புதுச்சேரியில் மொட்டு விடும் தாமரை! பாஜக-வில் இணைய ஆர்வம் காட்டும் மாற்றுக் கட்சியினர்!

0
7

புதுச்சேரியில் தலைவர்கள் மட்டத்தில் மட்டுமே இருந்த பாஜக, தற்போது, தொண்டர்கள் மட்டத்திலும் செல்ல ஆரம்பித்துள்ளது. மாற்றுக்கட்சியினர் பலரும் பாஜகவில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தென் இந்தியாவில், கர்நாடகாவைத் தாண்டி மற்ற மாநிலங்களில் அழுந்தக் கால்பதிப்பதற்கான முயற்சியை பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஏறக்குறைய அனைத்து ஊர்களிலுமே பாஜக கொடி ஏற்றப்பட்டுவிட்டது. அதேபோல், புதுச்சேரியிலும் தாமரையை கொண்டுசேர்க்கும் பணி சத்தமில்லாமல் நடந்துவருகிறது.

காங்கிரஸ் இல்லா புதுச்சேரிஎன்ற கோஷத்தை புதுச்சேரி பாஜக நிர்வாகிகள் கையிலெடுத்துள்ளனர். நான்கரை ஆண்டுகளாக நாராயணசாமி ஆட்சியின் மீதான அதிருப்தி, எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸின் மவுனம் ஆகியவை பாஜகவினருக்கு கைகொடுக்கிறது. கடந்த 6 மாதங்களாகவே, மாற்றுக்கட்சியினர் பாஜகவில் இணைந்து வருகின்றனர். இதுபற்றி புதுச்சேரி பாஜக ஓ.பி.சி. அணி பொதுச்செயலாளர் கிருஷ்ணராஜிடம், வேல்ஸ் மீடியா சார்பாக பேசினோம்.

மாற்று கட்சியைச் சேர்ந்த பிரபலங்கள் அதிகம் இணைவது உண்மைதான். குறிப்பிட்டு சொல்வதென்றால், முதலியார்பேட்டை தொழிலதிபர் முருகன், என்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நெல்லித்தோப்பு பாலாஜி, சாய் சுதாகர், முன்னாள் முதலமைச்சர் வைத்திலிங்கத்தின் அண்ணன், உழவர்கரை பிரபாவதி, பிரபல சிலம்பம் பயிற்சியாளர் ஜோதி கண்ணன் உள்ளிட்டோர் எங்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.         

கட்சி மீதான அதிருப்தி மற்றும் பதவிக்காகவே மாற்றுக் கட்சியினர் பாஜகவில் இணைவதாக கூறப்படுவது பற்றி கேட்டபோது, அதை அவர் திட்டவட்டமாக மறுத்தார். மத்திய, மாநில தலைமைகளின் நேர்மறை நடவடிக்கை, மோடி அரசு மீதான நம்பிக்கை காரணமாகவே அவர்கள் கட்சியில் இணைகிறார்கள். புதியவர்களை கட்சியில் இணைக்குமாறு மாநிலத் தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார், அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளோம். தேர்தலுக்கு முன் மேலும் பல பிரபலங்கள் இணைவார்கள்.“ என்றார்.

நாராயணசாமி ஆட்சி மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை முழுமையாக அறுவடை செய்யும் அளவுக்கு பாஜகவில் தொண்டர்கள் பலம் இல்லை. மாநிலத் தலைவரும், நியமன எம்.எல்..வுமான சாமிநாதன் தவிர்த்து, ஒரு சிலர் மட்டுமே (நியமன பாஜக எம்.எல்..க்கள் சங்கர், செல்வகணபதி) மாநிலம் அறிந்த தலைவராக இருக்கிறார்கள். மாற்றுக் கட்சிகளில் இருந்தும், நிர்வாகிகள்தான் இணைகிறார்களே தவிர, தொண்டர்கள் வரவில்லை.

புதுச்சேரி பாஜகவை பொறுத்தவரை, தொண்டர்கள் பலத்தை தொகுதி வாரியாக அதிகப்படுத்த வேண்டிய அவசர கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் கணக்கை தொடங்க வேண்டும் என்றால், நிர்வாகிகளுடன், தொண்டர்கள் பலமும் முக்கியம். அதற்கு மாநிலத் தலைவர் சாமிநாதனின் கூடுதல் உழைப்பும் அவசியம். மாநிம் அறிந்த பிரபலங்கள் பாஜகவில் இணைய முன்வராதது ஏன் என்பதையும் அவர் சுய ஆய்வு செய்ய வேண்டும். அதேநேரம் முதலமைச்சர்ஆளுநர் மோதலை சாதகமாக்கிக் கொள்ளும் அளவுக்கு தேர்தல் வியூகங்கள் வகுக்கப்பட வேண்டியதும் கட்டாயம்.

புதுச்சேரியில் நரேந்திர மோடி அலை ஏற்பட்டுவிட்டதாக பாஜகவினர் நம்புகின்றனர். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி என்ற கோஷத்தை முன்வைக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். மூன்றாவது அணி அமைப்பதற்கான திரைமறைவு வேலைகள் நடந்து வருகிறது. அது சாத்தியமானால், மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி அமையலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry