இட்லியும் கேன்சர் வரவழைக்கும்! வேகவைக்கும் விதம் குறித்து எச்சரிக்கும் நிபுணர்கள்!

0
389

இந்தியாவின் பாரம்பரிய உணவு வகைகளில் இட்லிக்கு முக்கிய பங்கு உண்டு. ஆவியில் வேக வைத்த உணவு உடலுக்கு ஆரோக்கியமானது என்பதுடன் பாதுகாப்பானது என்பதால், பலரும் இட்லியை விரும்பி சாப்பிடுகின்றனர்.

பொதுவாக இட்லி சமைக்கும் பாத்திரங்களில் துணியை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் தற்போது இட்லி வேக வைக்கும் பாத்திரங்களில் பிளாஸ்டிக் தாள்களை பயன்படுத்துகின்றனர். இட்லியை வேகவைக்கும் வெப்பத்தில் இந்த பிளாஸ்டிக் தாள் தீங்கு விளைவிக்கும் பொருட்களை வெளியிடுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பருத்தி துணிக்குப் பதிலாக பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்தி இட்லிகளை தயாரிக்கும்போது, அது வெளிப்படுத்தும் ரசாயனங்கள் மற்றும் மைக்ரான்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

Must Read : எந்த பிளாஸ்டிக் பாதுகாப்பானது தெரியுமா? பிளாஸ்டிக் பயன்பாடும், வகைகளும்!

இது குறித்து சிஎம்ஆர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் வேதியியல் துறை தலைவர் டாக்டர் ஃபனி குமார் புல்லேலா கூறும்போது, “உணவு மற்றும் குளிர்பானக் கொள்கலன்கள், சில டிஸ்போசபிள் தட்டுகள் மற்றும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட கழிப்பறை பாட்டில்கள் இரசாயனங்கள் கொண்டவை.

அனைத்து பிளாஸ்டிக்குகளும் கீறப்பட்டாலோ அல்லது சூடுபடுத்தப்பட்டாலோ இரசாயனங்களை வெளியிடலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. சில வெளிப்பாடு நிலைகளில், இந்த தயாரிப்புகளில் உள்ள பிஸ்பெனால் ஏ (பிபிஏ) போன்ற சில இரசாயனங்கள் மக்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் ஆராய்ச்சி உறுதியாகக் கூறுகிறது.

மெல்லிய பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி இட்லியை வேகவைக்கும்போது, புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். பிளாஸ்டிக் எச்சங்கள் வெப்பத்தில் வெளிப்படும் போது உணவுப் பொருட்களில் கசியும். இந்த வகை பிளாஸ்டிக் தீங்கு விளைவிக்கும். உணவை சமைக்கும் போது அல்லது பிளாஸ்டிக் பொருட்களில் சூடுபடுத்தும் போது புற்றுநோயை உண்டாக்குகிறது” இவ்வாறு அவர் கூறினார்.

Also Read : துறைமுகம் – மதுரவாயல் பறக்கும்சாலை திட்டம்! 2024 இறுதியில் நிறைவடையும் என மத்திய அரசு அறிவிப்பு!

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள(KIDWAI Memorial Institute of  Oncology) கிட்வாய் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆன்காலஜியின் இயக்குனர் டாக்டர் லிங்கே கவுடா, “பிளாஸ்டிக் வெப்பத்தில் வெளிப்படும் போது தீங்கு விளைவிக்கும் புற்றுநோய் பாதிப்பை வெளியிடுகிறது என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. சாலையோரம் டீ குடிக்க பிளாஸ்டிக் கப் பயன்படுத்துபவர்கள், சமையல் பாத்திரங்களில் பிளாஸ்டிக் ஷீட்டில் சமைத்த இட்லி போன்ற உணவுகளை மக்கள் சாப்பிடுவதை நாங்கள் கவனித்தோம்.

இட்லி சமையல் தட்டுகளில் பருத்தி துணியை பயன்படுத்துவதான் வழக்கம்.  ஆனால் இப்போது பெரும்பாலான உணவகங்களில் பிளாஸ்டிக் ஷீட் பயன்படுத்தப்படுகிறது. இது ஆரோக்கியத்தை பாதிக்கும். இதுபோன்ற உணவகங்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதிக்க வேண்டும். அலுமினியம், ஸ்டீல், மண் பானை அல்லது தாமிரத்தில் சமைத்த உணவை உட்கொள்வது பாதுகாப்பானது.” என்று அவர் தெரிவித்தார்.

எனவே சாலையோர உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு செல்லும்போது இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை போன்ற உணவு வகைகளை வேகவைக்க பருத்தித்துணி பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது. அதேபோல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் அவ்வப்போது சோதனை மேற்கொண்டு உணவகங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry