‘கேரளாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ அமைப்புக்கு, சில ஆண்டுகளில் மட்டும், 100 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை கிடைத்துள்ளது. என, கேரள நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவே இவ்வளவு தொகை வரப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பின் மாணவர் பிரிவின் தலைவரான, கே.ஏ.ராவுப் ஷரீப், பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காவலை நீட்டிக்கக் கோரி, கொச்சியில் உள்ள பண மோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. அது ஏற்கப்பட்டு, மேலும், மூன்று நாட்கள் அவரை விசாரிக்க, அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள மனுவில், ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ பல்வேறு பண மோசடி வழக்குகளில் ஈடுபட்டுள்ளது. 2013-ல் இருந்து இந்த அமைப்புக்கு, வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் வந்துள்ளன. அது, 2014ல் அதிகரித்துள்ளது. இதுவரை, 100 கோடி ரூபாய்க்கு மேல், இந்த அமைப்பின் வங்கிக் கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அதில் பெரும்பாலும், ரொக்கமாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ அமைப்புக்கென வங்கிக் கணக்கு இல்லாத நிலையில், அந்த அமைப்புக்கான நன்கொடைகள், முதலீடுகள் அனைத்தும் ராவுப் ஷரீப் வங்கிக் கணக்குகளிலேயே செலுத்தப்பட்டுள்ளது. இவை ஹவாலா பணம் என தெரிகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான டெல்லி போராட்டத்துக்கு, இந்த அமைப்பு, பண உதவி செய்துள்ளது. டெல்லியில் கடந்தாண்டு பிப்ரவரியில் நடந்த வன்முறையை இந்த அமைப்பு தூண்டிவிட்டுள்ளது. சமீபத்தில், பெங்களூரில் நடந்த வன்முறைக்கும், இந்த அமைப்பே காரணம். இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசவிரோத நடவடிக்கைகளில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. அத்துடன் பல பண மோசடி வழக்குகளையும் விசாரித்துவருகிறோம். இவ்வாறு, அதில்கூறப்பட்டுள்ளது.
![](https://velsmedia.com/wp-content/uploads/2020/12/zakir_naik_0-400x300.jpg)
‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ அமைப்பு, ரோஹிங்யா முஸ்லிம்களுடன் இணைந்து இந்தியாவில் அடுத்த மாதம் 26-ந் தேதி பயங்கரவாத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதை உளவு அமைப்பு அண்மையில் கண்டுபிடித்தது. டெல்லி, அயோத்தி, புத்கயா, ஸ்ரீநகர், சண்டிகர், மேற்குவங்கத்தின் முக்கிய நகரங்களில் குண்டுவெடிப்பை நிகழ்த்துவது இவர்களது இலக்காக இருந்துள்ளது. இதற்காக மதபோதகர் ஜாகிர் நாயக், மலேசியாவைச் சேர்ந்த ரோஹிங்யா முஸ்லிம் தலைவர் முஹமது நஸீர், ஆகியோர் ஒன்றரை கோடி ரூபாய் அளவுக்கு நிதி உதவிகள் செய்ததையும் ரா உளவு அமைப்பு உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry