ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஈரோடு விவசாயி மகன்! யார் இந்த கே.பி.ராமசாமி?

0
81
K.P. Ramasamy / File Image

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் மூன்று புதுமுகங்கள் இடம் பெற்றுள்ளனர். டெக்ஸ்டைல்ஸ் மற்றும் சர்க்கரை தயாரிப்பு நிறுவனமான கே.பி.ஆர் மில் நிறுவனர் மற்றும் தலைவர் கே.பி.ராமசாமி (74), 19,133.7 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் 100-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

யார் இந்த கே.பி.ராமசாமி?

ஈரோடு மாவட்டம், கல்லியம்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவரான கே.பி.ராமசாமி ஒரு விவசாயியின் மகன் மற்றும் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர். இந்தியாவின் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றை நிறுவி வெற்றி பெற்றுள்ளார். கே.பி.ஆர். மில் 1984 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. 2013 ஆம் ஆண்டில், கே.பி.ராமசாமி தனது வணிகத்தை விரிவுபடுத்தி, சர்க்கரை உற்பத்தியில் கால்பதித்தார்.

அவரது தொழில்முனைவு பயணத்தில் 2019 ஆம் ஆண்டில், ஆண்களின் உள்ளாடை பிராண்டான Fasoவின் தொடக்கமும் அடங்கும். கே.பி.ஆர் மில் அதன் சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தியுடன் பின்னலாடை, பருத்தி மற்றும் பாலியஸ்டர் நூல் உற்பத்தியில் நிபுணத்துவம் பெற்றுள்ளது. கோயம்புத்தூரில் ராமசாமி மற்றும் அவரது இரண்டு சகோதரர்களால் நடத்தப்படும் நிறுவனத்தில் 30,000 பேர் பணியாற்றுகின்றனர், அவர்களில் 90% பேர் பெண்கள்.

Also Read : நாகை – இலங்கை இடையே அதிவேக பயணிகள் படகு சேவை! பயண நேரம், கட்டணம்… முழு விவரம்! India Resumes Ferry Service with Sri Lanka!

ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, கேபிஆர் மில்ஸ் ஆண்டுதோறும் 128 மில்லியன் ஆடைகளை உற்பத்தி செய்கிறது. இந்த ஆடைகள் விளையாட்டு உடைகள் மற்றும் தூக்க ஆடைகள் உள்பட பல வகையான ரகங்களை உள்ளடக்கியது. எச் & எம், மார்க்ஸ் & ஸ்பென்சர் மற்றும் வால்மார்ட் போன்ற உலகளாவிய சில்லறை விற்பனை ஜாம்பவான்களும் இவரது தயாரிப்புகளை சந்தைப்படுத்துகிறார்கள்.

கே.பி.ஆர். அறக்கட்டளை மூலம் ‘கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி’ என்ற கல்லூரியையும் அவர் நடத்தி வருகிறார். கே.பி. ராமசாமி தமிழகத்தில் பல காற்றாலைகளை நிறுவியுள்ளார். பசுமை மின்சாரத்தை பெறுவதற்காக கர்நாடகாவில் கோ-ஜென் மற்றும் சர்க்கரை ஆலையையும் நடத்தி வருகிறார்.

பட்டியலில் உள்ள மற்ற புதுமுகங்கள்

ஃபோர்ப்ஸ் இந்தியாவின் 100 பணக்காரர்கள் பட்டியலில் உள்ள மற்ற புதிய பெயர்களில் ஏசியன் பெயிண்ட்ஸ் நடத்தும் டானி குடும்பமும் அடங்கும். இவர்களின் சொத்து மதிப்பு ரூ.67,841.77 கோடியாகும்.

லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரேணுகா ஜக்தியானி மற்றொரு புதியவர். இந்த ஆண்டு மே மாதம் அவரது கணவர் மிக்கி ஜக்தியானி இறந்த பிறகு அவர் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இவரது சொத்து மதிப்பு ரூ.39,931.20 கோடியாகும்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் டாப் 3 பணக்கார இந்தியர்கள்

முதல் மூன்று இடங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 92 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தையும், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி 68 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாவது இடத்தையும், எச்சிஎல் நிறுவனர் ஷிவ் நாடார் 29.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry