
யானைகள் அறிவில் சிறந்தவை என்பது உலகறிந்த உண்மை. அவற்றின் ஆழமான குடும்ப பந்தங்கள், கருவிகளை பயன்படுத்தும் திறன் மற்றும் உணர்வுபூர்வமான அறிவு ஆகியவை மனிதர்களை தலைமுறை தலைமுறையாக கவர்ந்துள்ளன. விலங்கு உலகின் மிகவும் போற்றப்படும் உயிரினங்களில் ஒன்றாக இருந்தாலும், அவற்றின் மூளைகள் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை.

அண்மையில், Humboldt-Universität zu Berlin உள்ள Bernstein Center for Computational Neuroscience மற்றும் Leibniz Institute for Zoo and Wildlife Research ஆராய்ச்சியாளர்கள் யானைகளின் மூளையை கூர்ந்து ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில், ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகளின் மூளைகளை வெட்டி, MRI ஸ்கேன் செய்து, முந்தைய ஆய்வுகளின் தரவுகளை வைத்து ஒப்பிட்டு ஆராய்ந்தனர். இந்த ஆய்வின் முடிவுகள் இரண்டு இனங்களுக்கிடையேயான வேறுபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. மேலும் மூளையின் அளவுக்கும் நடத்தைக்கும் உள்ள தொடர்புகள் பற்றிய புதிய கேள்விகளை எழுப்புகின்றன.
ஆச்சரியமான அளவு வேறுபாடுகள்
பொதுவாக, ஆசிய யானைகள் ஆப்பிரிக்க யானைகளை விட சிறியவை. ஆசிய யானைகளின் காதுகள் சிறியதாக இருக்கும், ஆப்பிரிக்க யானைகளுக்கு இரண்டு “துதிக்கை விரல்கள்” இருக்கும் நிலையில், ஆசிய யானைகளுக்கு ஒரு “துதிக்கை விரல்” மட்டுமே இருக்கும். மேலும் பெரும்பாலான பெண் யானைகளுக்கு தந்தம் வளர்வதில்லை. ஆனால் அவற்றின் மண்டை ஓடுகளுக்குள், விஷயங்கள் சுவாரஸ்யமாகின்றன.
ஆராய்ச்சியாளர்கள், வயது வந்த பெண் ஆசிய யானைகளின் மூளை சராசரியாக 5 கிலோ 300 கிராம் எடையுள்ளதாக கண்டறிந்துள்ளனர். அதே சமயம், ஆப்பிரிக்க பெண் யானைகளின் மூளை சராசரியாக 4 கிலோ 400 கிராம் மட்டுமே உள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு.

ஆண் ஆசிய யானைகள் பற்றிய தரவுகள் குறைவாக இருந்தாலும், இரண்டு இன ஆண் யானைகளுக்கும் பொதுவாக அதிக எடையுள்ள மூளைகள் உள்ளன என்பது தெளிவாகிறது. இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், ஆப்பிரிக்க யானைகளின் சிறுமூளை (cerebellum), மொத்த மூளை எடையில் சுமார் 22% ஆகும், அதே சமயம் ஆசிய யானைகளில் இது 19% ஆக உள்ளது.
யானைகளின் விரிவடையும் அறிவு
யானைகளின் மூளை பிறப்பிலிருந்து வயது வரும் வரை மூன்று மடங்கு அதிகமாக வளர்கிறது என்று இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது. மனிதர்களைத் தவிர வேறு எந்த பாலூட்டியிலும் இவ்வளவு பெரிய வளர்ச்சி இல்லை. ஏன் இந்த அதிகப்படியான வளர்ச்சி? சமூக கற்றலே இதற்கு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
“சமூக காரணிகள் மற்றும் கற்றல் செயல்முறைகள் பிறப்பிற்குப் பிறகு மூளையின் வலுவான வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம். ஏனெனில் யானைகள் சிக்கலான சமூக கட்டமைப்பில் வாழ்கின்றன மற்றும் சிறந்த நினைவாற்றலைக் கொண்டுள்ளன,” என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
வயது வந்த யானைகளின் அனுபவம் மற்றும் திரட்டப்பட்ட அறிவு, குறிப்பாக பெண் யானைகளின் தலைமை பண்பு, யானைகளின் குழு நடத்தைக்கு மையமானது. மேலும், இளம் யானைகள் குழந்தைப் பருவம் மற்றும் பருவமடையும் காலம் வரை மிக நெருக்கமாக கவனித்துக் கொள்ளப்படுகின்றன.

இரண்டு யானைகள், இரண்டு மூளைகள்
இரண்டு இன யானைகளும் மனிதர்களிடம் வித்தியாசமாக நடந்து கொள்கின்றன. ஆசிய யானைகள் பல நூற்றாண்டுகளாக மனிதர்களுடன் வேலை செய்து வருகின்றன, பெரும்பாலும் பழக்கப்படுத்தப்பட்ட அல்லது அரை பழக்கப்படுத்தப்பட்டதாக இவை ஈடுபடுத்தப்படுகின்றன. ஆனால் ஆப்பிரிக்க யானைகள் மனிதர்களின் வருகைக்கு அரிதாகவே இணங்குகின்றன. அவற்றை பழக்கப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
மூளையின் எடை வேறுபாடு தான் இந்த இரண்டு யானை இனங்களுக்கிடையேயான மிக முக்கியமான வேறுபாடு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் மூலம் ஆசிய மற்றும் ஆப்பிரிக்க யானைகளின் முக்கியமான நடத்தை வேறுபாடுகளை விளக்க முடியும்.


ஆப்பிரிக்க யானைகளுடைய துதிக்கையின் முனையில் விரல் போன்ற நீட்சிகள் உள்ளன. அவை துதிக்கையில் உதடுகளாகவும் செயல்படுகின்றன. ஆப்பிரிக்க யானைகளின் துதிக்கை, துளையிடும் திறனைப் பெற, மிகவும் உணர்திறன் வாய்ந்த விரல் போன்ற தசை அமைப்புடன் இருக்கும். ஆசிய யானைகளின் துதிக்கையில் ஒரு விரல் போன்ற தசை நீட்சி மட்டுமே இருக்கும்.
விஞ்ஞானிகள் இந்த சிக்கலை பெரிய சிறுமூளை மற்றும் துதிக்கை இயக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட அதிகமான நரம்புகளுடன் தொடர்புபடுத்துகின்றனர். “இரண்டு துதிக்கை விரல்களால், ஆப்பிரிக்க யானைகள் அதிகப்படியான அசைவுகளை செய்ய முடியும், இது மூளையில் உள்ள துதிக்கையின் கட்டுப்பாட்டு மையத்தில் அதிக எண்ணிக்கையிலான நரம்புகளில் பிரதிபலிக்கிறது.
Also Read : இந்த ஒரு உயிரினத்திற்கு மட்டும் புற்றுநோய் வராது… என்ன காரணம் தெரியுமா..?
அறிவியலின் மூலம் யானைகளை காப்பாற்றுவோம்
யானைகளின் மூளையைப் புரிந்துகொள்வது ஒரு ஆர்வத்தை பூர்த்தி செய்வது மட்டுமல்ல. இது விஞ்ஞானிகளுக்கு அறிவுத்திறன், நினைவாற்றல் மற்றும் சமூக நடத்தை பற்றி மேலும் அறிய உதவுகிறது. இந்த விலங்குகள் நம்மோடு சில குணாதிசயங்களை பகிர்ந்து கொள்கின்றன. அவை துக்கப்படுகின்றன, ஒத்துழைக்கின்றன, மேலும் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்கின்றன.
அவற்றின் மூளைகள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் இனங்களுக்கு இடையில் வேறுபடுகின்றன என்பதை ஆராய்வதன் மூலம், இந்த திறன்கள் எப்படி உள்ளன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து வருகின்றனர். இந்த ஆய்வு, பாதுகாப்பு பற்றிய முக்கியமான கேள்விகளையும் எழுப்புகிறது. மனித செயல்பாடுகள் காட்டு யானைகளின் எண்ணிக்கையை தொடர்ந்து அச்சுறுத்தும் நிலையில், இந்த விலங்குகள் எப்படி சிந்திக்கின்றன மற்றும் செயல்படுகின்றன என்பதைப் பற்றி அறிவது சிறந்த பாதுகாப்பு உத்திகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும். யானைகள் தொடர்ந்து வாழ வேண்டுமென்றால், அவற்றின் உள் மற்றும் வெளிப்புறத் தன்மைகளை நாம் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry