உலக நாடுகளை அச்சப்படுத்தும் பொருளாதார மந்தநிலை! இந்தியா தப்பிக்குமா?

0
306

கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து உலகப் பொருளாதாரம் மெல்ல மீண்டும் வரும் நிலையில் தற்போது பல்வேறு நாடுகளும் புதிய சிக்கலை சந்தித்து வருகிறது. பொருட்களின் தேவை அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்ற காரணங்கால் உணவுப்பொருட்கள் தொடங்கி பல பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

பொருளாதார மந்தநிலை என்பது ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சரிவை சந்திக்கும்போது ஏற்படும் தேக்கமாகும். GDP என்பது ஒரு நாட்டின் உற்பத்தியை ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் அளவிடக் கூடிய ஒரு அளவுகோல். GDP அடிப்படையில் பார்த்தால் பல நாடுகளில் பொருளாதார வளர்ச்சி விகிதம் சரிவாகவே உள்ளது. எனவே பொருளாதார மந்தநிலை தொடங்கி விட்டதா என்ற அச்சம் எழுந்துள்ளது.

சமையல் எண்ணெய், கோதுமை, சர்க்கரை என பல உணவுப்பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகளில் பொருளாதார சிக்கல் உருவாகி பணவீக்கம் ஏற்பட்டு பொருட்களை வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதேநேரம் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் உலகளாவிய பொருளாதார சிக்கலை அதிகரித்துள்ளது. பிப்ரவரி 15-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்குவதற்கு 9 நாட்களுக்கு முன்பாக உலக வங்கி மிக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் 70 நாடுகள் பெரும் கடன் சுமை, அந்நியச் செலாவணி இழப்பு போன்ற சூழலில் இருப்பதாக தெரிவித்து இருந்தது.

சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் நெருக்கடி தீவிரமாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.

இதனால் எரிபொருள் பற்றாக்குறை, மின்வெட்டு, பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உயர்வு என பெரும் பொருளாதார நெருக்கடியில் அந்நாடு சிக்கியுள்ளது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இலங்கையை போன்றே எகிப்து, துனிஷியா, துருக்கி, லெபனான், அர்ஜென்டினா, எல்சால்வெடர், பெரு, கானா, கென்யா, தென்னாப்பிரிக்கா, எத்தியோப்பியா போன்ற நாடுகளும் மோசமான பொருளாதார சூழலை எதிர்கொண்டு வருகின்றன.

இவற்றில் 10-க்கும் மேற்பட்ட நாடுகள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக அளவில் 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதாரப் பின்னடைவு நிலை, தற்போதும் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நாடுகளில் உணவுப்பொருட்களின் விலை கடுமையாக உயரும், கச்சா எண்ணெய் மற்றும் மின்சாரம் விலை அதிகரிக்கும். கடன் சுமையால் இந்த நாடுகளில் நிதிநிலை மோசமாகும் என்று ஐ.நா.வால் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை இந்த ஆண்டு ஜனவரி – மார்ச் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதமாகச் சரிந்தது. அதேபோல, இந்த நிதியாண்டின் ஏப்ரல் – ஜூன் வரையிலான காலத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் மேலும் குறைந்துள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் நுகர்வு பெரும்பங்கு வகிக்கிறது. நுகர்வில் மந்தநிலை ஏற்படும் பட்சத்தில், அது ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வெகுவாகப் பாதிக்கும். தற்போதைய நிலவரப்படி, நாட்டில் மக்களிடையே நுகர்வு சக்தி வெகுவாகக் குறைந்துள்ளதாகவே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உள்நாட்டு கார்கள் விற்பனை, இரு சக்கர வாகனங்கள் விற்பனை, டிராக்டர்கள் விற்பனை, வணிக வாகனங்கள் விற்பனை ஆகியவை வெகுவாகக் குறைந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

எப்எம்சிஜி நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களின் விற்பனை அளவு, கடந்த ஓராண்டில் வெகுவாகக் குறைந்துவிட்டது. ஆனால் இவையெல்லாம் பொருளாதார மந்தநிலையின் அறிகுறிதான் என்பதை உறுதியாகக் கூற முடியாது. அதேசமயம் மந்தநிலை வராது என்பதையும் உறுதியிட்டு கூற முடியாது என்பதும் பொருளாதார ஆலோசகர்களின் கருத்தாக உள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry