அதிமுக பிரமாண்ட மாநாடு! குலுங்கியது மதுரை! மாஸ் காட்டிய ஈபிஎஸ்! லட்சக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்!

0
75
மதுரை அதிமுக மாநாடு

மதுரையில் நடைபெறும் அஇஅதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கட்சியின் வயதைக் குறிக்கும் வகையில் இன்று காலை 51 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடியேற்றி தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றுள்ளதால் மதுரை ஸ்தம்பித்துள்ளது.

அதிமுக பொதுச் செயலாளராக கே.பழனிசாமி பொறுப்பேற்றபோது, அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி 50 ஆண்டு நிறைவு பெறுவதை தொடர்ந்து அக்கட்சியின் பொன்விழா மாநாட்டை மதுரையில் நடத்துவதாக அறிவித்து இருந்தார். அதன்படி, இன்று(ஆகஸ்ட் 20) அஇஅதிமுக மாநில மாநாடு, மதுரை அருகே வலையங்குளத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது.

சனிக்கிழமை காலை முதலே தமிழகம் முழுவதும் இருந்து விமானம், ரயில்கள், பஸ்கள், வேன்கள், கார்களில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மதுரையில் திரண்டனர். பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று இரவு சேலத்தில் இருந்து கார் மூலம் மதுரை வந்தார். கப்பலூரில் நிர்வாகிகள், தொண்டர்கள் வழங்கிய வரவேற்பை ஏற்றுக் கொண்ட அவர், மாநாடு நடந்த ‘ரிங்’ ரோட்டில் தனியார் ஹோட்டலில் இரவு தங்கினார்.

மாநாட்டில் பங்கேற்க வந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

இன்று காலை சரியாக 8.45 மணியளவில் மாநாட்டு திடலுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வந்தார். மாநாடு நடைபெறும் இடத்தை வந்தடைந்ததும், அவர் திறந்த வெளி வேனில் ஏறி, தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். கேரளாவின் சென்டை மேளம், பேண்டு வாத்தியம், தாரை தப்பட்டை முழங்க கிராமிய கலை நிழ்ச்சிகள், பொய் கால் குதிரை ஆட்டம், கரகாட்டம் கலை நிகழ்ச்சிகளுடன் சீருடை அணிந்த அதிமுக மகளரணியினரின் பூரண கும்ப மரியாதையுடன் அவருக்கு அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு வழங்கினர். வாள் சண்டை நிகழ்ச்சி உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

மதுரை அதிமுக மாநாடு
பொதுச்செயலாளரை வரவேற்க அலங்கரிக்கப்பட்ட குதிரையுடன் திரண்டிருந்த தொண்டர்கள்
மதுரை மாநாட்டையொட்டி நடைபெற்ற கலைநிகழ்ச்சி

அதன்பின்னர், மாநாட்டு திடல் முன் அமைக்கப்பட்டிருந்த 51 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியேற்றி வைத்து எடப்பாடி கே. பழனிசாமி மரியாதை செலுத்தினார். அங்கு குவிந்திருந்த தொண்டர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.

மதுரை மாநாட்டுத் திடலில் கழக கொடியேற்றிய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

வானில் மூன்று முறை வட்டமிட்ட ஹெலிகாப்டர் மூலம் 1 டன் ரோஜா மலர்கள், அவர் மீதும், தொண்டர்கள் மீதும் தூவி வரவேற்பு வழங்கப்பட்டது. கறுப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களில் பலூன்களை நிர்வாகிகள் பறக்கவிட்டனர். எடப்பாடி கே.பழனிசாமி, மாநாட்டு நினைவாக சமாதான புறாக்களை பறக்கவிட்டார். குதிரைகள் புடைசூழ மாநில ஜெ. பேரவை தொண்டர்கள் 3 ஆயிரம் பேருடன், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

மாநாட்டுத் திடலின் முகப்பில் உள்ள 51 அடி உயர கம்பத்தில் பழனிசாமி கட்சிக் கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது.

மாநாட்டுக்கு ஏற்பாடுகளை முன்னின்று செய்த மாநில ஜெ. பேரவை செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வெள்ளி செங்கோல், வாள் போன்ற நினைவுப் பரிசுகளை வழங்கி மாநாட்டுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை வரவேற்றனர்.

மதுரை அதிமுக மாநாடு
மதுரை மாநாட்டுத் திடலை ரிப்பன் வெட்டி திறந்துவைத்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

பின்னர் மாநாட்டு பந்தலை, ரிப்பன் வேட்டி திறந்து வைத்த எடப்பாடி கே. பழனிசாமி, நுழைவு வாயில் அருகே அமைக்கப்பட்டிருந்த அதிமுகவின் 51 ஆண்டு வரலாற்றை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை குத்தவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் எம்ஜிஆர், ஜெயலலிதா, பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோரின் அரசியல் வரலாறு, அதிமுக ஆட்சியின் சாதனைகள், நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் போன்றவை இடம்பெற்றிருந்தன.

மதுரையில் அதிமுக மாநாட்டையொட்டி நடைபெற்ற புகைப்படக் கண்காட்சி
மதுரையில் அதிமுக மாநாட்டையொட்டி நடைபெற்ற புகைப்படக் கண்காட்சி

மாநாட்டு நுழைவு வாயிலின் இரு புறமும் இரு பிரமாண்ட டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டு மாநாட்டு கொடியேற்று நிகழ்சிகள் முதல் மாநாட்டு திடல், கண்காட்சியை பொதுச்செயலாளர் திறந்த வைத்தது வரையிலான நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. மாநாட்டு திடல் முன் குவிந்திருந்த லட்சக்கணக்கான தொண்டர்கள், டிஜிட்டல் திரைகளில் நிகழ்ச்சியினை கண்டு ரசித்தனர்.

மேடையில் அமைத்திருந்த பிரமாண்ட டிஜிட்டல் திரையிலும், பந்தலில் அமர்ந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பார்வையிடும் வண்ணம் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கொடியேற்றி, கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டப் பிறகு புறப்பட்டு சென்றார். மாநாட்டு பந்தல் அருகே பரம்புபட்டி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அவர் ஒய்வு எடுத்தார். மாலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மாலை 5.00 மணியளவில் அவர் மீண்டும் வருகை தந்தார்.

மதுரையில் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கு குவிந்த தொண்டர்கள்
மாநாட்டில் பங்கேற்ற தென்சென்னை தெற்கு(கி) மாவட்ட கழகச் செயலாளர் எம்.கே. அசோக், மயிலை வடக்குப் பகுதி செயலாளர் பி. கணேஷ்பாபு.

தமிழகம் முழுவதும் இருந்து ஒரே நேரத்தில் தொண்டர்கள் குவிவதை தடுக்க, சென்னை மற்றும் வடக்கு, மேற்கு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் காலை 12 மணி வரை மாநாட்டுக்கு வருவதற்கும், அதற்கு மேல் மதுரை மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் வரும் வகையிலும் அதிமுக நிர்வாகிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனாலும், மதுரையில் மாநாடு நடந்த ‘ரிங்’ சாலையில் லட்சக்கணக்கான தொண்டர்கள் வாகனங்களுடன் குவிந்ததால் மதுரை மாநகரே போக்குவரத்தால் ஸ்தம்பித்து.

மதுரை அதிமுக மாநாட்டின் ஒரு பகுதி
மதுரை அதிமுக தொண்டர்கள் வந்திருந்த சில வாகனங்கள்

காலை கொடியேற்று விழா நடந்தபிறகு, மாலை பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மேடைக்கு வரும் வரை, பந்தலில் அமர்ந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்களை மகிழ்விக்க இசையமைப்பாளர் தேவாவின் இன்னிசை கச்சேரி, மதுரை முத்து, ரோபா சங்கர், ராஜலெட்சுமி – செந்தில் நிகழ்ச்சிகள், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் நடுவராக பங்கேற்ற சிறப்பு பட்டிமன்றம் போன்றவை நடந்தது. இதில், நடிகை விந்தியா, புதுக்கோட்டை செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், செய்தி தொடர்பாளர் கல்யாண சுந்தரம் போன்றோர் பேசினர். இந்த மாநாட்டில் சுமார் 15 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் பங்கேற்றனர். அதிமுக கட்சி வரலாற்றிலே இதுபோன்ற பிரமாண்ட மாநாடு நடந்தில்லை என இன்று மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தொண்டர்கள் தெரிவித்தனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry