
தமிழக அரசியல் களத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதிய விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், சென்னையின் மையப்பகுதியில் அரங்கேறிய ஒரு சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற ஒரு அரசு நிகழ்ச்சியில், திரைப் பிரபலமும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யின் படம் பொறிக்கப்பட்ட கைக்குட்டையை சில மாணவர்கள் உயர்த்திப் பிடித்துள்ளனர். இச்சம்பவம் ஒரு எளிய இளைஞர்களின் ஆர்வ வெளிப்பாடாகத் தோன்றினாலும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த காவல்துறையின் நடவடிக்கைகள், பல சட்ட மற்றும் தார்மீக கேள்விகளை எழுப்பியுள்ளன.
கலைவாணர் அரங்கில் நடந்ததென்ன?
சாகித்ய அகாடமி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் சிறப்புநிலைத் தமிழ்த்துறை இணைந்து கலைவாணர் அரங்கில் நடத்திய முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு கருத்தரங்கம், கடந்த 27ந் தேதி நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்திற்கு, சென்னையின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவியர் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஒரு மாநில முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்வில், மாணவர்களைப் பெருந்திரளாக அழைப்பது வழக்கம் என்றாலும், கல்லூரிகள் செயல்படும் நாட்களில் இதற்கான அனுமதி எவ்வாறு வழங்கப்பட்டது என்பது முதல் கேள்வி. மாணவர்களை இந்த நிகழ்வில் பங்கேற்கத் தூண்டியவர்கள் யார் என்ற கேள்வியும் எழுகிறது.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் #முதல்வர் நிகழ்வில் #விஜய்படம் கொடி காட்டிய மாணவர்கள்#MKStalin #vijaytvk @mkstalin @arivalayam @actorvijay @TVKVijayHQ @Tvk_ITWING_ @DMKITwing pic.twitter.com/L7nJ74yF5E
— Nowshath A (@Nousa_journo) June 27, 2025
கைக்குட்டை ஒரு சலசலப்பின் ஆரம்பம்:
முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த தருணத்தில், அங்கிருந்த மாணவர்களில் ஒருவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் புகைப்படம் பொறிக்கப்பட்டிருந்த ஒரு கைக்குட்டையை அனைவருக்கும் முன்னால் 3 – 4 விநாடிகள் உயர்த்திப் பிடித்தார். இதனைப் பார்த்த சில மாணவர்கள், தாங்கள் வைத்திருந்த அலைபேசிகளில் விஜய்யின் புகைப்படங்களை உயர்த்தி காண்பித்துள்ளனர். இது அரசு நிகழ்ச்சியை அரசியல் அரங்கமாக மாற்றும் முயற்சி போலத் தோன்றினாலும், இளைஞர்களின் ஒருசிலரின் இச்செயல், நிகழ்வின் மாண்புக்கு குந்தகம் விளைவித்ததா என்பது விவாதத்துக்குரியது.
காவல்துறையின் அதிரடி நடவடிக்கை – சட்ட மீறல்?
சம்பவம் நடந்த அடுத்த கணமே, அரங்கில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களைக் கூட்டத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். அவர்களுடைய உடமைகளையும் சோதனை செய்தனர். விஜய்யின் புகைப்படம் பொறிக்கப்பட்ட கைக்குட்டையை உயர்த்திக் காட்டிய மாணவர், சென்னை புதுக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துவருபவர் என்பது பின்னர் தெரியவந்தது.
மாணவர்களை திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்திவிட்டு, பல மணி நேரம் சட்டவிரோதக் காவலில் (Illegal Detention) வைத்திருந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பின்னர் மாணவர்கள் சமூலநலக் கூடத்தில் அடைக்கப்பட்டு, இரவு 8 மணிக்கு மேல் விடுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இங்கு எழும் முதல் சட்டரீதியான கேள்வி, முதலமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஒரு குறிப்பிட்ட அரசியல் தலைவரின் புகைப்படத்தை மாணவர்கள் காண்பித்தது, பாரதிய நியாய சம்ஹிதா (BNS) சட்டக் கூறுளின்படி குற்றமா? பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காத, வன்முறையைத் தூண்டாத, தனிநபர் சுதந்திரத்தின் அடிப்படையிலான ஒரு செயல், சட்டப்படி தவறு என்று முத்திரை குத்தப்படுமா? என்பது முக்கியமானது.
Also Read : சாராயத்துக்குக் குறைவில்லாத இணைய போதை! மாணவர்கள், இளைஞர்களை அச்சுறுத்தும் ‘இன்டெர்நெட் அடிக்ஷன் டிஸார்டர்’!
சட்டவிரோதக் காவல் மற்றும் பெற்றோர் உரிமை மறுப்பு:
மேலும், மாணவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பல மணி நேரம் சட்டவிரோதக் காவலில் வைக்கச் சட்டம் அனுமதிக்கிறதா? பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா (BNSS) சட்டத்தின்படி, எந்தவிதமான பிடிவாரண்டோ அல்லது கைதுக்கான முகாந்திரமோ இல்லாமல், ஒருவரைக் காவலில் வைத்திருப்பது சட்டவிரோதக் காவல் ஆகும். இது அடிப்படை மனித உரிமை மீறலாகும். குறிப்பாக, சம்பந்தப்பட்டவர்கள் மாணவர்கள் எனும் போது, இத்தகைய அணுகுமுறை அவர்களின் மனநலத்தைப் பாதிக்கும் என்பது நிதர்சனம்.
சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த பெற்றோர், தங்கள் பிள்ளைகளைப் பார்க்க அனுமதி கேட்டும், போலீஸார் மறுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சந்திக்க அனுமதிக்க மறுப்பது, குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பெற்றோர் உரிமைகள் சட்டங்களின்படி கேள்விக்குரியது. ஒரு சிறார் (Minor) என்றால் நிலைமை இன்னும் தீவிரமாக இருக்கும். ஒரு வயது வந்தவராக இருந்தாலும், சட்டவிரோதக் காவலில் உள்ள ஒருவரை அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் அடிப்படை நெறிமுறைகளுக்கு எதிரானது.
உளவியல் தாக்கம் மற்றும் எதிர்கால விளைவுகள்:
காவல் நிலையச் சூழல், குறிப்பாக இள வயது மாணவர்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்தி இருக்காதா என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒருசில மணி நேரக் காவல் கூட, ஒரு இளம் மாணவனின் மனதில் பெரும் அச்சத்தையும், சட்ட அமைப்புகள் மீதான நம்பிக்கையின்மையையும் விதைக்கக்கூடும். இது அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலப் பாதைக்குத் தடைக்கல்லாக அமையலாம்.
முடிவுரை:
முதலமைச்சரின் நிகழ்ச்சியில் ஒரு தனிப்பட்ட அரசியல் தலைவரின் புகைப்படத்தைக் காண்பித்த ஒரு சில மாணவர்களின் செயல், ஒரு சிறு சலசலப்பை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால், அதனைத் தொடர்ந்து காவல்துறையால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், குறிப்பாக சட்டவிரோதக் காவல் மற்றும் பெற்றோர் அனுமதி மறுப்பு போன்ற குற்றச்சாட்டுகள், மிகுந்த கவலையைத் தருகின்றன.
இது போன்ற சம்பவங்கள், ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதிலும், சட்ட அமைப்புகளின் நேர்மையைப் பேணுவதிலும் தமிழக அரசு மற்றும் காவல்துறையின் பொறுப்பை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகின்றன. இச்சம்பவம் குறித்து விரிவான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு, நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க, இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை அழைக்கும் நடைமுறைகள், அவர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில் திருத்தப்பட வேண்டும்.
கட்டுரையாளர் – அம்மா கோபி, மூத்த ஊடகவியலாளர், அஇஅதிமுக ஐ.டி.விங் நிர்வாகி.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry