பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை மீண்டும் ONGCக்கு தாரைவார்க்க முயற்சி! தமிழக அரசுக்கு விவசாயிகள் எச்சரிக்கை!

0
165

காவிரி டெல்டா மாவட்டங்களில் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக கடந்த அதிமுக ஆட்சி அறிவித்தது. அந்த அறிவிப்பின்படி காவிரி டெல்டா மாவட்டங்களில் எந்த விதமான தொழிற்சாலைகளுக்கும், புதிதாக எண்ணெய் எடுக்கும் திட்டங்கள் உள்ளிட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திடீரென இன்று (ஜுலை 29) மாலை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் வழிகாட்டுதலோடு பெரியகுடி கிணற்றிலிருந்து எரிவாயு எடுப்பதற்கு கலந்தாலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விவசாயிகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றனர்.

இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். “காவிரி டெல்டாவில் பேரழிவு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன், கச்சா பாறை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு ஓஎன்ஜிசிக்கு அனுமதிக்க கூடாது என கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்தோம்.

2020-ம் ஆண்டு முதல் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ஓ.என்.ஜி.சி புதிய கிணறுகள் அமைக்கவும், ஏற்கெனவே பேரழிவு ஏற்படும் சூழல் ஏற்பட்டு மூடப்பட்ட கிணறுகளை இனி செயல்படுத்தக்கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது காவிரி டெல்டாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் மூடப்பட்டுள்ள கிணறுகளை திறப்பதற்கும், எரிவாயு எடுப்பதற்கும் மறைமுக முயற்சிகளை ஓஎன்ஜிசி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

GETTY IMAGE

கடந்த ஆண்டு திடீரென நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் பகுதியை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்ததாக செய்தி வெளிவந்தது. அதனை எதிர்த்து போராடிய போது தமிழக முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு அவ்வாறு அறிவிப்பு செய்தது தவறானது அதனை திரும்ப பெறுகிறோம் என்று அறிவித்தார். அதன்படி திரும்பப் பெறப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசின் அனுமதி இல்லாமலேயே திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே பெரியகுடியில் கடந்த 2013-ம் ஆண்டு ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்காக கிணறு தோண்டும் பணி நிறைவடையும் நிலையில் கட்டுக்கடங்காத எரிவாயு வெடித்து தீப்பற்றி எரிந்தது. மக்கள் போராட்டத்தினால் அந்தக் கிணறுக்கு தடை விதிக்கப்பட்டது.

FILE IMAGE

கடந்த ஆண்டு மீண்டும் அந்த கிணற்றை திறப்பதற்கான நடவடிக்கையை ஓ.என்.ஜி.சி மேற்கொண்டபோது தமிழக அரசு அனுமதி கொடுக்கவில்லை. இந்நிலையில் திடீரென இன்று மாலை மன்னார்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்டிஓ வழிகாட்டுதலோடு பெரியகுடி கிணற்றிலிருந்து எரிவாயு எடுப்பதற்கு கலந்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இந்த அறிவிப்பானது தற்போது தமிழக அரசின் கொள்கைக்கு முரணாக உள்ளது.

2020-ம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பிறகு, 2016-க்கு முன்னர் அனுமதி பெற்ற கிணறுகள் தவிர்த்து, காவிரி டெல்டாவில் புதிய கிணறுகள் அமைக்கவோ, மூடப்பட்ட கிணறுகளை திறக்கவோ அனுமதி மறுக்கப்பட்டு ஓஎன்ஜிசி நிறுவன பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள கச்சா எடுக்கும் கிணறுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திடீரென இப்படி ஒரு கூட்டத்தை கூட்டுவதற்கு யார் அனுமதி கொடுத்தது? அப்படி என்றால் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு பாதுகாக்கப்பட்ட மண்டலத்தை மீண்டும் ஓ.என்.ஜி.சி யிடம் தாரை வார்ப்பதற்கு அனுமதி கொடுத்துள்ளதா? அமைதிப் பூங்காவாக விளங்கும் காவிரி டெல்டாவை சீரழிக்க முயற்சிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இது குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளிப்படையாக தனது கொள்கை நிலையை அறிவிக்க முன்வர வேண்டும். ஏற்கெனவே பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீண்டும் பணிகளை மேற்கொள்ளவோ அல்லது பேராபத்து ஏற்படும் என்கிற காரணத்தால் மூடப்பட்டுள்ள எரிவாயு கிணறுகளை செயல்பாட்டுக்கு கொண்டு வரவோ அனுமதிக்ககூடாது. அப்படி அனுமதிக்கப்படும் பட்சத்தில் விவசாயிகள், பொதுமக்கள் ஒன்று திரண்டு தீவிரமான போராட்டத்தில் களமிறங்க நேரிடும்” இவ்வாறு பி.ஆர். பாண்டியன் எச்சரித்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry