ஒமைக்ரான் வைரஸால் பாதிப்பு பெரிதாக இருக்காது! இந்தியர்களிடம் ‘செரோபாசிட்டிவ் உயர்வாக’ இருப்பதாக வல்லுநர்கள் கணிப்பு!

0
60

இந்தியர்கள் ஏற்கெனவே கொரோனா முதல் அலை, 2-வது அலையில் பாதிக்கப்பட்டு செரோபாசிட்டிவ் விகிதம் 80 சதவீதம் வரை இருப்பதாலும்தடுப்பூசி செலுத்துவது அதிகரித்து இருப்பதாலும்ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு இருக்காது என்று ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் மீண்டும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் செல்லுலார் மற்றும் மாலிகுலர் பயாலஜி அமைப்பின் முன்னாள் இயக்குநர் ராகேஷ் மிஸ்ரா ஐதராபாத்தில் PTI செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ளார். அப்போது, “இந்தியர்கள் ஏற்கெனவே கரோனா முதல் அலை, 2-வது அலையால் அதிகமாக பாதிக்கப்பட்டு அவர்கள் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிவிட்டது. ஏறக்குறைய 70 முதல் 80 சதவீதம் செரோபாசிட்டிவ் இருக்கிறது. அதிலும் பெரிய நகரங்களில் 90 சதவீதமாக இருக்கிறது. அதிகமான அளவில் மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசியும் செலுத்தி வருகிறார்கள்.

மக்களுக்குத் தடுப்பூசியின் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி, இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை பாதுகாக்கும். ஒருவேளை மக்கள் பாதிக்கப்பட்டாலும், அது லேசானதாகவே இருக்கும். அறிகுறி இல்லாமல்தான் இருக்கும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் இன்னும் அதிகமானோர் இருக்கிறார்கள். அவர்களும் தடுப்பூசி செலுத்தும்போது, குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்தும்போது, ஒமைக்ரான் வைரஸிடம் இருந்து அதிகமான பாதுகாப்பு கிடைக்கும்.

முதல் கட்டமாகக் கிடைத்துள்ள புள்ளிவிவரங்களைப் பார்த்தால், டெல்டா வைரஸைவிட, ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு குறைவாகவே இருந்து வருகிறது. முகக்கவசம் அணிதல், தடுப்பூசி செலுத்துதல், சமூக விலகலைக் கடைப்பிடித்தல் போன்றவை ஒமைக்ரானிலிருந்து பாதுகாக்க உதவும்எனத் தெரிவித்தார்.

மூன்றாவது அலை இந்தியாவில் வருமா என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராகேஷ் மிக்ஸரா, “அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் மூன்றாவது அலை வரும் எனக் கூற முடியாது. ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் இல்லாமலே அடுத்த அலை வந்துவிட்டது. ஒமைக்ரான் வராமல் கூட புதிய அலை வரலாம்.

Also Watch :- கொரோனாவோட வாழ பழகிக்கனும்~ஒமிக்ரான் மாதிரி இன்னொரு வைரசும் வரும்|Virologist Dr. Pavitha Venkatagopalan

இந்தியாவைப் பொறுத்தவரை அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டதால் 3-வது அலைக்கு வாய்ப்பு குறைவு. அப்படியே 3-வது அலை வந்தாலும், தொற்றால் பாதிக்கப்படும் மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும், ஆக்சிஜன் பிரச்சினையால் சிக்குவதும் குறைவாகவே இருக்கும். கரோனா தடுப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமல் இருந்தால், லேசான பாதிப்புடன் கூடிய அலை வரலாம். அது மோசமாகக் கூட சென்று பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆதலால் முகக்கவசத்தை அணிதல், தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளுதல் வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வழியாகும்என அவர் தெரிவித்தார்.

ஒமைக்ரான் பாதிப்பைக் கண்டறிய என்ன மாதிரியான பரிசோதனை இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த ராகேஷ் மிஸ்ரா, “ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை பாசிடிவ் ஏற்பட்ட ஒருவரின் உடலில் இருந்து மாதிரிகளை எடுத்து மரபணு பரிசோதனை மூலம்தான் உறுதி செய்ய முடியும். அதுமட்டும்தான் சரியான வழி. வெளிநாடுகளில் ஒமைக்ரானைக் கண்டறிவதற்காக சிறப்பான ஆர்டிபிசிஆர் கிட் தயாரிக்கிறார்கள்எனக் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry