
“ஒன்று அல்லது இரண்டு ட்ரிங்க்ஸ் மது அருந்துவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது என்று நினைத்த நாட்கள் போய்விட்டன. ஏனென்றால் 2023-ஆம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனம் ‘எந்த அளவு மது அருந்தினாலும் அது நமது ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பானது அல்ல’ என்பதை உறுதிப்படுத்தியது. அதிகமாக மது அருந்தும் பழக்கம் என்பது அதிகரித்து வரும் உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் இறப்புடன் தொடர்புடைய ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.
Also Read : மது அருந்துவதற்கு முன் சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள்! தவிர்க்க வேண்டிய உணவுகள்! Vels Exclusive
வாரத்திற்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட ஆல்கஹால் ட்ரிங்க்ஸ்களை குடிப்பது, மூளை பாதிப்பு அபாயத்தை கணிசமாக அதிகரிக்க கூடும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. பிரேசிலில் உள்ள சாவ் பாலோ மருத்துவப் பள்ளியின் ஆல்பர்டோ பெர்னாண்டோ ஒலிவேரா ஜஸ்டோ தலைமையில் நடைபெற்ற ஆய்வில், வாரத்திற்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட ட்ரிங்ஸ் குடிப்பது, நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறனில் சிரமத்தை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவு அமெரிக்க நரம்பியல் அகாடமியின் மருத்துவ இதழான நியூராலஜியில் வெளியிடப்பட்டுள்ளது.
Source : Eight or more drinks per week linked to signs of injury in the brain
இருப்பினும், இந்த புதிய ஆய்வானது அதிக குடிப்பழக்கம் மூளை சேதத்தை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்கவில்லை, மாறாக ஒரு தொடர்பை மட்டுமே காட்டுகிறது. அதிகம் மது அருந்தும் பழக்கம் மூளைக்கு தீங்கு விளைவிப்பதாகவும், நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறன் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட வழிவகுக்கும் என்றும் தங்கள் ஆய்வு காட்டுவதாக பிரேசிலில் உள்ள சாவ் பாலோ பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் ஆய்வு ஆசிரியர் ஆல்பர்டோ பெர்னாண்டோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மூளை ஆரோக்கியத்தில் மதுப் பழக்கம் ஏற்படுத்தும் விளைவுகளைப் புரிந்துகொள்ள, சராசரியாக 75 வயதுடைய 1,781 பேரை இறந்த பின் ஆய்வு செய்தனர். அனைவருக்கும் மூளை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. டவு டாங்கிள்ஸ் மற்றும் ஹைலின் ஆர்டெரியோலோஸ்கிளிரோசிஸ்(Dow Tangles and Hylline Arteriolosclerosis) உள்ளிட்ட மூளைக் காயத்தின் அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என ஆராய்ச்சியாளர்கள் தேடினர். ஹைலின் ஆர்டெரியோலோஸ்கிளிரோசிஸ்(Hylline Arteriolosclerosis) என்பது சிறிய ரத்த நாளங்கள் குறுகி, தடிமனாகவும், விறைப்பாகவும் மாறும் ஒரு நிலை.
இது ரத்த ஓட்டத்தை கடினமாக்கி காலப்போக்கில் மூளையை சேதப்படுத்தும். ஆராய்ச்சியாளர்கள் மூளை எடை மற்றும் ஒவ்வொரு நபரின் உயரத்தையும் அளவிட்டனர். இறந்த பின் ஆய்வு செய்யப்பட்ட 1,781 நபர்களின் மது அருந்தும் பழக்கம் குறித்து அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் கேட்டறிந்தனர்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட இறந்த 1,781 பேரில் ஒருபோதும் மது அருந்தாத 965 பேர், வாரத்திற்கு ஏழு அல்லது அதற்கும் குறைவான ட்ரிங்க்ஸ்களை அருந்திய 319 மிதமாக குடிப்பவர்கள்; வாரத்திற்கு 8 அல்லது அதற்கு மேற்பட்ட ட்ரிங்க்ஸ்களை அருந்திய 129 அதிக குடிப்பழக்கம் கொண்டவர்கள் மற்றும் அதிகம் குடித்து விட்டு குடியை நிறுத்திய 368 பேர் அடக்கம்.
ஒரு ட்ரிங்க் என்பது 14 கிராம் ஆல்கஹால் என வரையறுக்கப்பட்டுள்ளது. இது சுமார் 350 மில்லி பீர், 150 மில்லி ஒயின் அல்லது 45 மில்லி காய்ச்சி வடிகட்டிய மதுபானம் ஆகும். ஒருபோதும் குடிக்காதவர்களுக்கு 40% வாஸ்குலர் மூளை காயங்கள் (Vascular Brain lesions) இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இது மிதமாக குடித்தவர்களுக்கு 45%-ஆகவும், அதிகமாக குடித்தவர்களுக்கு 44%-ஆகவும், அதே நேரத்தில் முன்பு அதிகமாக குடித்தவர்களுக்கு 50% -ஆகவும் இருந்தது.

மூளை ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய காரணிகளான இறக்கும் வயது, புகைபிடித்தல் மற்றும் உடல் செயல்பாடு போன்றவற்றைக் கருத்தில் கொண்ட பிறகு, அதிகமாக குடிப்பவர்களுக்கு வாஸ்குலர் மூளைப் புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் 133% அதிகமாக இருந்தன. முன்பு அதிகமாக குடித்தவர்களுக்கு 89% அதிகமாகவும், மிதமாக குடிப்பவர்களுக்கு 60% அதிகமாகவும் ஆபத்து இருந்தது. இந்த ஆய்வில், தற்போது அதிகமாக மற்றும் முன்பு அதிகமாக குடித்தவர்களுக்கு அல்சைமர் நோயுடன் தொடர்புடைய Tau Tangles உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாகவும், இதற்கு முறையே 41% மற்றும் 31% அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அதே போல முன்பு அதிகமாக மது அருந்தியவர்களின் மூளை நிறை விகிதம், உடல் நிறை விகிதத்துடன் ஒப்பிடும்போது குறைவாக இருந்தது. மேலும் மோசமான அறிவாற்றல் திறன்களை கொண்டிருந்தது. தவிர இவர்களுக்கு அறிவாற்றல் திறன்களும் பலவீனமாக இருந்தன. அதிகமாக மது அருந்துபவர்கள் ஒருபோதும் குடிக்காதவர்களை விட சராசரியாக 13 ஆண்டுகள் முன்னதாகவே இறந்து விடுவதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டது.
Also Read : முட்டையின் மஞ்சள் கருவில் ஆரோக்கியமற்ற கொழுப்பு..? உண்மையை தெரிஞ்சிக்க இதை படிங்க…!
மொத்தத்தில் அதிக குடிப்பழக்கம் மூளையில் ஏற்படும் காயம் அல்லது சேதத்துடன் நேரடியாக தொடர்புடையது என்பதை நாங்கள் கண்டறிந்தோம், மேலும் இது மூளை ஆரோக்கியத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்த கூடும், இது நினைவாற்றல் மற்றும் சிந்தனை திறன்களைப் பாதிக்கலாம் என்று ஜஸ்டோ கூறினார்.
மூளை காயத்திற்கு மதுவும் ஒரு காரணம். மதுவை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகள், மது தொடர்பான மூளை குறைபாடு (ARBI) என்று அழைக்கப்படுகின்றன. ARBI உள்ள ஒருவர் புதிய கற்றல், நினைவாற்றல், சிந்தனை தொடர்பான திறன்கள் மற்றும் உடல் ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
இதேபோல், மெக்லீன் மருத்துவமனையிலும் பிற இடங்களிலும் செய்யப்பட்ட ஆய்வுகள், இளம் பருவத்தினரின் மூளையை ஆழமான மற்றும் ஆபத்தான வழிகளில் ஆல்கஹால் பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது. டீனேஜ் மற்றும் பதின் பருவ தொடக்க வயதில் மூளை வளரும். இதனால் வயது அதிகமுள்ளவர்களின் மூளையை விட, இளம் பருவத்தினரின் மூளையை ஆல்கஹால் அதிகம் பாதிக்கும்.
Image Source : Getty Image
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry