கொரோனாவின் புதிய JN.1 திரிபு: ஒரு முழுமையான பார்வை – ஏற்கனவே செலுத்திய தடுப்பூசி இப்போது பலன் தருமா?

0
40
Worried about the JN.1 COVID variant? This comprehensive report covers India's current case numbers, expert insights on JN.1's mild nature, and crucial precautions for vulnerable groups.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3,395-ஐ எட்டியுள்ளது. நேற்று (மே 31, 2025) ஒரே நாளில் 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், 265 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கர்நாடகா, கேரளா, டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் தலா ஒருவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநில அரசுகளின் அறிவுறுத்தல்கள்:

கொரோனா அறிகுறிகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Also Read : எல்லா நோய்களுக்கும் ஒரே அடிப்படை…! உடலுக்குள்ளே இருக்கும் பார்மஸி!

தமிழக நிலவரம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்

தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்தது குறித்து தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்தார். உயிரிழந்தவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோயும், நுரையீரல் பாதிப்பும் இருந்ததாகக் கூறினார். தமிழ்நாட்டில் தற்போது 38 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும், பொதுமக்கள் பதற்றம் அடைய வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

முகக்கவசம் கட்டாயமா? அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில்:

முகக்கவசம் அணிவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “கைகழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம்” என்றார். எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளோர், இணை நோய் உள்ளவர்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், “முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை; அணிந்தால் நல்லது” என்றும், “தவறான தகவல்களை பரப்பி பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம்” என்றும் கேட்டுக்கொண்டார்.

Also Read : சீன விண்வெளி நிலையத்தில் கண்டறியப்பட்ட புதிய பாக்டீரியா: பூமியில் கண்டிராத அரிய நுண்ணுயிரி – விஞ்ஞானிகள் குழப்பம்!

கொரோனாவின் புதிய ஜேஎன்.1 (JN.1) திரிபு

கொரோனாவின் மூன்று அலைகள் இதற்கு முன்பு வந்துசென்றன. அப்போது நோயின் தீவிரம் அதிகமாக இருந்ததுடன், பலர் உயிரிழந்தனர். அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி பிரச்சாரங்கள் மூலம் ஏராளமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆனால், 2022-ஆம் ஆண்டு நாம் எடுத்துக்கொண்ட தடுப்பூசிகள் இந்தப் புதிய வகை கொரோனாவுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்குமா? புதிய வகை திரிபால் கொரோனா புதிய அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதா? கொரோனாவின் இந்த புதிய திரிபு என்ன? அதன் அறிகுறிகள் என்ன? என்பதை புரிந்துகொள்வது அவசியம்.

ஜேஎன்.1 திரிபு என்றால் என்ன?

தற்போது சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கிலும் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். சிங்கப்பூரில் இதுவரை மரபணு வரிசைப்படுத்தப்பட்ட மாதிரிகளில் பெரும்பாலானவை ஜேஎன்.1 திரிபைச் சேர்ந்தவை என எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி AIIMS பேராசிரியரான மருத்துவர் சஞ்சய் ராய் பிபிசிக்கு அளித்த பேட்டியில், “ஜேஎன்.1 என்பது கொரோனாவின் ஓமிக்ரான் வைரஸின் ஒரு திரிபு. இது கண்டுபிடிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. இது ஒரு புதிய வைரஸ் அல்ல. இது தீவிரமானதாக இருக்குமா இல்லையா என்பது பற்றிய அனைத்து தகவல்களும் எங்களிடம் உள்ளன. ஜேஎன்.1 திரிபைப் பற்றி பயப்படத் தேவையில்லை. தற்போதைய கண்டுபிடிப்பின் படி, இது சாதாரண சளி போல லேசானதாகவோ அல்லது அதை விட இயல்பானதாகவோ இருக்கலாம்” என்றார்.

இந்த புதிய திரிபு குறித்து பேசிய மருத்துவர் கவாண்டே, “இந்த திரிபு ஓமிக்ரானை விட லேசானது. ஆனால், இது விரைவாக பரவுகிறது. ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், இந்த திரிபு அவரிடம் இருந்து பலருக்கு விரைவாக பரவ வாய்ப்பு உள்ளது. ஆனால், இந்த திரிபின் தீவிரம் அதிகமாக இல்லை என்பதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டிய தேவையில்லை” என்று குறிப்பிட்டார்.

யார் கவனமாக இருக்க வேண்டும்?

இளம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் (இணை நோய்கள் உள்ளவர்கள்) நிச்சயமாக கவனமாக இருக்க வேண்டும். கொரோனாவின் இந்த புதிய மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் கவனமாக இருக்க வேண்டும்.

Also Read : ஏன் தினமும் சீரகம்-மஞ்சள் பானத்துடன் உங்களது நாளை தொடங்க வேண்டும்..? இந்த நன்மைகளை தெரிஞ்சிக்காம இருக்காதீங்க..!

முந்தைய தடுப்பூசிகள் பயனுள்ளதா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பலிவாங்கியது. அப்போது கோவாக்சின், கோவிஷீல்ட் மற்றும் ஸ்புட்னிக் போன்ற தடுப்பூசிகள் பரவலாக வழங்கப்பட்டன. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்துக் கொண்ட தடுப்பூசி தற்போதைய திரிபுக்கு எதிராக இன்னும் செயல்திறனுடன் இருக்குமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசியுடன், பூஸ்டர் டோஸை எடுத்துக் கொண்டவர்களுக்கு நிச்சயமாக சிறிது பலன் கிடைக்கும், ஆனால் முழுமையாக பயனுள்ளதாக இருக்காது என்று இந்திய மருத்துவ சங்கத்தின் மகாராஷ்டிராவின் முன்னாள் மாநிலத் தலைவர் மருத்துவர் அவினாஷ் போண்ட்வே கூறுகிறார்.

தடுப்பூசி போட்ட பிறகு உங்களுக்கு கொரோனா வராது என்று அர்த்தமல்ல. தொற்று ஏற்பட்டால், லேசான அறிகுறிகள் தென்படலாம். இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொண்டவர்களுக்கு எதிர்ப்பு சக்தி நீண்ட காலம் நீடிக்கலாம். மிகவும் சக்தி வாய்ந்த திரிபு தோன்றினால், இந்த நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்குமா என்பது கேள்விக்குறியே. இருப்பினும், இரண்டு டோஸ் அல்லது ஒரு டோஸ் மட்டுமே எடுத்துக் கொண்டவர்களுக்கு எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கக்கூடும்.

ஒவ்வொரு வருடமும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது நன்மை பயக்கும் என்றாலும், ஒவ்வொரு வருடமும் புதிய தடுப்பூசிகளை உருவாக்க வேண்டும். ஏனென்றால், அதே தடுப்பூசிகள் புதிய திரிபுகளுக்கு எதிராக வேலை செய்யாது. இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி கூட ஒரு வருடத்துக்கு முன்பு கொடுக்கப்பட்டது அடுத்த ஆண்டில் பயனற்றதாகிவிடும். கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்றால் புதிய தடுப்பூசிகள் உருவாக்கப்பட வேண்டும்.

ஆனால், சிலருக்கு பழைய தடுப்பூசிகளிலிருந்து நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து இருந்தால், அது இந்த திரிபுக்கு எதிராக போராட உதவும். இருப்பினும், ஆராய்ச்சிக்கு அதிக செலவாகும் என்பதால், புதுப்புது தடுப்பூசிகளைக் கொண்டு வருவது சாத்தியமில்லை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

கொரோனா புதிய அலை ஏற்படுமா?

கொரோனாவின் இந்த திரிபு வேகமாகப் பரவி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அப்படியென்றால், கொரோனாவின் புதிய அலை பரவுமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஆனால், இந்த முறை ஒரு புதிய அலை பரவுவதற்கான வாய்ப்பு குறைவு என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகிறார்கள். அதற்கு சில காரணங்களை அவர்கள் பட்டியலிடுகிறார்கள்:

  • நம் நாட்டில் ஏராளமான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எனவே, சிலருக்கு இந்த திரிபை எதிர்த்துப் போராட குறைந்தபட்சம் ஓரளவு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும்.
  • இந்த மாறுபாடு வேகமாகப் பரவி வந்தாலும், அதன் தீவிரம் குறைவாகவே உள்ளது. இது பலருக்கு பரவினாலும், விரைவில் சரியாகிவிடும். எனவே, முந்தைய காலத்தைப் போன்ற ஒரு சூழ்நிலை ஏற்படாது.
  • ஒரு நபர் இந்த திரிபால் பாதிக்கப்பட்டிருந்தாலும், நோயின் தீவிரம் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு அது தெரியாது.
  • ஒரு நபர் இந்த திரிபால் பாதிக்கப்பட்டிருந்தாலும், அவரின் உடல் இந்த திரிபை எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியிருக்கலாம்.

புதிய திரிபான ஜேஎன்.1 என்பது ஓமிக்ரானின் துணை வகை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இது அச்சுறுத்தக் கூடிய வகைதான். இருப்பினும், அறிகுறிகள் லேசானவை. தீவிரமானதாக அது மாறாது. அதனால்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கின்றது.

Also Read : ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் செயற்கை விந்து: ஆண் மலட்டுத்தன்மை சிகிச்சையில் புரட்சியா? மனித குலத்திற்கு பேராபத்தா? Highly recommended reading!

நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து, அதிகமான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டு, இறப்பு விகிதம் உயர்ந்தால், கொரோனாவின் புதிய அலை வந்துவிட்டது என்று கூறலாம். இருப்பினும், ஜேஎன்.1 கொரோனா திரிபால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை.

காரணம், அதன் அறிகுறிகள் மிகவும் லேசானவை. இறப்பு விகிதமும் குறைவாகவே உள்ளது. எனவே, இது கொரோனாவின் புதிய அலை என்று உறுதியாகக் கூற முடியாது. ஆனால் ஏற்கனவே உடல்நலக் கோளாறுகள் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

Image Source : Getty Image.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry