பிளஸ் 2 விடைத்தாளில் பெரும் குளறுபடி! கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியது அம்பலம்! பெற்றோர், கல்வியாளர்கள் அதிர்ச்சி!

0
160
FILE IMAGE

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 13 ம் தேதி முதல் ஏப்ரல் 3 ம் தேதி வரையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாணவர்களின் விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு, மே 8 ம் தேதி தேர்வுத்துறை தேர்வு முடிவுகளை வெளியிட்டது.

மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டில் பெரும் குளறுபடி நடந்திருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அசல் விடைத்தாளில் இருக்கும் மதிப்பெண்களை விட, மதிப்பெண் பட்டியலில் அதிக மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் 8 லட்சத்து 3 ஆயிரத்து 385 மாணவர்கள் தேர்வினை எழுதிய நிலையில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 451 பேர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வும் விரைவில் தொடங்கவுள்ளது.

Also Read : 2011க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு TET தேர்ச்சி கட்டாயமில்லை! அனைத்து பதவி உயர்வுகளுக்கும் டெட் தேர்ச்சி அவசியம்!

இது ஒருபுறம் இருக்க, தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்ற மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகலைப் பெற்று, தவறுகள் இருந்தால், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்தது.

இதன் அடிப்படையில் விண்ணப்பித்து விடைத்தாள் நகலை பெற்ற மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், அவர்களின் விடைத்தாள்(ஆன்ஸ்வர் ஷீட்) நகலில் இருக்கும் மதிப்பெண்களை விட, ஏற்கனவே வெளியிடப்பட்ட மதிப்பெண் பட்டியலில்(மார்க் ஷீட்) அதிக மதிப்பெண் போடப்பட்டிருப்பது தெரியவந்தது. பெரும்பாலான மாணவர்களுக்கு இவ்வாறு அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட ஒவ்வொரு பாடத்திலும் 5 முதல் 7 மதிப்பெண் கூடுதலாக போடப்பட்டிருப்பதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காக வேண்டுமென்றே இந்த மோசடி செய்யப்பட்டதா? இல்லையெனில், கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கு காரணமா? என கல்வியாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Also Read : அமைச்சர் பொன்முடி Tongue Slip ஆகி Loose Talk விடுகிறார்! தமிழக ஆசிரியர் கூட்டணி கடும் விமர்சனம்!

தேர்வின்போது பெற்ற மதிப்பெண்களை விட, கூடுதலாக மதிப்பெண்களை பதிவு செய்த ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாணவர்களுக்கு கூடுதலாக மதிப்பெண்களை வழங்கியது யார்? என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும் பெற்றோர் கோரிக்கை விடுகின்றனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பெற்றோரும், கல்வியாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

பொறியியல், வேளாண்மை, கலை அறிவியலின் சில பாடங்களில் ஒரு மதிப்பெண்கள் கூட பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். சில மாணவர்களுக்கு கூடுதலாக மதிப்பெண் வழங்கப்பட்டால், பிற மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வதற்கான தரவரிசையில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry