சசிகலாவுக்கு பெரும் பின்னடைவு! பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என தீர்ப்பு!

0
117

அ.தி.மு.க பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது தொடர்பாக சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், சசிகலாவை அ.தி.மு.க நீக்கியது செல்லும் என உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக 2016-ம் ஆண்டு சசிகலா பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், முதலமைச்சராக பதவியேற்க சசிகலா ஆயத்தமாகிய நிலையில், ஓபிஎஸ் திடீரென தர்மயுத்தம் என்ற பெயரில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனிடையே, 2017-ம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். முன்னதாக, டி.டி.வி.தினகரனை துணை பொதுச் செயலாளராக சசிகலா நியமித்தார்.

இந்த சூழ்நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் சேர்ந்து சசிகலா, டி.டி.வி.தினகரனுக்கு எதிராக களமிறங்கினர். கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக் குழு கூட்டம் மீண்டும் கூட்டப்பட்டது. அப்போது, பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவையும், துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து டி.டி.வி.தினகரனையும் நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி, சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்த ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பு, சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த மனுக்கள் மீதான விவாதங்கள் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 8-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். ஆனால், அன்றைய தினம் தீர்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி, சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது செல்லும் என அறிவித்ததோடு, சசிகலா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து சசிகலா தரப்பு மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு முன்னர்வரை, சசிகலா தரப்பிலிருந்து வெளிவரும் அனைத்து அறிக்கைகளிலும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா என்றே குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த சூழலில், தீர்ப்பு அவருக்கு எதிராக வந்திருப்பது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry