
இந்த ஆண்டில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 11.5.2025 அன்று குருபெயர்ச்சி நடக்க இருக்கிறது. திருக்கணிதத்தின்படி 14.5.2025 அன்று குரு பெயர்ச்சி நிகழ்கிறது.
இந்தப் பெயர்ச்சியில் குருபகவான், ரிஷபம் ராசியில் இருந்து மிதுனம் ராசிக்குச் செல்கிறார். மிதுனம், குருபகவானின் நட்புகிரஹமான புதனின் வீடு. மேலும் ஸ்தான பலத்தைவிட பார்வை பலமே அதிகம் உள்ள குருபகவானின், ஐந்தாம் பார்வை துலாம் ராசியிலும், ஏழாம்பார்வை தனுசு ராசியிலும், ஒன்பதாம் பார்வை கும்பம் ராசியிலும் பதிகிறது. இந்த அடிப்படையிலும், சனி, ராகு-கேது பெயர்ச்சிகளினால் ஏற்பட்டுள்ள கிரஹசார மாற்றங்களின் அடிப்படையிலும் பன்னிரு ராசிகளுக்குமான குருபெயர்ச்சி பலன்கள் தரப்பட்டுள்ளது. இதனை கணித்தவர் ஜோதிட முனைவர் கே.பி. வித்யாதரன்.
மேஷம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025 :
சதா சர்வ காலமும் உழைத்துக் கொண்டே இருக்கும் நீங்கள் அடிமனதில் ஒன்றை குறி வைத்துவிட்டால் அதை அடையாமல் விடமாட்டீங்கள். உங்கள் ராசிக்கு (திருக்கணிதப்படி) மே 14 முதல் 3-ம் இடத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான். தனது பார்வை அருளால் நல்ல மாற்றங்களைத் தரப்போகிறார். இதுவரை உங்களின் மனதில் இருந்த குழப்பங்கள், தயக்கம் அனைத்தும் நீங்கி தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.
சமூகத்தில் உங்கள் செல்வாக்கு கூடும். எனினும், குருபகவான் முயற்சி ஸ்தானத்தில் அடியெடுத்து வைப்பதால், நீங்கள் முன்னெடுக்கும் காரியங்களில் சின்னச் சின்ன தடைகள் வந்து போகத்தான் செய்யும். குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்புகள் வந்து நீங்கும். பெரியவர்களின் ஆலோசனைகளை ஏற்பது நல்லது. எந்தவொரு திட்டமாக இருந்தாலும், இரண்டாவதாக ஒரு யோசனையை வைத்துக் கொள்ளுங்கள். முதல் யோசனை சறுக்கினாலும், இரண்டாவது கைகொடுக்கும்.
குரு பகவான் பார்வை பலன்கள்: குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால், குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டை சர்ச்சைகள் வந்துபோனாலும் சந்தோஷத்துக்குக் குறைவிருக்காது. மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். விஐபிகள் அறிமுகமாவார்கள். குருபகவான் 9-ம் இடத்தைப் பார்ப்பதால், பூர்வீகச் சொத்துகள் சேரும். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள், கருத்து வேறுபாடுகள் விலகும். மகளுக்கு நல்ல மணமகன் அமைவார். குருபகவான் லாபஸ்தானமாகிய 11-ம் இடத்தைப் பார்ப்பதால், சகல வகையிலும் லாபம் உண்டு. காரியத் தடைகள் விலகும். சொத்துப் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனாகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் செல்வதால் திடீர் யோகம், பணவரவு, வீடு, மனை வாங்குதல், குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் உண்டு. ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குருபகவான் செல்வதால் வழக்குகள் வெற்றி அடையும். கோயில் கும்பாபிஷேகத்தை தலைமை தாங்கி நடத்துவீர்கள். திடீர் செலவுகள், பயணங்கள் அதிகரிக்கும்.
உங்கள் பாக்யாதிபதியும், விரயாதிபதியுமான குரு, அவருடைய நட்சத்திரத்திலேயே 13.8.25 முதல் 01.6.26 வரை செல்வதால் அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல், செலவு, டென்ஷன் இருக்கும். ஆனால் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பணவரவு, வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. வெளிநாட்டு பயணமும் உண்டு. கார்த்திகை நட்சத்திரக்காரர்களுக்கு சுபச் செலவுகளும், பிள்ளைகளால் சந்தோஷமும் வந்து சேரும். அனைத்திலும் வெற்றி பெறுவதற்குரிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன.
குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் தடைகள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். வீடு, வாகனம் வாங்குவீர்கள். அம்மாவின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் தன்னம் பிக்கையுடன் செயல்படுவீர்கள். சொத்து வாங்குவீர்கள். மனக் குழப்பங்கள் விலகும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.
வியாபாரத்தில் போட்டிகளை தகர்த்தெறிவீர்கள். திடீர் லாபங்களால் திக்குமுக்காடுவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். எனினும், வருங்கால சந்தை நிலவரத்தை கவனத்தில் கொண்டு புது முதலீடு செய்யுங்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவு தேவை. கூட்டுத் தொழிலில் சில பிரச்சினைகள் உண்டு. ஸ்டேஷனரி, ஹோட்டல், கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் அனுசரித்து போகவும். சில பணிகளை ஒன்றுக்கு இரண்டு முறை அலைந்து திரிந்து முடிக்க வேண்டியது வரும். சிலருக்கு, விரும்பத்தகாத இடமாற்றமும் வந்து சேரலாம். பொறுமையுடன் இருங்கள். கணினித் துறையினருக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. கலைத்துறையினர் வீண் விமர்சனங்களை தவிர்க்கப் பாருங்கள். இந்த குரு பெயர்ச்சி மன நிறைவையும், தெளிவான சிந்தனையையும் தருவதாக அமையும்.
பரிகாரம்: சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு முன்பிருக்கும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வழிபடுங்கள். மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு உணவு, உடை வாங்கிக் கொடுங்கள். முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.
ரிஷபம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025 :
நன்றி மறவாத குணமும், நலிந் தோருக்கு நல்லதே செய்யும் உள்ளமும் கொண்ட நீங்கள் தளராத மனங்கொண்டவர்கள். (திருக்கணிதப் படி) மே 14 முதல் உங்கள் ராசிக்கு, 2-ம் இடத்தில் வந்து அமர்ந்து பலன் தரப்போகிறார் குருபகவான்.
இதுவரை ஜென்ம குருவாக இருந்துகொண்டு, சகல வகைகளிலும் பிரச்சினைகளையும், காரியத்தடைகளையும் கொடுத்து வந்த குருபகவான், இப்போது அவர் 2-ம் இடத்துக்கு வருவதால், நிம்மதி பிறக்கும். தடைகள் விலகும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தேக ஆரோக்கியம் கூடும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்களுடன் உரசல் போக்கு நீங்கும்.
வீட்டில் உங்கள் ஆலோசனையை ஒரு பொருட்டாகவே மதிக்காத நிலை இருந்தது; முயற்சிகளில் சாண் ஏறினால் முழம் சறுக்கிய கதைதான். இனி இந்த அவலநிலைகள் அனைத்தும் மாறும். வீட்டிலும் வெளியிலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். உறவினர்கள் தேடி வருவார்கள். சமூகத்திலும் அந்தஸ்து கூடும். புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
குரு பகவான் பார்வை பலன்கள்: குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தைப் பார்ப்பதால், எதிர்த்தவர்கள் விலகிச் செல்வார்கள். ஆளுமைத்திறன் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். மருத்துவச் செலவுகள் குறையும்.
குருபகவான் 8-வது வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். திட்டமிட்டபடி அயல்நாட்டுப் பயணங்கள் கூடி வரும். விசா கிடைக்கும். குருபகவான் உங்கள் ராசிக்கு 10-வது வீட்டைப் பார்ப்பதால் பிரபலங்களின் நட்பு கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்குப் பதவிகள் தேடி வரும். தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி வரக்கூடும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: குரு பகவான் உங்களின் சப்தமாதி பதியும் விரயாதிபதியுமான செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை செல்வதால் கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சொத்து வாங்குவீர்கள். வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குரு பகவான் ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை செல்வதால் வேற்று மொழிக்காரர்கள் உதவுவார்கள். புது வண்டி வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டு.
குரு பகவான் அஷ்டம – லாபாதிபதியாகி அவரது நட்சத்திரத்திலேயே 13.8.25 முதல் 01.6.26 வரை செல்வதால் வெளிநாட்டு பயணங்கள் உண்டு. ஜாமீன் கையெழுத்திட்டு ஏமாற வேண்டாம். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள். குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இளைய சகோதர, சகோதரிகளின் திருமணம் கைகூடி வரும். குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் எதிரிகள் அடங்கு வார்கள். பயணங்கள் அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சொத்து விவகாரம் சுமுகமாக முடியும்.
வியாபாரத்தில், வியாபார ஸ்தலத்தை உங்கள் ரசனைக்கு ஏற்ப மாற்றி அமைப்பீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். கெமிக்கல், கமிஷன், ஹோட்டல், பைனான்ஸ் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் தேடி வருவார்கள்.
உத்தியோகத்தில் குறைகூறிக் கொண்டிருந்த மேலதிகாரி, இனி இணக்கமாவார். அவரது ஆதரவு கிடைக்கும். அதேபோல், பதவி உயர்வு சம்பந்தப்பட்ட வழக்கில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். சில வாய்ப்புகள் தேடி வரும். கணினித் துறையினர், இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவார்கள். கலைத் துறையினருக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். இந்த குரு பெயர்ச்சி திறம்பட செயல்பட்டு இலக்கை எட்டிப்பிடிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: சென்னை, பூந்தமல்லி – தக்கோலம் அருகில் இலம்பையங்கோட்டூரில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வழிபடுங்கள். வாய் பேச முடியாதவர்களுக்கு ஏதேனும் ஒருவகையில் உதவுங்கள். வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.
மிதுனம் ராசிக்கான குரு பெயர்ச்சி பலன்கள் 2025 :
நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்ட நீங்கள் யாருக்கும் தலைவணங்காமல் உண்மையை உரக்கச் சொல்பவர்கள். (திருக்கணிதப்படி) மே 14 முதல், உங்கள் ராசியில் வந்து அமர்ந்து, பலன் தரப்போகிறார் குருபகவான். ஜென்ம குரு என்று பதற்றம் அடைய வேண்டாம்.
குருபகவானின் பார்வை பலன்கள் ஓரளவுக்கு உங்களுக்குச் சாதகமாகவே இருக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினையில் தீர்வு கிடைக்கும். வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். அவசரப்பட்டு யாருக்கும் வாக்குறுதி கொடுக்காதீர்கள்.
ஜென்ம குரு என்பதால், வீட்டில் கொஞ்சம் சிரமங்கள் ஏற்படும். மனதுக்குள் சலிப்பு, சோர்வு, முன்கோபம் வந்து நீங்கும். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம். எதிர்பார்த்த விஷயங்களில் முன்னேற்றம் உண்டு. வெளியூர், வெளிநாடுகளில் இருக்கும் அன்பர்கள் மூலம் சுபச் செய்தி கிடைக்கும். எந்தவொரு காரியத்திலும் திட்டமிட்டு செயலாற்றினால், வீண் நஷ்டங்களைத் தவிர்க்கலாம்.
குரு பகவான் பார்வை பலன்கள்: குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால், குழந்தைப்பேறு வாய்க்கும். பிள்ளைகள் வழியில் நன்மைகள் உண்டு. பூர்வீகச் சொத்தால் ஆதாயம் உண்டு. மகளுக்கு கல்யாணம் கூடிவரும். குரு பகவான் 7-ம் வீட்டைப் பார்ப்பதால் கணவன்- மனைவிக்குள் ஓரளவு நெருக்கம் உண்டு. வீட்டில் தாமதமான சுபநிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும். மறைந்து கிடக்கும் திறமைகள் வெளிப்படும். உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் குருவின் பார்வை விழுவதால், எதிர்பார்க்கும் பணம் ஓரளவு வரும். செலவுகளும் உண்டு. அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலில் சிக்காமல் இருப்பது நல்லது.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: அலைச்சல் மற்றும் ஆதாயத்துக்குரிய கிரகமான செவ்வாயின் நட்சத்திரத்தில் 14.5.25 முதல் 13.6.25 வரை குரு பகவான் செல்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். அங்கீகாரம் இல்லாத வீடு, மனை மற்றும் வீட்டை வாங்காதீர்கள். மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். ராகுவின் நட்சத்திரத்தில் 13.6.25 முதல் 13.8.25 வரை குரு பகவான் செல்வதால் தந்தையாருடன் மனஸ்தாபங்கள் வந்து போகும். சேமிப்புகள் கரைகிறதே என்று வருந்துவீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண்பழி வரும். பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இரவு நேரம் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
உங்களின் சப்தம ஜீவனாதிபதியுமான குரு பகவான் அவரது நட்சத்திரத்திலேயே 13.8.25 முதல் 01.6.26 செல்வதால் கணவன் மனைவிக்குள் கருத்து மோதல்கள் வரும். புரிதல் இல்லாமல் பிரிதல் வர வாய்ப்பிருக்கிறது. புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு உடல்நிலை பாதிக்கும். குருபகவான் கடகத்தில் 18.10.25 முதல் 5.12.25 வரை பயணிப்பதால் எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டு. குருபகவான் 11.11.25 முதல் 11.3.26 வரை வக்ரத்தில் இருப்பதால் பூர்வீகச் சொத்துப் பிரச்சினை தீர்வுக்கு வரும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமுண்டு.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சந்தை நுணுக்கங்களை கற்றுக்கொண்டு பெரிய முதலீடு செய்யுங்கள். வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். புதிய துறையில் முதலீடு செய்ய வேண்டாம். கெமிக்கல், ஹோட்டல், துணி வகைகளால் லாபம் உண்டு. பங்குதாரர்களுடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.
உத்தியோகத்தில் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். நீண்டநாளாக எதிர்பார்த்த பதவி, சம்பள உயர்வு உண்டு. கணினி துறையினருக்கு கண் பிரச்சினை, தூக்கமின்மை வரும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் நினைத்ததை முடிப்பீர்கள். கலைஞர்கள் விமர்சனங்களைப் புறந்தள்ளுவது நல்லது. இந்த குரு பெயர்ச்சி தடைகள் எதுவானாலும் சமாளிக்கும் தைரியத்தை தருவதாக அமையும்.
பரிகாரம்: திருச்சி துவாக்குடி அருகில் திருநெடுங்களத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் வழிபடுங்கள். ஆசிரமத்தில் வாழும் குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவுங்கள். எதிலும் நன்மையே கிட்டும்.
Disclaimer : ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை ‘வேல்ஸ் மீடியா’வின் கருத்துகள் அல்ல.
Courtersy : Indhu Thamizh Thisai.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry