நோய்பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை! டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

0
65

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ”தமிழகத்தில் சளிக்காய்ச்சல் உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நோய்பரவலைத் தடுக்க சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

3 நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடும் என்று ஆறுதல் கூறுவது மட்டுமே போதுமானதல்ல. காய்ச்சலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டியது அவசியம். பள்ளிகளில் குழந்தைகள் நெருக்கமாக அமர்ந்திருப்பதாலும், ஒன்று கூடி விளையாடுவதாலும் காய்ச்சல் பரவுகிறது என்பதை மருத்துவ வல்லுநர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.

Also Read : வேகமாகப் பரவும் காய்ச்சல்! பள்ளிகளுக்கு விடுமுறைவிட அவசியமில்லை என அரசு விளக்கம்!

புதுச்சேரியில் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் அங்கு குழந்தைகளிடையே காய்ச்சல் பரவுவது குறைந்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் நோய்ப்பரவல் சங்கிலியை உடைக்க வேண்டுமானால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டியது அவசியமாகும்.

மாணவர்களுக்கு கல்வி அவசியம்; அவர்களின் உடல்நலனைக் காக்க வேண்டியது மேலும் அவசியம். இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டக்கூடாது. எனவே, 9-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்; மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னையில் பல மருத்துவமனைகளில் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு மருத்துவர்களின் உதவியோடு மாணவர்கள் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும்.

H1N1 இன்ஃப்ளுவன்சா வைரஸ் பரவல் குறையும் வரை பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். நோய் பரவலைத் தடுப்பதற்கு மக்களும் அரசுக்கு முழு ஒத்துழைப்பை தர வேண்டுமென்று பாஜக சார்பாகப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

சில வாரங்களாக புதுச்சேரியில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு பள்ளிகளுக்கு சனிக்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுவைக்கு அருகில் உள்ள கடலூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.

கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சல் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இன்று காலை முதல் கடலூர் அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் சிகிச்சை பெற காத்திருக்கின்றனர். வயது வித்தியாசம் இல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் குவிகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry