பால் தினகரன் ஐ.டி. ரெய்டு விவகாரம்! முக்கிய திராவிடக் கட்சிக்கு கைமாறியதா ரூ.600 கோடி? மவுனமாக்கப்பட்ட தமிழக ஊடகங்கள்!

0
251

கோவையைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவரும் `இயேசு அழைக்கிறார்அமைப்புக்குச் சொந்தமான 28 இடங்களில் 3 நாட்கள் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் தமிழகத்தின் முன்னணி அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் நடுநிலையோடு செயல்பட்டனவா? என்ற கேள்வி எழுந்துள்ளது

டிஜிஎஸ் தினகரன் யார்?

நெல்லை மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்த, வங்கி எழுத்தராக இருந்த டிஜிஎஸ் தினகரன், 1962-ல் தனது 27-வது வயதில், Jesus Calls அதாவது ஏசு அழைக்கிறார் என்ற ஜெபக்கூட்ட அமைப்பை ஏற்படுத்தினார். அமெரிக்காவின் ஓரல் ராபர்ட்ஸ் என்பவரை ரோல்மாடலாகக் கொண்டு அவரைப்போலவே வளர்ந்தார். உள்நாடு, வெளிநாடுகளில் அவர் நன்கொடைகளை வாரிக்குவித்தார். இதன் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, தனது குடும்பத்தினர் பெயரில் டிஜிஎஸ் தினகரன் சொத்துக்களை வாங்கியதாக கூறப்படும் நிலையில், தனது மகன் பால் தினகரனை சரியான நேரத்தில் களமிறக்கினார். சென்னை அடையாறில் முக்கிய சாலைக்கு டிஜிஎஸ் தினகரன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. டிஜிஎஸ் தினகரன், 2008-ல் உயிரிழந்தார்.

புகுந்து புறப்பட்ட ஐ.டி. துறை

இயேசு அழைக்கிறார் அமைப்புக்கு உள்நாடு, வெளிநாடு என மொத்தம் 121 பிரேயர் டவர்கள் உள்ளன. இவற்றில் தமிழ்நாட்டில் மட்டும் 34 பிரேயர் டவர்கள் இருக்கின்றன. இந்த அமைப்பின் சொத்து மதிப்பு ரூ.5,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 20-ந் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்த வருமான வரித்துறை சோதனையில், ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், கணக்கில் காட்டாத ரூ.118 கோடி முதலீடு, 4.7 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு ஆஜராகுமாறு பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சோதனை ஏன்?

காருண்யா பல்கலைக்கழத்தில்(1986-ல் டிஜிஎஸ் தினகரனால் தொடங்கப்பட்டது, பரப்பளவு சுமார் 750 ஏக்கர்) மாணவர் சேர்க்கையில் மோசடி நடத்தியும், வெளிநாடுகளிலிருந்து வரும் பணத்துக்கு முறையாகக் கணக்கு காட்டாமலும் இருந்திருக்கிறார்கள். சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், முக்கிய திராவிடக் கட்சிக்கு சாதகமாக இயேசு அழைக்கிறார் அமைப்பு சத்தமில்லாமல் தேர்தல் பணிகளை செய்வதாக தெரிகிறது. கொரோனா காலத்தில் இயேசு அழைக்கிறார் அமைப்பின் வங்கிக் கணக்குக்கு இணையம் மூலம் வந்த ரூ.600 கோடியை, பல கட்டங்களாக முக்கிய திராவிடக் கட்சிக்கு கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டது என கூறப்படுகிறது.

மவுனமாக்கப்பட்ட ஊடகங்கள்!

வழக்கமாக ஐ.டி. ரெய்டு என்றாலே ஊடகங்களுக்கு அல்வா சாப்பிடுவதுபோல. அதிலும் காட்சி ஊடகங்கள், செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்களை சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் நேரலை, நேரலை என கேள்வியால் துளைப்பார்கள். எத்தனை நாள் சோதனை நடக்கிறதோ, அங்கேயே இருந்து, கிடைக்கும் தகவல், சொந்த கருத்து என செய்தியாளர்கள் சமாளிப்பாளர்கள். மற்றொருபுறம், நாள் கணக்கில் விவாதங்கள் அனல்பறக்கும். அச்சு ஊடகங்கள், முதல் பக்க பேனர் செய்தியாகவோ அல்லது 8 காலம் செய்தியாகவோ போட்டு அதகளப்படுத்துவார்கள்.

நடிகர் விஜய், தயாரிப்பாளர் அன்புச்செழியன், ஜெயா டிவி, ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் உள்ளிட்ட சோதனைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் பால் தினகரன் விவகாரத்தில் சில நாளிதழ்கள், காட்சி ஊடகம் தவிர, அனைத்து தமிழ் ஊடகங்களும், நாங்களும் செய்திபோட்டோம் என்ற அளவில் கடந்துவிட்டன. ஏதோவொரு அழுத்தத்தின்பேரிலேயே ஊடகங்கள் மவுனமாக்கப்பட்டதாகத் தெரிகிறது.

எஸ்கேப்பான போராளீஸ்

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் சிலரிடம் பேசியபோது, “செய்தியை பூதாகரமாக்காமல், நடக்கும் நிகழ்வை அதற்கான முக்கியத்துவத்தோடு வெளியிட, ஒளிபரப்ப இவர்களை தடுப்பது யார்?, இவர்கள் நடந்துகொள்வதுதான் நடுநிலையா? இயேசு அழைக்கிறார் அமைப்பு தொடர்பான செய்தியை முழுமையாக வெளியிடவோ, ஒளிபரப்பவோ மாட்டோம் என்றால், இது கிறிஸ்தவர்களுக்கான ஊடகம் என வெளிப்படையாக அறிவித்துவிடலாமே.

யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துவிட்டதாக ஈஷா ஃபவுண்டேஷன் மீது சீரான இடைவெளியில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திவரும் ஈவெரா-வைப் பின்பற்றும் நடுநிலைப் போராளிகள், காருண்யா பல்கலைக்கழகம், யானை வலசை எனப்படும் எலிஃபென்ட் காரிடாரை ஆக்கிரமித்துள்ளது பற்றி ஏன் பேச மறுக்கிறார்கள்?

கோவை சிறுவாணி அருகே நொய்யல் ஆற்று வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள காருண்யா பல்கலைக்கழகமானது, நொய்யல் ஆற்றில் கழிவுகளை கலப்பதாக கிராம மக்கள் புகார் கூறுகின்றனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. சரியான கட்டமைப்பு இல்லை என்றுகூறி நவம்பர் 2017-ல் காருண்யா கல்விநிறுவனத்தை மூட யுஜிசி உத்தரவிட்டது. இவைகளை நடுநிலை போராளிகள் அறிவார்களா?

இதற்கெல்லாம் மேலாக, காருண்யா பல்கலைக்கழகத்தில் கல்விக்கட்டணம் அதிகம் வசூலிக்கிறார்கள், கேட்டால் மிரட்டுகிறார்கள் என்று கூறி மூன்று ஆண்டுகளுக்கு முன் மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை இரவோடு இரவாக போலீஸ் மூலம் தடியடி நடத்தி பால் தினகரன் நிர்வாகம் கலைத்தது அவர்களுக்கு தெரியாதா? இதுபோன்று வேறு கல்வி நிறுவனத்தில் நடந்திருந்தால் ஈவெரா போராளிகள் மவுனம் காத்திருப்பார்களா? என கொந்தளித்தார்கள்.

கிராமத்தின் பெயரையே மாற்றிய பால் தினகரன்

காருண்யா நிர்வாகத்தின் அத்துமீறல்களுக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் வழக்கறிஞர் பி.ரங்கராஜு ஆனந்த விகடன் இதழுக்கு அளித்திருக்கும் பேட்டியில், ‘‘மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், கடந்த 30 ஆண்டுகளாக காருண்யா நிர்வாகம் நடத்திவரும் அராஜகம் கொஞ்சநஞ்சமல்ல. நல்லூர் வயல் என்ற கிராமத்தின் பெயரைகாருண்யா நகர்என்று தங்கள் இஷ்டத்துக்கு மாற்றினார்கள். அதிகாரப்பூர்வ ஆவணங்களில் `காருண்யா நகர்என்ற பெயரே இல்லை.

காருண்யாவின் `பெதஸ்தாஜெபக்கூடம், மதமாற்றம் செய்யும் இடமாக இருக்கிறது. காருண்யா வருவதற்கு முன்பு அங்கு ஒரு தேவாலயம்கூடக் கிடையாது. இப்போது 15 தேவாலயங்கள் வந்துவிட்டன. இதைக் குறிப்பிட்டு `மேற்படி வழிபாட்டுத்தலங்களுக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது?’ என ஆர்.டி.ஐ மூலம் கேட்டேன். `பெதஸ்தா உட்பட எந்த மத வழிபாட்டுத் தலத்துக்கும் அனுமதியளிக்கப்படவில்லைஎன்று பதில் கிடைத்துள்ளது.

நில உச்சவரம்புச் சட்டத்துக்கு எதிராக, 750 ஏக்கர் விவசாய நிலத்தை இவர்கள் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். அதன்பேரில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. யானை வழித்தடங்களில் எத்தனை இடங்களில் இவர்கள் வேலி போட்டுவைத்திருக்கிறார்கள் என்பதை நேரில் சென்று ஆய்வு நடத்தினால் மட்டுமே அறிய முடியும்’’ என்று கூறியுள்ளார்.

காருண்யா மீது வருமான வரித்துறை ரெய்டு மட்டுமே இப்போது நடந்திருக்கிறது. அவர்கள் மீது முன்வைக்கப்படும் பல குற்றச்சாட்டுகளை, சர்ச்சை விவகாரங்களை அரசு கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. அவர்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளின்பேரிலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Author : K Prakash. Views are personal.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry