காவிரி நீரை பெறுவதில் தமிழக அரசு மெத்தனம்! கருகும் அபாயத்தில் 5 லட்சம் ஏக்கர் பயிர்கள்! வேதனையில் டெல்டா விவசாயிகள்!

0
35
Karnataka is not in a position to release water to Tamil Nadu - Karnataka Agriculture Minister

தமிழ்நாட்டில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வருவதால், இந்த ஆண்டு நெல் பயிர்களை காப்பாற்ற முடியுமா என காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

காவிரி டெல்டா பகுதி என்பது காவிரி நீர் கடலில் கடக்கும் முன் விரிந்து பல கிளைகளாகச் செல்லும் பகுதி. இப்பகுதி விவசாயத்துக்கு மிகவும் உகந்தது. தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை ஆகியவை காவிரி டெல்டா மாவட்டங்களாகும்.

ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலம் குறுவை சாகுபடிக்கான காலம். தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்குப் பருவமழை தான் அதிக மழை தருவதாகும். எனவே குறுவை காலத்தில் குறுகிய கால பயிர்கள் விளைவிக்கப்படும். இவை 100-120 நாட்களில் விளையக்கூடிய பயிர்கள்.

Also Read : தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை! ஈபிஎஸ் திட்டவட்டம்!

கடந்த ஆண்டு 4.75 லட்சம் ஏக்கர் நிலத்தில் குறுவை பயிர்கள் பயிரிடப்பட்டன. இந்த ஆண்டு 5 லட்சம் ஏக்கர் வரை பயிரிடப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்கள், குறுவை சாகுபடிக்கு கர்நாடகாவின் காவிரி நீரையும், மழையின் மூலம் மேட்டூர் அணைக்கு கிடைக்கும் நீரை மட்டுமே நம்பி உள்ளன.
ஆனால், கர்நாடகாவிலிருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீர் முறையாகக் கிடைக்காததால் குறுவை சாகுபடியைத் தொடங்கிவிட்டு போதிய நீர் இல்லாமல் காவிரி டெல்டா விவசாயிகள் தவிக்கின்றனர்.

டெல்டா மாவட்ட பாசனத்துக்காக சேலம் மாவட்டத்தில் உள்ள 120 அடி ஆழம் கொண்ட மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். அணையில் தற்போது 73.9 அடி வரை நீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நேரத்தில் அணை முழு கொள்ளளவு நிரம்பியிருந்தது.

டெல்டா விவசாயிகளுக்கு தற்போது 10 ஆயிரம் கன அடி நீர் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படுகிறது. இதே அளவில் திறந்து விடப்பட்டால் ஆகஸ்ட் முதல் வாரம் வரை மட்டுமே நீர் இருக்கும் என கணிக்கப்படுகிறது. ஆனால் திறந்துவிடப்படும் நீர் போதுமானதாக இல்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

குறுவை சாகுபடிக்கு ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். கடந்த ஆண்டு நீர் வரத்து அதிகமாக இருந்ததால் மே 24ஆம் தேதியே தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த ஆண்டு வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தற்போது கடைமடை வரை தண்ணீர் சென்றடையவில்லை. கர்நாடகாவிலிருந்து கிடைக்க வேண்டிய காவிரி நீர் கிடைக்கவில்லை.

Also Read : பொது சிவில் சட்டத்தால் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்? மத்திய அரசின் முயற்சி பற்றிய விரிவான பார்வை! #UniformCivilCode

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், “தண்ணீர் கிடைக்கும் என நம்பி குறுவை சாகுபடியை தொடங்கிய விவசாயிகள் தற்போது பயிர்களை காப்பாற்ற முடியுமா இல்லையா என தெரியாமல் தவித்து வருகின்றனர்.

பி.ஆர். பாண்டியன்

ஐந்து லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி நிலத்தில், 1.5 லட்சம் ஏக்கர் அளவுக்கு மோட்டார் மூலம் பாசன் செய்யப்படுகிறது. மீதமுள்ள சுமார் 3.5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யும் விவசாயிகள் காவிரி நீரை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். மேட்டூர் அணையிலிருந்து எப்போதும் போல் தண்ணீர் திறந்து விடப்பட்டதை நம்பி, விவசாயிகள் குறுவை சாகுபடியை தொடங்கிவிட்டனர். ஆனால் தற்போது நீர் வரத்து போதுமானதாக இல்லை.” என்று கூறியுள்ளார்.

கர்நாடகாவில் தென்மேற்குப் பருவ மழை தாமதமாகத் தொடங்கியதால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தர முடியவில்லை என கர்நாடகா கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று விவசாய சங்கங்கள் கூறுகின்றன. காவிரி நீரை பெற்று தர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வரும் 25 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களில் விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளன.

Also Read: சாதி வெறியும், ஊழலும்தான் எதிர்க்கட்சிகளின் அடையாளம்! திமுக மீது பிரதமர் மோடி கடும் விமர்சனம்!

நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் அந்த நேரத்தில் நீரை எப்படி பகிர்ந்து கொள்ள வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை வாரியம் கூறியுள்ளது. பற்றாக்குறை காலங்களில் 60% நீரை தமிழ்நாட்டுக்கும், 40% நீரை கர்நாடகாவுக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதை விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

காவிரி, பெண்ணாறு என இரண்டு ஆறுகளின் மூலம் குறுவை சாகுபடிக்கு நீர் விடுவிக்கப்படும். கடந்த ஆண்டு இரண்டு ஆறுகளிலும் சமமாக நீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இப்போது ஐந்து நாட்கள் பெண்ணாற்றிலும், ஐந்து நாட்கள் காவிரியிலும் திறந்து விடுகிறார்கள். இதனால் தண்ணீர் இல்லாமல் ஐந்து நாட்கள் நிலங்கள் காய்ந்து விடுகின்றன.

இப்படியே செய்தால், பயிர்களை வட கிழக்குப் பருவ மழை தொடங்கும் போது தான் அறுவடை செய்ய முடியும். அப்போது ஒரு நாள் கன மழை பெய்தால் கூட பயிர்கள் நாசமாகிவிடும்,” என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழ்நாடு அரசு பெயரளவுக்கு நடவடிக்கை எடுப்பதாக காட்டிக்கொள்ளாமல், மெத்தனமாக இல்லாமல், காவிரி நீரை பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக இருக்கிறது.

With Inputs BBC Tamil

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry