காங்கிரஸ் நிர்வாகிகள் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்! கார்த்தி சிதம்பரம் அதிரடி!

0
6

பொய் சொல்வதை நிறுத்துமாறு காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு சிவகங்கை தொகுதி எம்.பிகார்த்தி சிதம்பரம் பேசியுள்ளார். இது காங்கிரசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்றிரவு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், “காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களுக்குள் பொய்சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். காங்கிரஸ்காரர்கள் மேடையும், மைக்கும் கிடைத்துவிட்டாலே காமராஜர் ஆட்சி அமைப்போம், இந்தியாவை வல்லரசாக ஆக்குவோம் எனப் பேச ஆரம்பித்துவிடுகின்றனர். இதெல்லாம் அவ்வளவு எளிதல்ல.

மேடையில் என்ன பேசினாலும் நிர்வாகிகள் தங்களுக்குள் உண்மையாக இருக்க வேண்டும்.முதல்படியாக நமக்குள் பொய் பேசுவதை நிறுத்த வேண்டும். எப்போது நிர்வாகிகளிடம் நான் பேசினாலும், எல்லா இடங்களிலும் பூத் கமிட்டி அமைத்தாகிவிட்டது,அனைத்து பூத்களிலும் ஆள் இருக்கின்றனர் என்பார்கள். ஆனால், காங்கிரஸுக்கு ஓட்டே வராத பூத்கள் கூட இருக்கின்றன

காங்கிரசில் 70 லட்சம் உறுப்பினர்கள் உள்ளார்கள் என பொய்யாக அறிக்கை கொடுத்து விட்டார்கள். இதை நம்பி 2016-ம் ஆண்டு நான் தேர்தலில் நின்றுவிட்டேன் ஆனால் உறுப்பினர்களே நமக்கு ஓட்டு போடவில்லை. சராசரியாக ஒவ்வொரு பாராளுமன்றத்திற்கும் 30 ஆயிரம் வாக்குகள் தான் விழுந்தது. இதில் எப்படி 70 லட்சம் உறுப்பினர்கள் இருக்க முடியும்.

இதற்கு பொய்யாக சந்தா தொகை செலுத்தி பழைய பேப்பர்களை டெல்லிக்கு அனுப்பி விட்டார்கள். நம் நிர்வாகிகள் அங்கு டெல்லியில் இந்த பேப்பரை வைத்து பட்டாணி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.

அதேபோல் இளைஞர் காங்கிரஸ் என ஒரு பொய்யான அறிக்கை வந்தது. அதில் 13 லட்சம் உறுப்பினர்களை சேர்த்தோம் என்று சொன்னோம். சென்னை பாராளுமன்றத்தில் மட்டும் ஒரு லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னோம். ஆனால் வாங்கின வாக்குகள் மட்டும் 30 ஆயிரம் தான் வந்தது. ஆகையால் காங்கிரஸ் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் என்றார்”. தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக-வுடன் சீட் பேரத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் தயாராகி வருகின்றனர். இந்தச் சூழலில், காங்கிரஸின் வலிமையை சுத்தமாக குறைத்து மதிப்பிட்டு கார்த்தி சிதம்பரம் பேசியிருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry