திரையரங்குகளில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது தற்கொலை முயற்சி என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரசிகர்களோடு ரசிகர்களாக விஜய்யும், சிம்புவும் முதல் நாள், முதல் ஷோ பார்ப்பார்களா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. தமிழகத்தில் நவம்பர் 10 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்தது. இதற்கிடையே பொங்கல் ரிலீசை முன்னிட்டு 100% இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டுமென திரைத்துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
சமீபத்தில் நடிகர் விஜய்யும், முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்து கோரிக்கை விடுத்தார். சிலம்பரசனும் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார். ஏனெனில் பொங்கல் விழாவின்போது, விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ மற்றும் சிம்பு நடிப்பில் ‘ஈஸ்வரன்’ திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
இந்நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அது தொடர்பான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.இதற்கு திரைத்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், எதிர்ப்பு குரலும் கிளம்பியுள்ளது.
நடிகர் அரவிந்த் சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்த நேரத்தில் 100 சதவீத பார்வையாளர்களைவிட 50 சதவீத பார்வையாளர்கள் இருப்பதே சிறந்தது” என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்தக் கருத்துக்கு ஆதரவாக பலர் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.
There are times when 50% is way better than a 100%. This is one of them.
— arvind swami (@thearvindswami) January 4, 2021
இதேபோல் மருத்துவர்கள் மத்தியிலும், திரையரங்குகளில் 100% இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக முகநூல் பக்கத்தில் கருத்து பதிவுட்டுள்ள புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ்,”கொரோனா பேரிடர் முடிவுக்கு வராத நிலையில், திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளித்திருப்பது தற்கொலை முயற்சி என விமர்சித்துள்ளார். கொள்கை முடிவு எடுப்பவர்களோ, ஹீரோக்களோ மக்களோடு அமர்ந்து திரைப்படத்தை பார்க்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Dear Actor Vijay sir, Silambarasan sir and the respected Govt. of TamilNadu,
I am tired. We are all tired. Thousands…
Posted by Aravinth Srinivas on Monday, January 4, 2021
உருமாறிய கொரோனா சென்னை உள்ளிட்ட நகரங்களில் பரவி வருவதாக கூறப்படும் நிலையில், புதிய தளர்வுக்கு நெட்டிசன்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விஜய்யோ அல்லது அவரது குடும்பத்தினரோ படத்தை தியேட்டரில் வந்து பார்ப்பார்களா? குறிப்பாக விஜய் படங்களுக்கு முதல் சில நாட்களில் அவரது ரசிகர்கள் கூட்டம், தியேட்டரில் அலை மோதும். அந்த நேரத்தில் எந்தவித கொரோனா முன்னெச்சரிக்கையும் பின்பற்றப்படாது. அப்படியான நேரத்தில் தொற்று பாதிப்பு இருக்கும் நபர் ஒருவரால், ஒரே நேரத்தில் பலருக்கு கொரோனா பரவாதா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
கொரோனா காலத்தில் தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் விமர்சித்து வந்த திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், இந்த விவகாரத்தில் மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்று, 100 சதவிகித இருக்கைகளை நிரப்பிக் கொள்ளும் உத்தரவுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. சினிமா ரசிகர்களின் வாக்கு வங்கியை மனதில் வைத்தே திமுக மவுனம் காப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry