ஹிஜாப் பிரச்சனையில், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையிலான கருத்துக்களை தெரிவிப்பதை பிற நாடுகள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், புர்கா அணிந்து வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர்.
மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி, சிக்மகளூரு உள்ளிட்ட இடங்களிலும் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து வேறு சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து கர்நாடகாவில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஹிஜாப் வழக்கு தொடர்பாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக் கூடாது. இந்த வழக்கு தொடர்பாக வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும்’ என்று தெரிவித்தது.
இந்த நிலையில் கர்நாடகாவில் நடந்து வரும் ஹிஜாப் சர்ச்சை குறித்து சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க அலுவலகம் ஐஆர்எஃப் கருத்து தெரிவித்துள்ளது. ஐஆர்எஃப்-ன் அமெரிக்க தூதர் ரஷாத் ஹுசைன் தனது ட்விட்டர் பதிவில் ‘‘ மத சுதந்திரம் என்பது ஒருவருடைய மதரீதியான ஆடைகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமைகளை சேர்த்ததே. மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியலாமா, அணியக்கூடாதா என்பதை கர்நாடக அரசு முடிவு செய்யக்கூடாது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிப்பது பெண்களின் மத சுதந்திரத்தை களங்கப்படுத்துவது போன்றது’’ என தெரிவித்து இருந்தார்.
Religious freedom includes the ability to choose one’s religious attire. The Indian state of Karnataka should not determine permissibility of religious clothing. Hijab bans in schools violate religious freedom and stigmatize and marginalize women and girls.
— Amb. at Large for International Religious Freedom (@IRF_Ambassador) February 11, 2022
இதனைத் தொடர்ந்து ஹிஜாப் பிரச்சனையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் வகையிலான கருத்துக்களை தெரிவிப்பதை பிற நாடுகள் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பகாசி, ‘‘கர்நாடக மாநிலத்தில் சில கல்வி நிலையங்களில் உருவெடுத்துள்ள ஹிஜாப் பிரச்சனை குறித்து பெங்களூரு உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
பிற நாடுகள் இது போன்ற இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதை ஊக்குவிக்க வேண்டாம். எங்கள் அரசியலமைப்பு, வழிமுறைகள், ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும். இந்தியாவை நன்கு அறிந்தவர்கள் அந்த உண்மைகளை உரியமுறையில் பாராட்டுவர்’’ எனக் கூறியுள்ளார்.
Our response to media queries on India’s reaction to comments by some countries on dress code in some educational institutions in Karnataka:https://t.co/Mrqa0M8fVr pic.twitter.com/pJlGmw82Kp
— Arindam Bagchi (@MEAIndia) February 12, 2022
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry