உறிஞ்சுவதற்கும், செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளுடன், நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களுக்கு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும்.
மஞ்சள் இரத்தம் உறைவதைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது, இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சிக்கு எதிராக பாதுகாக்கிறது. மஞ்சள் உடலின் நச்சுத்தன்மையை நீக்கி, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மஞ்சள் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது, அல்சைமர் நோய் போன்ற நரம்பு சம்பந்தமான நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது. மஞ்சளின் அழற்சி எதிர்ப்பு மற்றும் கிருமிநாசினி பண்புகள் காயங்கள் மற்றும் புண்களை ஆற்ற உதவுகிறது.
சீரகம் – மஞ்சள் டிடாக்ஸ் பானம் தயாரிக்கும் முறை
- இந்த பானம் தயார் செய்ய முதலில் 1 கப் அளவிலான தண்ணீரில் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து 2 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
- பிறகு தீயைக் குறைத்து, கால் ஸ்பூன் அல்லது அதற்கு குறைவாக மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் 1 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு ஒரு நிமிடம் மூடி வைக்க வேண்டும். இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு, மிளகுத்தூள் சேர்க்கவும்.
- பின்னர் இதை வடிகட்டி, வெறும் வயிற்றில் வெதுவெதுப்பாக குடிக்கலாம். இந்த பானத்திற்கும் காலை உணவிற்கும் இடையே குறைந்தது அரை மணி நேர இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry