அனைத்து வாகனங்களுக்கும் 5 ஆண்டு காப்பீடு! வரும் 1-ம் தேதி முதல் கட்டாயமாக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

0
5

வரும் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து வாகனங்களுக்கும், பம்பர் to பம்பர் என்ற அடிப்படையில், 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒகேனக்கல்லில் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரது குடும்பத்தினர் இழப்பீடு கேட்டு ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து, நியூ இந்தியா அஷுரன்ஸ் கம்பெனி சென்னை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது, வாகனத்திற்கான ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் என்ற அடிப்படையில் மட்டுமே வனத்துக்கு காப்பீடு எடுக்கப்பட்டதாகவும், ஓட்டுனர் அல்லாத ஒருவர் இறப்பிற்கு ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே இழப்பீடு வழங்க முடியுமென காப்பீட்டு நிறுவனம் தெரிவித்தது.

சடையப்பன் வாகன ஓட்டுநராக அடையாளப்படுத்தப்பட்டு இருந்தாலும் விபத்து நடந்தபோது அவர் வாகனத்தை இயக்கவில்லை என்றும், அவர் சம்பளம் பெற்றதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் காப்பீட்டு நிறுவனம் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இவற்றை ஏற்றுக் கொண்ட நீதிபதி வைத்தியநாதன், ஈரோடு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதேசமயம், புதிய வாகனத்தை வாங்கும் போது, அது எவ்வாறு செயல்படும் என்று தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டுபவர்கள், காப்பீட்டு நடைமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்வதில்லை என நீதிபதி வேதனை தெரிவித்தார். வாகனங்கள் வாங்குபவர்களுக்கு காப்பீடு தொடர்பான விவரங்களை முழுமையாக தெரிவிப்பதில்லை என்று விற்பனையாளர்களை அவர் குற்றம்சாட்டினார்.

வரும் 1ம் தேதி முதல் விற்கப்படும் அனைத்து புதிய வாகனங்களுக்கும் பம்பர் டூ பம்பர் என்ற அடிப்படையில், வாகன உரிமையாளர், ஓட்டுனர், பயணி என அனைவரையும் உள்ளடக்கும் வகையில் வகையில், ஐந்து ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என நீதிபதி வைத்தியநாதன் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக, காப்பீட்டு நிறுவனங்களுக்கு, தமிழ்நாடு அரசின் போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலாளர் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் எனக் கூறிய நீதிபதி, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றியது தொடர்பாக செப்டம்பர் 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry