
கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அதற்கு நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் உணவுகளைத் தேர்ந்தெடுப்பதும் முக்கியமானது.
`பழைய சாதம்’, `பழைய சோறு’, `பழஞ்சோறு’, `ஏழைகளின் உணவு’, ‘பழையது’, `ஐஸ் பிரியாணி’ என்றெல்லாம் அழைக்கப்படும் உணவு நம் முன்னோர்களுக்கு இன்றியமையாததாக இருந்தது. ஆனால், நாகரீக வளர்ச்சி இந்த மருந்துணவை தள்ளி வைக்க சொல்லிக்கொடுத்துள்ளது. பழைய சோறு ஒருபுறம் என்றால், சோற்றை ஊறவைத்திருக்கும் தண்ணீர் அத்தனை ருசியானது; எத்தனையோ மருத்துவக் குணங்களைக்கொண்டது.
கிராமங்களில், வெயிலில் வாடி வதங்கி வருபவர்கள், உரிமையோடு கேட்கும் பானம் அது! `கொஞ்சம் நீச்சத்தண்ணி இருந்தா குடு தாயி…’ என்பார்கள். நீச்சத்தண்ணி என்றால், `பழைய சோற்றுத் தண்ணீர்’, `நீராகாரம்’ என்று அர்த்தம். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியோடு, எனர்ஜியையும் சேர்த்துத் தரும் அற்புத ஆகாரம்தான், நீராகாரம்.
நம் முன்னோர்கள் பாரம்பரியமாக உட்கொண்டு வந்த பழைய சோறு, நீராகாரம் ஆகியவை நாம் நினைத்திராத அளவுக்கு ஏராளமான சத்துக்களை உள்ளடக்கியது. இந்த கஞ்சியானது முந்தைய நாள் சமைத்த சாதத்தில் நீரை ஊற்றி, மறுநாள் காலையில் அந்த சாதத்துடன் தயிர், வெங்காயம் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இந்த பழைய சாதத்தில் பி வைட்டமின்கள், இரும்புச்சத்து, கனிமச்சத்து போன்றவை அதிகம் உள்ளன. இந்த கஞ்சி உடலுக்கு ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் அளிப்பதோடு, உடலுக்கு பல நன்மைகளையும் வழங்குகிறது.
1. செரிமானம் மேம்படும்
பழைய சாதத்தில் நார்ச்சத்து மற்றும் புரோபயோடிக் அதிகமாக உள்ளன. இவை ஃபுட் பாய்சனிங், வயிற்றுப்போக்கு, அஜீரண கோளாறு போன்றவை ஏற்படுவதைத் தடுக்கும். அதுவும் கஞ்சியில் உள்ள ஸ்டார்ச் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியைத் தூண்டி, ஆரோக்கியமான குடலியக்கத்தை ஊக்குவிக்கும். மேலும் இது அசிடிட்டி, வயிற்று உப்புசம் போன்றவற்றைத் தடுக்கும்.
2. ஆற்றல் மேம்படும்
பழைய கஞ்சியின் நீர் உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும். இதில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இது உடலுக்கு புத்துணர்ச்சி அளித்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மிதமான அளவில் இருப்பதால், உடலினுள் உள்ள அழற்சியைக் குறைத்து, நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளைத் தடுக்கும்.
3. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
பழைய சாதம் மற்றும் நீராகாரத்தில் பி வைட்டமின்கள், மக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை உள்ளன. இவை ஆற்றல் உற்பத்திக்கு இன்றியமையாதவை மற்றும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்துக் கொள்ளவும் அவசியமானவை. அதுவும் கோடைக்காலத்தில் சந்திக்கும் பல ஆரோக்கிய பிரச்சனைகளை தடுக்கவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கஞ்சியை தினமும் குடித்து வாருங்கள்.
4. நீரிழப்பைத் தடுக்கும்
கோடைக்காலத்தில் பழஞ்சோற்றை தினமும் குடித்து வரும் போது, அது உடலை நீண்ட நேரம் நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ளவும், வெப்ப வாதத்தில் இருந்து தடுக்கவும் உதவுகிறது. கோடையில் நீராகாரத்தைக் குடிக்கும் போது, அது வியர்வையினால் உடல் வறண்டு போவதைத் தடுக்கும்.
5. முடி வளர்ச்சி அதிகரிக்கும்
பழைய சாதத்தில் அமினோ அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் கனிமச்சத்துக்கள் உள்ளன. இவை தலைமுடியை மென்மையாகவும், வலுவாகவும், பட்டுப்போன்றும் வைத்துக் கொள்ள உதவும் மற்றும் முடியை வேகமாகவும் வளர உதவும். கஞ்சியில் உள்ள சத்துக்கள், மயிர்கால்கள் முதல் முடியின் முனை வரை வலுப்படுத்தி, முடி உடைவது, முடி உதிர்வது மற்றும் முடிப்பிளவு ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. இப்படி இந்த கஞ்சியை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், தலைமுடியின் வளர்ச்சியில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
6. சரும ஆரோக்கியம் மேம்படும்
பழைய சோற்றில் வைட்டமின் பி, வைட்டமின் ஈ மற்றும் பெருலிக் அமிலம் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளன. இவை பொலிவிழந்த சருமத்தை பொலிவாக்குவதோடு, சருமத்தின் நிறத்தை மேம்படுத்தவும், சரும அழகை மேம்படுத்தவும் உதவுகின்றன. அதுவும் கோடையில் பழைய சாதத்தை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும். முக்கியமாக இது சூரிய கதிர்களால் சருமத்தில் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது. எனவே நீங்கள் அழகாக ஜொலிக்க விரும்பினால், பழஞ்சோறு, நீராகரத்தை தினமும் குடித்து வாருங்கள்.
அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் பட்டியலிட்டிருக்கும் பழைய சோற்றின் நன்மைகள்:
- உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இதில் இருக்கின்றன.
- காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடலில் அதிகமாக இருக்கும் உடல் உஷ்ணத்தைப் போக்கும்.
- இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்; உடல் சோர்வை விரட்டும்.
- ரத்த அழுத்தம் சீராகும்; உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தணியச்செய்யும்.
- முழு நாளைக்கும் நம்மை ஃப்ரெஷ்ஷாக உணரவைக்கும்.
- ஒவ்வாமைப் பிரச்னைகளுக்கும், தோல் தொடர்பான வியாதிகளுக்கும் நல்ல தீர்வுதரும்.
- எல்லாவிதமான வயிற்றுப் புண்களுக்கும் பழைய சோறு வரப்பிரசாதம்.
- புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும்.
- வனப்பைத் தரும்; இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும்.
எல்லா உணவுக்கும் ஓர் கால அளவு உண்டு. அது, பழைய சோற்றுக்கும் பொருந்தும். நீரூற்றிய 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிடுவதுதான் ஆரோக்கியம் என்கிறார்கள் மருத்துவர்கள். பழைய சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும், உடல்பருமன் உண்டாகும் என்பதெல்லாம் உண்மையல்ல. சர்க்கரைநோயாளிகள் மட்டும் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு அளவோடு சாப்பிடலாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry