மாரடைப்பால் நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி! ஐ.சி.யூ-வில் எக்மோ சிகிச்சை! மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு!

0
56

சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் படப்பிடிப்பில் இருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் திரைப்பட படப்பிடிப்புக்காக வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பிய நடிகர் விவேக், நேற்று காலை தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், கொரோனா தடுப்பூசியில் பின்விளைவு இல்லை என்பதை உணர்த்துவதற்காகவும், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.



இந்நிலையில், சென்னையில் இன்று காலை தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு விவேக் சரிந்து விழுந்துள்ளார். இதையடுத்து, சென்னையில் வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மூச்சு திணறல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. நடிகர் விவேக்கின் உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விவேக்குக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் சுயநினைவுடன் இருப்பதாகவும் செய்தித்தொடர்பாளர் நிகில் முருகன் தெரிவித்துள்ளார். அதேநேரம் நடிகர் விவேக்குக்குத் தற்போது இதயம் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை சீர்செய்ய எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விவேக் பூரண நலம்பெற வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். விவேக்கின் திடீர் உடல்நலக்குறைவு சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மரம் நடுதல், கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பணிகளிலும் விவேக் தீவிரமாக ஈடுபட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry