
ஆவியில் வேக வைத்து தயாரிக்கப்படும் இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற ஆரோக்கியமான உணவு வகைகளில், பெரும்பாலானவர்களின் முதல் சாய்ஸ் இட்லி தான். தென்னிந்தியாவில் “இட்லி” இல்லாத ஹோட்டல்களே இல்லை. சுமார் 30 – 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீபாவளி போன்ற சிறப்பு தினங்களில் மட்டுமே வீடுகளில் அத்திப் பூத்தது போல் சமைக்கப்பட்ட இட்லியை, தமிழகத்தில் இன்று இட்லி வேகாத வீடுகளும், ஹோட்டல்களும் இல்லை என்ற அளவுக்கு வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்துவிட்டது.
தற்போது, அகில உலக அங்கீகாரமும், மதிப்பும் பெற்றிருக்கிறது இட்லி. ஆமாம், உலகம் முழுவதும் விரும்பி உண்ணப்படும் உணவு என்ற பெருமையை இட்லி பெற்றிருக்கிறது. அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள விட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற உப்புகள் ஆகியவை நோய்நச்சு முறிவு காரணிகளாகத் திகழ்கின்றன.
Also Read : ரெடிமேட் மாவு வாங்கி இட்லி, தோசை செய்யறீங்களா? இந்த உண்மை தெரிஞ்சா இனி வாங்கவே மாட்டீங்க..!
திசுக்களைப் பழுது பார்த்துப் புதுப்பிக்கும் லைசின் என்ற அமினோ அமிலம் மூன்று மடங்கும், சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் பத்து மடங்கும், இட்லியில் உள்ளன. இதனால் இட்லி, தோசை முதலியவற்றில், இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டைக் கடலையில் கிடைப்பது போல, தாது உப்புகளும், அமினோ அமிலங்களும் நிறையக் கிடைக்கின்றன.
லைசின் அமிலம், பசியைக் குறைக்கிறது. இட்லி இதைத் தருவதால் உடனே பசி அகன்று மனத் திருப்தி உண்டாகிறது. இட்லி, தோசை வகைகளை சாப்பிடும் போது விட்டமின் சி உள்ள முருங்கைக்கீரை கூட்டு அல்லது முருங்கைக்காய் சாம்பார் சேர்த்துக் கொள்வது நல்லது. அல்லது வேறு ஏதேனும் ஒரு கீரைக் கூட்டை சேர்த்து உண்ணலாம்.
இல்லையெனில் புதினா, கொத்தமல்லி போன்ற துவையல் அரைத்து இட்லிக்குத் தொட்டுக் கொள்ளலாம். காரணம் லைசின் அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது விட்டமின் சி தான். அது கீரைகளில் ஏராளமாக இருக்கிறது. இந்தத் தகவல்களைத் தெரிவிப்பவர்கள் உலகின் முன்னோடி உணவியலாளர்கள் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

கொழுப்புச் சத்து அறவே இல்லாத இட்லிக்கு, பல்வேறு வகையான அசைவ சைட் டிஷ் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப தயாராகிறது. கிராமப் புறங்களில் இன்றளவும் பல வீடுகளில் கறிக் குழம்பும், ஆவி பறக்கும் இட்லியும் தான் ஞாயிற்றுக் கிழமை காலை நேரங்களில் ஸ்பெஷல் டிஷ் ஆக திகழ்கின்றன.
இட்லியின் பிறப்பிடம் தமிழகம் அல்லது கர்நாடகாவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எட்டாம் நூற்றாண்டிலேயே இட்லி தயாரிப்பதும், உண்பதுமான பழக்கம் இருந்திருக்கிறது என்றும் தெரிய வருகிறது. ஆனால், இட்லியின் ஆரம்பம் இந்தோனேஷியாவில்தான் என்றும் ஒரு ஆராய்ச்சி உண்டு. அதாவது அந்த நாட்டில் வேகவைத்த ஒருவகை உணவில் மாற்றம் செய்யப்பட்டு உருவானதுதான் இட்லி என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கும் இந்தியாவே மூலகாரணமாக இருக்கலாம் என்ற ஊகமும் உள்ளது. அதாவது இந்தோனேஷியாவின் சில பகுதிகளை ஆட்சி புரிந்த ஹிந்து மன்னர்கள்தான், ஆரம்ப கர்த்தாக்களாக இந்த வேகவைத்தப் பண்டமான இட்லியைக் கண்டு பிடித்தார்கள் என்கிறார்கள். இன்றைய நிலையில் இட்லி பல வகைகளில் தயாரிக்கப்பட்டு உலக நாடுகள் பலவற்றிலும் விரும்பி சாப்பிடப்படும் உணவாக மாறி வருகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் இட்லி, மதுரை மல்லிகைப்பூ இட்லி, ராமசேரி இட்லி, செட்டிநாட்டு இட்லி, ரவா இட்லி என்று பலவகை உண்டு. வெறும் வெண்மை நிறத்தில் கவிழ்த்து வைத்த கிண்ணம் போன்ற ஒரே உருவில் இந்த இட்லியைப் பார்த்து சலித்துப் போனவர்களுக்காக பல வண்ணங்களிலும் இட்லி தயாரிக்கப்பட்டு சில உணவகங்களில் வழங்கப்படுகிறது.
Also Read : இட்லியும் கேன்சர் வரவழைக்கும்! வேகவைக்கும் விதம் குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள்!
இட்லி கைமா, இட்லி ரோஸ்ட், இட்லி உப்புமா, பொடி இட்லி, இட்லி ஃபிரை, காய்கறிகள் சேர்த்த வெஜிடபிள் இட்லி என்று பல ருசிகளிலும் இட்லி தயாரிக்கப்படுகின்றது. கேரள மாநிலத்தில் சில இடங்களில் பலா இலைகளில் மாவு ஊற்றி வேகவைத்து இட்லி தயாரிக்கிறார்கள். இந்தவகை இட்லி பல நாட்களுக்குக் கெடாது என்றும், சபரிமலைப் பயணம் போன்று நெடுந்தொலைவு செல்பவர்கள் தம் பயண நாட்களில் எடுத்துச் சென்று பசியாறுவார்கள், தொடர்ந்து பயணிக்கத் தெம்பு பெறுவார்கள் என்றும் சொல்கிறார்கள்.
இட்லி மாவில் நல்ல பாக்டீரியாக்கள் உருவாவதால் அது நிச்சயமாக சிறந்த ஓர் உணவு. அதனால்தான் உடல்நலம் குன்றியவர்களை மருத்துவர்கள் இட்லி உட்கொள்ளச் சொல்கிறார்கள். ருசிக்காக சாப்பிடாமல், பசி அடங்கவும், உடலில் சத்து கூடவும், நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளவும் இட்லி ஓர் அத்தியாவசிய உணவு என்பதை உலகமே புரிந்து கொண்டிருக்கிறது.
உலக இட்லி தினம் மார்ச் 30ந் தேதி கொண்டாடப்படுகிறது. இட்லியை சிறப்பிக்கும் வகையில் உலக இட்லி தினம் கடந்த 2015ம் ஆண்டு முதல் முதலாக சென்னையில்தான் கொண்டாடப்பட்டது. கடந்த 17ம் நூற்றாண்டிலேயே தமிழ்நாட்டு மக்கள் இட்லி என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர். இட்லி, இந்தியாவில் 700 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry