மதம் மாறாவிட்டால் கொன்றுவிடுவோம் என பாஜக மிரட்டுகிறது! SC/ST இந்துக்கள் இல்லை! காந்தி தீவிர இந்துத்துவவாதி!

0
371

கர்நாடக மாநிலம் பெங்களூரில், கடந்த மாதம் 24-ந் தேதி அம்பேத்கர் சேவா சமிதி நடத்திய பொதுக்கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ‘’அம்பேத்கரை சாதித் தலைவராக உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அம்பேத்கர் விரும்பிய தேசத்தை உருவாக்க வேண்டும்.

முன்னாள் பிரதமர் நேருவைவிட மேலானவராக மக்களால் போற்றப்பட்ட தலைவர் அம்பேத்கர். சாதி ஒழிப்புதான் அம்பேத்கரின் கொள்கை. கர்நாடக முதலமைச்சராகவோ, இந்தியப் பிரதமராகவோ நாம் வரமுடியவில்லை. சனாதனவாதிகள் சாதியைக் காப்பாற்ற துடிக்கிறார்கள்.

அம்பேத்கரின் கொள்கை அறிக்கைதான் இந்திய அரசமைப்புச் சட்டம். SC / ST மக்கள் இந்துக்கள் இல்லை. கர் வப்சியை(தாய் மதம் திரும்புதல்) தூக்கிப்பிடிக்கிறார்கள், இந்துக்களாக மாறாவிட்டால் கொன்றுவிடுவோம் என பாஜக பகிரங்கமாக மிரட்டுகிறது. குடியரசுத் தலைவர் ஆணவக் கொலை குறித்து பேசி இருக்கிறாரா? அவரால் பேசத்தான் முடியுமா?

இந்தியாவின் பெயரை இந்து ராஷ்டிரம் என மாற்ற துடிக்கிறார்கள். அவர்களால் இதைச் செய்ய விடாமல் தடுப்பது அம்பேத்கர் எழுதிய அரசமைப்புச் சட்டம்தான். ஆனால் 2024-ல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அரசமைப்பு சட்டத்தை மாற்றிவிடுவார்கள். இது நாட்டுக்கு ஆபத்தானது. இந்தியா 2000 ஆண்டுகள் பின்னால் போய்விடும்.

SC / ST மக்கள் இந்து மதத்தில் இருந்து வெளியேற்றிவிட்டால், இந்து பெரும்பான்மை என்ற வாதம் அடிபட்டுப்போகும். நாங்கள் பெரும்பான்மையானவர்கள் என இந்துக்கள் கூறிக்கொள்ள முடியாது. மதமாற்ற தடைச் சட்டம் கொண்டுவந்து சுதந்திரத்தை பறிக்கிறார்கள். நாம் பவுத்தர்கள், இந்துக்களுக்கு எதிரானவர்கள்.

அம்பேத்கருக்கு காந்தி வில்லனாக இருந்தார். காந்திக்கு அம்பேத்கர் வில்லனாக இருந்தார். காந்தி தீவிர இந்துத்துவவாதி. அம்பேத்கர்தான் தேசத் தந்தை. பிராமணர்கள், சத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரும் சேர்ந்து வாருங்கள், சண்டை செய்யலாம். நாங்கள் தனியாக நின்று சண்டை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.” இவ்வாறு அவர் பேசினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry