தற்போதைய காலகட்டத்தில், சிறுவர் முதல் முதியோர் வரை இணையத்தில் இல்லாதவர்களே இல்லை. இப்படிச் சகலரும் புழங்கும் பொதுவெளியான இணையத்தில் எத்தகைய ஆபத்துக்கள் காத்திருக்கின்றன என்பதை அறிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, மன முதிர்ச்சி முழுமை பெறாத வயதிலிருக்கும் போதே, சிறு பிள்ளைகளை இணையத்திற்கு, அறிமுகப்படுத்துவது பெற்றோரால் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட இந்தக் காலகட்டத்தில், சிறார்களைக் குறிவைத்துத் தாக்கும் ‘சைபர்-புல்லியிங்’களைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமான ஒன்று.
சைபர் வெளியில் அனைவருக்குமான ஒரு சிக்கல் இருக்கிறது என்றால் அது சைபர்புல்லியிங்(Cyber Bullying). புல்லியிங் என்றால் கேலி செய்வது. குறிப்பாக வன்மமாகக் கேலி செய்வது அல்லது ஒரு குறிப்பிட்ட வகையான கொடுமைப்படுத்துதல். ஒருவரை அச்சுறுத்தும் செய்திகளை ஆன்லைனில் அனுப்புவதும் புல்லியிங்தான்.
‘சைபர் புல்லியிங்’ பாடாய்படுத்தி வருவதாகக் கூறப்படும் நிலையில், அதிகப்படியான சமூக ஊடகப் புழக்கம், தூக்கமின்மையை உருவாக்கி மனச்சோர்வுக்கு ஆட்படுத்தலாம் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ‘அசோசியேஷன் ஆஃப் ஸ்கிரீன் டைம் அண்ட் டிப்ரெஷன் இன் அடல்ஸ்’ என்கிற அந்த ஆய்வு, சமூக ஊடங்களை அதிகமாகக் கையாள்வோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புட்டுப்புட்டு வைத்துள்ளது.
அதாவது, சமூக ஊடகங்களில் அதிகமான பழக்கம், கொஞ்சம் கொஞ்சமாக மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் பழக்கங்களை தனிநபரிடம் உருவாக்கிவிடும் என்று இந்த ஆய்வு எச்சரிக்கிறது. பொதுவாக சமூக ஊடகங்களில் புழங்கும்போது நேரம், காலம் எதைப் பற்றியும் இளைஞர்கள் கவலைப்படுவதில்லை. உலகையே மறந்துவிடுகிறார்கள்.
Also Read : நீங்கள் அதிக நேரம் செல்போன், லேப்டாப் உபயோகிப்பவரா? இந்த அறிகுறிகள் இருந்தால் ‘டெக் நெக் சிண்ட்ரோம்’ உறுதி!
அருகில் எது நடந்தாலும், அவர்கள் அதை கண்டுகொள்வதில்லை, அவர்கள் கவனத்திற்கு அது எட்டுவதில்லை. சமூக ஊடகங்களில் ஈடுபட்டிருக்கும்போது தங்களுடைய பொறுப்புகளையும் மறந்துவிடுகிறார்கள். ஏற்கெனவே இரவில் தாமதமாகத் தூங்கச் செல்வோர், அதன்பிறகு நீண்ட நேரம் சமூக ஊடகங்களில் அரட்டையில் ஈடுபடுகிறார்கள். இதனால், இரவு 2 மணியைத் தாண்டி தூங்கச் செல்வோர், தூக்கமின்மைக்கு ஆட்படும் போக்கும் அதிகரித்து வருகிறது.
இளைஞர்கள், மாணவர்கள் சமூக ஊடகங்களில் அதிகம் செலவுசெய்யும் ஒவ்வொரு மணி நேரத்திலும் மனச்சோர்வு அறிகுறிகள் கணிசமாக அதிகரிப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அவர்களிடம் தனிமை, சோகம், நம்பிக்கையின்மை உள்ளிட்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் எதிர்மறையான தாக்கங்கள் மட்டுமே இப்படி மன ஆரோக்கியத்தைப் பாதிப்பதாக ஆய்வு சொல்கிறது.
தனிப்பட்ட புகைப்படங்களை அல்லது சங்கடமான வீடியோக்களை அனுப்புவது, ஆன்லைன் கேம்கள் என இன்றைய இளைஞர்கள் பல வகைகளில் ஆன்லைன் கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள். வாட்ஸ்அப் பயன்பாடு மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. வீட்டுப்பாடங்களைப் பகிர்ந்துகொள்ள, ஆசிரியர்களுடனும், சக நண்பர்களுடனும் தொடர்பில் இருக்க வாட்ஸ்அப் பயனுள்ளதாக இருக்கிறது. அதே நேரம், தங்களுக்குப் பிடிக்காத சக மாணவரைக் குழுவாகக் கேலி செய்யவும் இது ஒரு வசதியைத் தந்துவிடுகிறது.
எனவே சைபர் புல்லியிங் பற்றி பெற்றோர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் இது மன மற்றும் உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும். இளைஞர்களை தனிமைப்படுத்தவும், கவலை அடையவும், நம்பிக்கை இழக்கவும் செய்யும். சில சமயங்களில் தற்கொலை முயற்சிக்குக் கூட வழிவகுக்கும். (Sneha Suicide Prevention Centre – 044 2464 0050)
Also Read : மக்களை மிரட்டும் ‘டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி’! தப்பிப்பதற்கான பவர்ஃபுல் டிப்ஸ்!
சைபர் புல்லியிங் அறிகுறிகள்:
- பிள்ளைகள் தங்களுடைய மின்னணு சாதனத்தை பயன்படுத்தும்போது, செய்திகள் அல்லது மின்னஞ்சல்களை பெறும்பொழுது பதற்றப்படுவார்கள்.
- எப்பொழுதும் மகிழ்ச்சியாக சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள், திடீரென அவற்றை முற்றிலும் தவிர்த்தால் அது சைபர் புல்லியிங்கின் அறிகுறியாக இருக்கலாம்.
- பிள்ளைகள் அவர்களின் ஆன்லைன் இருப்பை ரகசியமாக வைத்துக் கொள்வதாக நீங்கள் உணர்ந்தால் அது இணைய அச்சுறுத்தலின் அறிகுறியாகும்.
- இணைய மிரட்டலுக்கு ஆளாகும் ஒருவர், குடும்பம் மற்றும் நண்பர்களிடம் இருந்து விலகி இருக்க முயற்சி செய்வார்கள்.
- பிள்ளைகளின் ஆன்லைன் செயல்பாடு மற்றும் சாதனங்களின் பயன்பாடு பற்றிய பேச்சு வந்தால், உரையாடல்களை தவிர்த்து விடுவது இணைய மிரட்டலின் அறிகுறியாக இருக்கலாம்.
சைபர் மிரட்டலை தடுப்பதற்கான முறைகள்:
- பிள்ளைகள் சைபர் புல்லிங் செய்யப்படுவதாக சந்தேகம் இருந்தால் முதலில் அவர்களுடன் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசுவது நல்லது.
- அவர்களின் இணைய கணக்குகள் மற்றும் போன் நம்பர்களை பொதுவெளியில் பகிர்வதைத் தடுக்க அவர்களை ஊக்குவிக்கலாம்.
- குழந்தைகள் தங்களது ஆன்லைன் கணக்குகளுக்கு வலுவான கடவுச்சொற்களை பயன்படுத்தக் கற்றுத் தருதல் அவசியம். வலுவான கடவுச்சொற்களை பராமரிப்பது இணைய அச்சுறுத்தலை தடுப்பதற்கு ஒரு சிறந்த வழியாகும்.
- குழந்தைகள் ஆன்லைனில் எந்த பிளாட்பார்மை பயன்படுத்தினாலும், அந்தத் தளம் வழங்கும் அனைத்து தனி உரிமை அமைப்புகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஜூம், கூகுள் மீட், ட்விட்டர் போன்றவை.
- ஒவ்வொரு கணக்கிலும் சென்று சுயவிவர புகைப்படங்களை தனிப்பட்டதாக்கவும், அந்நியர்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை தடுப்பது போன்ற அவர்களுடைய தனி உரிமை அமைப்புகளை அவர்களுக்குத் தெரியப்படுத்தவும்.
- இணைய மிரட்டல் நிகழ்வுகளுக்கு ஆளானால் சைபர் குற்ற தடுப்புப் பிரிவில் புகார் அளிக்க வேண்டும். இதனால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவாளியின் கணக்குகள் முடக்கப்படும்.
- சமூக ஊடகங்களில் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம்.
- போன் நம்பர், முகவரி, வீட்டின் இருப்பிடம் போன்ற தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என்று சொல்லிக் கொடுங்கள்.
- பிள்ளைகள் அதிக நேரம் சமூக ஊடகங்களில் செலவழிக்கக் கூடாது என எச்சரிப்பதும் அவசியம்.
உலகை உள்ளங்கையில் கொண்டுவந்துவிட்ட இணையப் பயன்பாடும், அபரிமிதமான சமூக ஊடகங்களின் வளர்ச்சியும் தனிநபர்களிடம் தனிமை உணர்வை அதிகரித்துவருவதாக ஏற்கெனவே பல ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. சைபர் புல்லிங்கை உலகில் இருந்து முற்றிலும் ஒழிக்க இயலாது. தொழில்நுட்பம் வளரும்போது, துன்புறுத்தல் மற்றும் கொடுமைப்படுத்துதல் உள்பட, அதனுடன் தொடர்புடைய ஆபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும்.
Also Read : சிறார் ஆபாச படங்களை போனில் பார்த்துவிட்டு டெலிட் செய்வதும் குற்றம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
இணையத்தில் புழங்குவதைக் குறைத்துகொள்வது, தவிர்க்கவே முடியாமல் சமூக ஊடங்களில் நேரத்தைச் செலவிடும்போது, நேரத்தைக் கண்காணிக்க உதவும் செயலிகளைப் பயன்படுத்துவது, வீட்டு வேலைகளில் கவனம் செலுத்துவது; நாள்தோறும் குறிப்பிட்ட நேரம் மொபைலைத் தொடாமல் கட்டுப்படுத்திக்கொள்ள பயிற்சி மேற்கொள்ளுதல்; நண்பர்கள், உறவினர்களை நேரடியாகச் சந்தித்து உரையாடுவது எனப் பழக்கப்படுத்திக் கொண்டால், சைபர் புல்லியிங் மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் இணையம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் வராமல் தடுத்துகொள்ள முடியும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry