உளவுத்துறையில் சாதியவாதிகள்! உள்நோக்கத்துடன் செயல்படும் ‘தி ஹிந்து’! தோழமை சுட்டும் திருமா!

0
522

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்2 படித்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி மற்றும் முதல்வர் சிவசங்கரன், இரண்டு ஆசிரியைகள் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டது. அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாணவி பள்ளிக் கட்டடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், மகளின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, பெற்றோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த 17ம் தேதி அன்று பள்ளியில் நடந்த போரட்டத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. பிரிவு போலீஸாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினரும், சமூக வலைதளங்கள் மூலம் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் பற்றி சைபர் க்ரைம் போலீஸாரும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read : திமுக அரசு கிறிஸ்தவர்களால் உருவாக்கப்பட்டது! திராவிட மாடலுக்கு மூல காரணமே பாதிரியார்கள்தான்!

இந்நிலையில், ’தி ஹிந்து’ ஆங்கில நாளேட்டில் நேற்று வெளியானதொரு செய்தியில், ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்களால் பள்ளி சேதமடைந்ததாகவும், பேருந்துகள் எரிக்கப்பட்டதாகவும் பள்ளி தாளாளர் கூறியதாக மூத்த போலீஸ் அதிகாரிகளுக்கு மாநில உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதை மேற்கோள்காட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ள திருமாவளவன், ”மாணவி கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதிலிருந்து திசை திருப்பி, பள்ளியைத் தாக்கியது யார்? கொளுத்தியது யார்? என்று விவாதத்தை மடைமாற்றிவிட்டு, மாணவியின் குடும்பத்திற்கு எதிராகச் சிலர் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர்.
அந்தச் சதிக்கும்பலுக்குத் துணைபோகும் வகையில் தற்போது உளவுத்துறையின் நடவடிக்கைகளும் அமைவதாக உள்ளது. ஆங்கில நாளேட்டுச் செய்தி உள்நோக்கத்துடன் கூடியதாக உள்ளது.

Also Read : திருவள்ளூர் அருகே விடுதியில் மாணவி தற்கொலை! அடுத்தடுத்த தற்கொலைகளால் அதிர்ச்சி!

உளவுத் துறையிலுள்ள சாதிய வாதிகளின் சதியாகவே தெரிகிறது. இம்மாதிரியான தகவலை ஊடகத்திற்கு அளித்த உளவுத்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரசுக்கு அளித்த இரகசிய தகவல்களை ஊடகத்தில் கசியவிடுவது ஏன்? இத்தகவலே தவறானது. இது ஆதிதிராவிடர் மற்றும் விசிகவுக்கு எதிரான அரசியல் சதியாகும். பள்ளியைக் கொளுத்தியதும் ஆதி திராவிடருக்கெதிராக சாதிய வன்மத்தைக் கக்குவதும் ஸ்ரீமதியின் சாவுக்குக் காரணமானவர்களே என்பதை அறியமுடிகிறது”. இவ்வாறு தொல். திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

உளவுத்துறையில் சாதியவாதிகள் இருப்பதாகவும், செய்தி வெளியிட்ட ‘தி ஹிந்து’ நாளிதழையும் விமர்சிக்கும் திருமாவளவன், உயர் அதிகாரிகளையோ, காவல்துறை இலாகாவுக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் பற்றியோ எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த ஆட்சியில் பட்டியலின மக்கள் பாதிக்கப்பட்டாலும், திருமாவளவன் தோழமை மட்டுமே சுட்டுவார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

உளவுத்துறை தகவல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, தி ஹிந்து நாளிதழில் வெளிவந்த செய்தி தமிழக காவல்துறையினரின் செயல்பாட்டையும் உளவுத்துறையின் இயலாமையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. கலவரத்துக்குக் காரணமான அனைவரும் பட்டியலினத்தைச் சார்ந்தோர் என்ற முடிவுக்கு உளவுத்துறை எவ்வாறு வந்தது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry