
ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற ஆன்லைன் தளங்களில் மதுபானங்களை விற்க அனுமதிப்பது குறித்து பல மாநிலங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.
புது டெல்லி, கர்நாடகா, ஹரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள் ஸ்விக்கி, பிக்பாஸ்கெட் மற்றும் ஜொமாட்டோ போன்ற ஆன்லைன் தளங்கள் மூலம் மதுபானங்களை விற்க அனுமதிப்பது குறித்து தீவிரமாக யோசித்து வருவதாக எகனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாநிலங்கள் பீர், ஒயின் மற்றும் குறைந்த ஆல்கஹால் கொண்ட மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்கும் சேவையை தொடங்க உள்ளன.
தற்போது, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் மட்டுமே ஆன்லைன் மூலம் வீட்டிற்கு மதுபானம் வழங்க அனுமதிக்கின்றன. இதை முன்னுதாரணமாகக் கொண்டு மற்ற மாநிலங்கள் இத்திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டுகின்றன. பெரிய நகரங்களுக்கு அதிகளவில் வரும் வெளிநாட்டவர்கள், உணவுடன் மது பானத்தை எடுத்துக்கொள்ளும் பழக்கமுள்ளவர்கள், மதுக் கடைகளுக்குச் சென்று மதுபானங்கள் வாங்குவதை சங்கடமாகக் கருதும் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு ஆன்லைன் மது விநியோகம் பயனுள்ளதாக இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
Also Read : மதுக்கடை இல்லாத மதுவிற்பனை! மதுபாட்டில்கள் டோர் டெலிவரி! விற்பனையை முறைப்படுத்த சூப்பர் வழி! Vels Exclusive
ஆன்லைன் தளங்கள் அனைத்து விற்பனையையும் கண்காணிப்பது, வாங்குவோரின் வயதை சரிபார்ப்பது, சட்ட வரம்புகளைப் பின்பற்றுவது போன்றவை முக்கிய அம்சமாக இருக்கும் என ஸ்விக்கியின் கார்ப்பரேட் விவகாரங்களின் துணைத் தலைவர் டிங்கர் வஷிஷ்ட் கூறுகிறார். இந்த ஆன்லைன் தளங்கள் உள்ளூர் சட்டங்களை பின்பற்றுவதுடன், நிர்ணயிக்கப்பட்டுள்ள விநியோக நேரம், விநியோக மண்டலங்கள் பற்றிய விதிகளைப் பின்பற்ற வேண்டும். கோவிட் -19 ஊரடங்கின்போது, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், அசாம் போன்ற மாநிலங்கள் குறுகிய காலத்திற்கு ஆன் லைன் மது விநியோகத்தை அனுமதித்து பிறகு நிறுத்திவிட்டன. அப்போது மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் மது விற்பனை 20-30% அதிகரித்தது. Swiggy மற்றும் Spencer’s Retail நிறுவனம் தற்போதும் மேற்கு வங்கத்தில் மதுவகைகளை ஹோம் டெலிவரி செய்கிறது.
Also Read : மது அருந்துவதற்கு முன் சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள்! தவிர்க்க வேண்டிய உணவுகள்! Vels Exclusive
தி பீர் கஃபேயின் தலைமை நிர்வாக அதிகாரி ராகுல் சிங், ஆன்லைன் மதுபான விநியோகம் சரியானது என்கிறார். இந்த முறை மதுபானம் வாங்குவதை மிகவும் வசதியானதாக மாற்றும், மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் மற்றும் உலகளாவிய போக்குகளைப் பின்பற்றும். அதே நேரத்தில் ஆல்கஹால் பொறுப்புடன் விற்கப்படுவதை உறுதி செய்யும் என்று அவர் கூறுகிறார்.
ஆன்லைன் மதுபான டெலிவரியானது மக்கள் தங்களுக்கு பிடித்த பானங்களைப் பெறுவதை எளிதாக்கும். பிரீமியம் ஆல்கஹால் பிராண்டுகளை ஆன்லைன் விற்பனை அதிகரிக்கும். இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் மது உற்பத்தியாளர்களிடமிருந்து ஆன்லைன் மது விநியோகத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து மாநில அதிகாரிகள் கருத்து கேட்டு வருகின்றனர். மதுப்பிரியர்கள் விரைவில், Swiggy, Zomato, Blinkit, Bigbasket போன்ற ஆன்லைன் தளங்கள் மூலம் மதுவகைகளை ஆர்டர் செய்யலாம்.
இதுகுறித்து, கடந்த ஆண்டு மார்ச் 27-ந் தேதி வேல்ஸ் மீடியா பிரத்யேகமாக கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், “டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய்க்கு பங்கம் ஏற்படாத வகையில், மதுக்கடைகளை, மதுக்கூடங்களை மூட முடியும். மக்கள் நலன், சமுதாய நலன் என்ற கோணத்தில் நுணுகிப் பார்க்கும்போது இது சாத்தியமே. மது இல்லா தமிழகம் இப்போதைக்கு சாத்தியம் இல்லாவிட்டாலும், மதுக்கடை இல்லா தமிழகம் என்பதை சாத்தியப்படுத்த முடியும். விற்பனையை முறைப்படுத்துவதே, இந்த முயற்சிக்கான மூலதனம். இதன் மூலம் வருவாய்க் கசிவை தடுக்க முடிவதுடன், முறைகேடுகளை ஒட்டுமொத்தமாகக் களைய முடியும். மதுக்கடைகளை மொத்தமாக மூடிவிட்டு, வீடுகளுக்கே சென்று(டோர் டெலிவரி) மது விநியோகம் செய்வதுதான் இதற்கான திட்டம் என குறிப்பிட்டிருந்தோம்.“
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry