நடுநிலைப் பள்ளிகளில் வேளாண்மை பாடத்தை சேர்க்க நடவடிக்கை! பிரதமர் மோடி அறிவிப்பு!

0
7

பள்ளிகளில் விவசாயத்தை பாடமாக சேர்ப்பதுடன், விவசாயிகளை தொழில் முனைவோராக மாற்றினால்தான், விவசாயத்தில் தன்னிறைவு பெற முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் மத்திய வேளாண் பல்கலையின் நிர்வாக கட்டடத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். பின்னர் மாணவர்களிடம் பேசிய அவர், விவசாயத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்பதே இந்தியாவின் இலக்கு. கிராமத்தின் மொத்த பொருளாதார சுயசார்பை உறுதி செய்யப்பட வேண்டும்.

விவசாயியை தொழில் முனைவோராக மாற்ற வேண்டும். இதன் மூலம் விவசாயம் தன்னிறைவு பெறும். விவசாயம், விவசாயிகள் தொழில் வடிவத்தில் முன்னேறினால், கிராமங்களில் சுய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

நடுநிலைப் பள்ளிகளில் வேளாண்மையை ஒரு பாடத்திட்டமாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும், பள்ளிப் பருவத்திலேயே வேளாண்மை பற்றி தெரிந்துகொள்வதுடன், அதை செயல்முறையாகவும் அவர்கள் செய்துபார்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விவசாயத்தில் சுயசார்பு குறித்து பேசும் போது, அது உணவு தானியங்களில் மட்டும் தன்னிறைவு பெறாமல், கிராமத்தின் முழு பொருளாதாரத்தின் சுயசார்பையும் உள்ளடக்கியது. டுரோன்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வெட்டுக்கிளி பிரச்னையை இந்தியா வெற்றிகரமாக சமாளித்துள்ளது என்று பிரதமர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry