ஆளுநர் வாகனம் மீது தாக்குதல்! மயிலாடுதுறையில் பெரும் அதிர்ச்சி! ஆளுநர் சூரியனைப்போல இருப்பதாக தருமபுர ஆதீனம் பாராட்டு!

0
632

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்ற ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஆலய நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்திருந்த ஆளுநர் ரவி, கோ பூஜை, கஜ பூஜை செய்து சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் தரிசனம் செய்தார். அவருக்கு ஆலயம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து ஆளுநர் தருமபுர ஆதீனத்திற்கு புறப்பட்டார். வழியில், மன்னம்பந்தல் என்ற இடத்தில் AVC கல்லூரி எதிரே, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், எஸ்டிபிஐ, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு, தமிழர் உரிமை இயக்கம், திராவிடர் விடுதலை கழகம் போன்ற கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தருமபுர ஆதீனம் மற்றும் ஆளுநருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். திடீரென ஆளுநரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள், கருப்புக் கொடி கட்டப்பட்ட கம்புகள், பதாகைகளை போராட்டக்காரர்கள் வீசியதால் பரபரப்பபு நிலவியது. 96 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தருமபுர ஆதீனம் சென்ற ஆளுநருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆளுநர் ஆசி பெற்றார். ஆதீனம் சார்பில் ஆளுநருக்கு நடராஜர் படம் வழங்கப்பட்டது. அதனையடுத்து ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், “தமிழக ஆளுநரின் பெயர் ரவி. ரவி என்றால் சூரியன் என்று அர்த்தம். ஆளுகிற ஆட்சியாளர்களின் சின்னமும் சூரியனாக உள்ளதால் தமிழகத்திற்கு இரண்டு சூரியன்கள் உள்ளன” என்றார். அவர் மேலும் பேசும்போது, “மறதி ஒரு வரம். மறதி இருந்தால் மட்டுமே மனிதன் மகிழ்ச்சியாக வாழ முடியும். பசுக்களைப் பராமரிக்க வேண்டும். கால்நடைகளை சரியாக பராமரிக்காததால் கொரோனா போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை நீக்கியதால்தான் பண்பாடு மற்றும் கலாச்சாரம் சீர் கெட்டுப் போயுள்ளது. அதனால் கல்வி நிலையங்களில் மீண்டும் நீதி போதனை வகுப்புகளை தொடங்க வேண்டும்” என்று கூறினார்.

பின்னர் பேசிய ஆளுநர் ரவி, “இங்குள்ளவர்களை பார்க்கும்போது உண்மையான இந்தியா என் கண்முன்னே தெரிகிறது. இந்திய நாடு வளமான நாடு. தருமபுர ஆதீனம் நாட்டு மக்களுக்கும் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் பல்வேறு சேவைகளை ஆற்றி வருவது சிறப்புக்குரியது. குறிப்பாக இக்கட்டான சூழ்நிலைகளில் கொரோனா போன்ற இயற்கை இடர்பாடுகள், கார்கில் போர் நடைபெற்றபோது தாமாக முன்வந்து பல்வேறு உதவிகளை செய்தது பாராட்டுக்குரியது.

இந்தியாவின் வளர்ச்சி என்பது, பொருளாதார வளர்ச்சி மட்டுமல்லாமல் கலாச்சாரம், பண்பாடு, நாகரிகம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. உலகில் உள்ள மக்கள் இயற்கை இடர்பாடுகள், ஒருவருக்கொருவர் சண்டையிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அனுதினமும் சந்தித்து வருகிறார்கள். இதற்குத் தீர்வு நாகரிகம், கலாச்சாரம், கல்வி, நீதிபோதனைகள், பண்பாடு உள்ளிட்டவற்றால் மட்டுமே முடியும். மதத்தால், மொழியால் உணவால் இந்தியர்கள் பிரிந்திருந்தாலும், அனைவரும் ஒரே குடும்பம். இந்தியாவினுடைய ஆன்மிகம் தமிழகத்திலிருந்து தொடங்கப்பட்டது” என்று அவர் பேசினார். அதனைத்தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கரம் விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்ட ஆதீனகர்த்தரின் ஞானயாத்திரையை ஆளுநர் ரவி தொடங்கி வைத்தார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry