சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய, எந்தச் சான்றுகள் தேவை, எது தேவையில்லை என்பதை தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயிலில், சில மாதங்களாக நடை திறக்கப்படும்போது தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் பக்தர்கள் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும், இது தவிர 2 டோஸ் கொரோனா தடுப்பூசி அல்லது ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன.
கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கேரள அரசு தீர்மானித்தது. இதன்படி தினசரி 15 ஆயிரம் பக்தர்கள் என்ற கட்டுப்பாடு கடந்த மார்ச் மாதம் நீக்கப்பட்டது. இந்த நிலையில், சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவஸம் போர்டு தலைவர் அனந்தகோபன், ‘மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வராத பட்சத்தில், முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசன அனுமதி வழங்கப்படும். நிலக்கல் உள்பட முக்கிய இடங்களில் உடனடி தரிசன முன்பதிவு செய்ய கூடுதல் வசதிகள் செய்யப்படும். ஆதார் உள்பட ஏதாவது ஒரு அடையாள அட்டையை பயன்படுத்தி உடனடி தரிசன அனுமதிக்கு முன்பதிவு செய்யலாம். இனி கொரோனா தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை.’ என்றார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry