இராமாயணமும், மகாபாரதமும் குப்பைகள்! சமூகத்தை சீரழித்துவிட்டதாக திருமாவளவன் ஆவேசம்!

0
225

பகுத்தறிவு மூலமாக மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காக ராமாயண, மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்களின் மூளையில் திணித்துள்ளனர் என்று பாஜக – ஆர்எஸ்எஸ் குறித்து விடுதலை சிறுதலைக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், புதுச்சேரியில் ‘கூட்டாட்சிக் கோட்பாடும் நாடாளுமன்ற சனநாயகமும்’ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு அக்கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் தலைமையேற்று பேசினார்.

அப்போது, “தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விற்கு எதிராக இயற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதின் எதிரொலியாக இந்த கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. சனாதன இந்தியாவில் சமத்துவம் கிடையாது. சனாதன இந்தியாவில் சகோதரத்துவம் கிடையாது. சனாதன இந்தியாவில் சுதந்திரம் கிடையாது. சமாதான இந்தியாவில் நீதி கிடையாது என்றார்.

சகோதரத்துவம் இருந்தால்தான் சமத்துவம் வரும், சுதந்திரம் இருந்தால் தான் சகோதரத்துவம் இருக்கும். நீதி கிடைத்தால் தான் இந்த மூன்றும் கிடைக்கும். ஒன்றோடுன்று இவைகள் தொடர்புடையது. ஆகவே தனது சனாதனத்தை இடிப்பதற்கு இவர்கள் பாபர் மசூதிக்குப் போனதைப் போல் கடப்பாறையை தூக்கி போக வேண்டிய அவசியமில்லை. அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் ஒன்று போதும்.

உழைக்கின்ற மக்களை ஏய்த்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பகுத்தறிவு மூலமாக சிந்திக்க கூடாது என்கிற வகையிலே, புராண குப்பைகளை இவர்களது மூளையில் திணித்துள்ளனர். இந்திய சமூகக் கட்டமைப்பை இந்த நிலைக்கு ஆளாக்கிய இரண்டு புராணக் குப்பைகளை, இதிகாசங்கள் என்ற பெயரால் மிகப் பெரிய பாத்திரத்தை வகித்திருக்கின்றன.

அதில் ஒன்று இராமாயணம், இன்னொன்று மகாபாரதம். இந்த இரண்டு இதிகாசங்கள் தான் இந்திய சமூகத்தை முற்றாக சிதைத்து, சகோதரத்துவத்தை சிதைத்து, சுதந்திரத்தை சிதைத்து, குழுக்களாக, காட்டுமிராண்டி சமூகங்களை போல எந்த தொடர்பும் இல்லாமல், ஆங்காங்கே தனித் தனித் தீவுகளாக இந்த சமூகங்களை மாற்றி அமைத்ததில், இந்த இரண்டு இதிகாசங்களும் பெரும்பங்கு உண்டு.

அரிச்சுவடி கூட படித்திருக்க மாட்டான், அவனுக்கு ராமன் லட்சுமணன் கதை தெரியும். பள்ளிக்கூடம் பக்கம் போயிருக்க மாட்டான், அவனுக்கு மகாபாரதத்தின் ஐந்து பஞ்ச பாண்டவர்கள் பற்றிய கதை தெரியும். இப்படி படிக்காதவன் உள்ளத்தில் கொண்டு போய் விதைத்தார்கள். குலத்துக்கு ஒரு நீதி என்று சமூக கட்டமைப்பில் பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வு, பிராமணனே எல்லாருக்கும் மேலானவன், உயர்ந்தவன், என்கிற இந்த கதைகள் எல்லாம் கற்பிதமாக நிலை நிறுத்தினார்கள்.

இந்த சமூக கட்டமைப்பு மீது யாராலும் கை வைக்க முடியவில்லை. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த சமூக ஒழுங்கை, ஒரே நபர் தனது பேனா முனையால் அடித்து நொறுக்கி, சிதைத்து கொண்டிருக்கிறார் என்றால் அந்த பெருமை அம்பேத்கரை சாரும். இந்திய அரசமைப்பு சட்டம் என்பது வெறும் சட்டம் அல்ல, அது ஒரு கோட்பாடு உள்ளது.

ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் பாஜகவில் இருக்கிறார் என்றால், அவர் அப்பட்டமான சுயநலவாதி என்று அர்த்தம். தனிப்பட்ட முறையில் பதவி வாங்கலாம், ஆனால் இந்த சமூகத்திற்கு என்ன பலன் உள்ளது. அவர்களால் சாதியை ஒழிக்க முடியுமா? என்றாவது ஒழிப்போம் என்று சொல்லச் சொல்லுங்கள். இந்தியாவில் நாங்கள் சாதியை ஒழிப்போம், சகோதரத்துவத்தை நிலை நாட்டுவோம், அம்பேத்கரின் அரசியலமைப்பு சட்டம் சொல்கிற சமத்துவத்தை வென்றெடுப்போம் என்று பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒருவரைப் பேச சொல்லுங்கள், நான் இந்த அரசியலை விட்டே வெளியேறுகிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சியைக் கலைத்து விடுகிறேன். ஆனால் அதை அவர்கள் சொல்ல மாட்டார்கள்.

பாஜக, ஆர்.எஸ்.எஸ்-ஐ பொறுத்தவரை மத மாற்றத்தைத் தடுத்து, காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கியை நீர்த்துப் போகச் செய்யவேண்டும் என்ற இரண்டை காரணங்களுக்காக தலித் மற்றும் பழங்குடியின மக்களுடன் நெருங்கி நெருங்கி வருகிறார்கள். இந்தியர்களை மதத்தின் பெயரால், இந்துக்களை சாதியின் பெயரால் பிரிக்கிறார்கள். தலித்துகளைச் சேர்த்துக்கொண்டு சிறுபான்மையினரை வெறுக்கின்ற வெறுப்பு அரசியலை விதைக்கிறார்கள். வன்முறைகளை யுக்திகளாக கையாளுகிறார்கள்.

தற்போது இந்தியா முழுவதும் ஒரே கட்சி ஆள வேண்டும். ஆனால் அதை இந்த அரசியலமைப்பு சட்டம் ஒத்துக்கொள்ளாது. ஆகவே இந்த அரசியலமைப்பு சட்டம்தான் பாஜகவின் முதல் எதிரி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அம்பேத்கரால் வகுத்து அமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் தான் சன்பரிவாரின் முதல் எதிரியாக இருக்கிறது. அதற்கு பிறகு இரண்டாவது தான் காங்கிரஸ் கட்சியை எதிரியாக பார்க்கின்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டம்தான் இந்த சமூக கட்டமைப்பைச் சிதைத்து, வர்ணாசிரமத்தை தகர்த்துக் கொண்டு இருக்கிறது.” இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சலீம், திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவரும் மாநில அமைப்பாளருமான சிவா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry