
உடல் பருமனாக இருப்பவர்களுக்கே நீரிழிவு நோய் வரும் என்ற எண்ணம் பலரது மனதிலும் உள்ளது. ஆனால் மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கும் நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய் பாதிக்கிறது. வழக்கமாக நாம் அறிந்திருப்பது டைப்-1, டைப்-2 வகை நீரிழிவு நோய்கள்தான்.
ஆனால் மெலிந்த தேகம் கொண்டவர்கள் அல்லது குறைவான பி.எம்.ஐ. கொண்டவர்கள் பாதிக்கப்படுவது இந்த இரண்டு வகை நீரிழிவு நோயால் அல்ல என்று பாங்காக்கில் கடந்த 7ம் தேதி தொடங்கி 10ந் தேதி நிறைவுற்ற நீரிழிவுக்கான சர்வதேச மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : ஒரு டம்ளர் சுடுநீரில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
பருமனாக இல்லாத, அதே நேரத்தில் போதுமான அளவு இன்சுலின் சுரக்காத நபர்களிடம் ஏற்படும் நீரிழிவு நோயை டைப்-5 என்று வகைப்படுத்தி, அதற்கான ஆராய்ச்சியை தீவிரப்படுத்த வேண்டும் என அறிவித்துள்ளார் பேராசிரியர் மருத்துவர் பீட்டர் ஸ்வார்ஸ்(Professor Dr. Peter Schwarz). அவர் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் தலைவராவார். டைப்-5 நீரிழிவு நோய் குறித்தும், அதனை கட்டுக்குள் கொண்டு வர எத்தகைய நடவடிக்கைகள் தேவை என்பதை ஆய்வு செய்யவும் சர்வதேச அளவில் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

1955-ல் கண்டுபிடிப்பு
குறைவான பி.எம்.ஐ. கொண்ட மக்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதை 1955-ஆம் ஆண்டில் கண்டுபிடித்த ஹூக் – ஜோன்ஸ், ஜமைக்காவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நடத்திய ஆராய்ச்சி முடிவுகளில் அவர்களுக்கு டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் இல்லை என்பதை உறுதி செய்தார்.
(BMI – Body Mass Index. பெரியவர்களுக்கான சாதாரண பிஎம்ஐ பொதுவாக 18.5 முதல் 24.9 கிலோ / மீ² வரை கருதப்படுகிறது. இந்த வரம்பு பெரும்பாலும் “ஆரோக்கியமான எடை” என்று குறிப்பிடப்படுகிறது. 18.5 க்குக் கீழே உள்ள பிஎம்ஐ, எடை குறைவைக் குறிக்கிறது, அதே நேரத்தில் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ அதிக எடை அல்லது உடல் பருமனைக் குறிக்கிறது.)
Also Read : வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி… எது பெஸ்ட்? நீரிழிவு நோயாளிகள் கருப்பட்டி எடுக்கலாமா?
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், கொரியா, தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் எத்தியோபியா, நைஜீரியா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை நீரிழிவு நோய் இருப்பது அப்போது கண்டறியப்பட்டது. இந்த வகை நீரிழிவு நோய் 1985-ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது. அதனை ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோய் (malnutrition-related diabetes mellitus (MRDM)) என்று உலக சுகாதார அமைப்பு வகைப்படுத்தியது.

டைப்-5 நீரிழிவு நோய் என்றால் என்ன?
19க்குக் குறைந்த பி.எம்.ஐ. கொண்டிருக்கும் மக்களிடம் காணப்படும் நீரிழிவு நோயே, டைப் – 5 வகையைச் சேர்ந்தது. உடல் பருமன் அதிகமாக இருக்கும் டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலின் சுரந்தாலும், ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள அவர்களுக்கு அந்த இன்சுலின் சுரப்பு போதுமானதாக இருக்காது. அவர்களின் உடலில் இன்சுலின் எதிர்ப்பு அதிகப்படியாக இருக்கும்.
ஆனால், டைப்-5 நீரிழிவு நோயானது உடல் பருமன் குறைவாக உள்ள, அதாவது 19க்குக் குறைந்த பி.எம்.ஐ. கொண்ட மக்களிடம் ஏற்படக்கூடியது. இவர்களின் உடலில் இன்சுலின் பற்றாக்குறை இருக்கும். இவர்கள் மாத்திரைகள் மூலமாகவே சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க இயலும்.
சிறுவயதில் இருந்தே ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்பட்டவர்கள், கருவில் இருக்கும் போதே குறைவான பிஎம்ஐ கொண்ட பிரிவினர், 30 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு டைப்-5 வகை நீரிழிவு நோய் ஏற்படலாம். அதேபோல், கட்டுப்படுத்த இயலாத அளவுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு இருந்தும் கேட்டோனூரியா அல்லது கேட்டோசிஸ் குறைபாடு உள்ளவர்கள், நாள் ஒன்றுக்கு அதிக அளவு இன்சுலின் தேவைப்படும் நபர்களும் டைப்-5 வகையின் கீழ் வருவார்கள்.
Also Read : நீரிழிவு நோயாளிகள் சுகர் ஃப்ரீ எடுத்துக்கொள்ளலாமா? கூடாதா? ஆராய்ச்சி முடிவுகள் சொல்வதென்ன?
வேலூர் CMCல் நடத்தப்பட்ட ஆராய்ச்சி
2022-ஆம் ஆண்டு வேலூரில் உள்ள கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், குறைவான உடல் பருமன் கொண்ட, ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களிடம் காணப்படும் நீரிழிவு நோயானது டைப்-1, டைப்-2 வகையைச் சார்ந்தது இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
1955-ல் முதன் முறையாக கண்டறியப்பட்ட, ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோயாக (MRDM) இது இருக்கலாம் என்பதையும் அவர்கள் ஆராய்ச்சி முடிவில் உறுதி செய்தனர். இது தொடர்பாக அதே ஆண்டு “An Atypical Form of Diabetes Among Individuals With Low BMI,” என்ற தலைப்பில் ஆராய்ச்சி முடிவுகளையும் வெளியிட்டனர்.
Source : An Atypical Form of Diabetes Among Individuals With Low BMI
அதன்படி, பின்தங்கிய சமூக பொருளாதார பின்னணியில் இருந்து, குறைவாக உடல் பருமன் கொண்ட 73 இந்திய ஆண்களிடம் சோதனை செய்யப்பட்டது. அதில் 20 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது என்று கண்டறியப்பட்டது.
வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி உட்சுரப்பியல், நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றத்துறையில் பணியாற்றி வரும் மூத்த பேராசிரியரும் மருத்துவருமான நிஹல் தாமஸ், அமெரிக்காவின் நியூயார்க்கில் அமைந்திருக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் மெரிடித் ஹாகின்ஸும், இதர துறை சார் நிபுணர்களும் சேர்ந்து இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
“இது தொடர்பான ஆராய்ச்சிகளை நடத்தி, அவர்களுக்கென பிரத்யேக சிகிச்சை வழங்க வேண்டிய தேவையை வலியுறுத்தும் வகையில் பிரகடனம் ஒன்று கடந்த ஜனவரி மாதம் வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற ‘வேலூர் எண்டோகிரைனாலஜி சர்வதேச மாநாட்டில்’ அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே சமீபத்திய அறிவிப்பு பாங்காங்கில் வெளியிடப்பட்டுள்ளது.
உடல் மெலிந்த நபர்களுக்கு நீரிழிவு நோய் வராது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. ஆனால் அவர்களுக்கும் நீரிழிவு நோய் ஏற்படும். டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் பொதுவான சிகிச்சை முறை அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்காது. எனவே டைப்-5 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சிகிச்சை முறையை உருவாக்க இத்தகைய ஆராய்ச்சிகளை தொடர்வது அவசியமாகிறது.
Image Source : Getty Image. With Input BBC.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry