
உலக அளவில் கடல் மட்ட உயர்வு மற்றும் நிலத்தடி நீர் உறிஞ்சுதலால் வேகமாக மூழ்கி வரும் கடலோர நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் சென்னை உட்பட ஐந்து முக்கிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன. சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (Singapore’s Nanyang Technological University) நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள சுமார் 48 கடலோர நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், காலநிலை மாற்றத்தால் கடல் மட்டம் உயர்ந்து, நிலப்பகுதிகள் மூழ்கும் அபாயத்தை பல நகரங்கள் எதிர்கொண்டுள்ளன. இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் ஐந்து நகரங்களின் தற்போதைய நிலை மற்றும் அவற்றிற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.
Also Read : கனிமவளக் கொள்ளை: தொடர்கதையாகும் கொலைகள்! பூவுலகின் நண்பர்கள் சரமாரிக் கேள்வி?
1. அகமதாபாத், குஜராத்
* மூழ்கும் வேகம்: 2014 முதல் 2020 வரை ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ முதல் 5.1 செ.மீ வரை.
* பாதிக்கப்படும் மக்கள்: சுமார் 51 லட்சம் பேர்.
* வேகமாக மூழ்கும் பகுதி: பிப்லஜ் (ஆண்டுக்கு சராசரியாக 4.2 செ.மீ). இங்கு ஆடை நிறுவனங்கள் அதிகம்.
* முக்கிய காரணங்கள்: அதிகப்படியான நிலத்தடி நீர் உறிஞ்சுதல், கடல் மட்ட உயர்வு, அதீத மழைப்பொழிவு.
* எச்சரிக்கை: எதிர்காலத்தில் பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
* தடுப்பு நடவடிக்கைகள்: அகமதாபாத் மாநகராட்சி காலநிலை தடுப்பு செயல் திட்டத்தை வகுத்துள்ளது. இதில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நிலத்தடி நீரை மறுசீரமைத்தல் (ரீசார்ஜ்) ஆகியவை முக்கிய அம்சங்கள்.
2. கொல்கத்தா, மேற்கு வங்கம்
* மூழ்கும் வேகம்: 2014 முதல் 2020 வரை ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ முதல் 2.8 செ.மீ வரை.
* பாதிக்கப்படும் மக்கள்: சுமார் 90 லட்சம் பேர்.
* வேகமாக மூழ்கும் பகுதி: பாத்பரா (ஆண்டுக்கு சராசரியாக 2.6 செ.மீ).
* முக்கிய காரணங்கள்: நீர்நிலைகளில் இருந்து நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுதல்.
* அபாயங்கள்: நிலநடுக்க அபாயம், வெள்ளம், கடல்நீர் ஊடுருவல்.
* தடுப்பு நடவடிக்கைகள்: இந்திய அரசு நிலத்தடி நீர் மேலாண்மை, நீர்நிலைகளை வரைபடமாக்குதல், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைகளுடன் கட்டுமானங்களைக் கண்காணித்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
3. மும்பை, மகாராஷ்டிரா
* மூழ்கும் வேகம்: 2014 முதல் 2020 வரை ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ முதல் 5.9 செ.மீ வரை.
* பாதிக்கப்படும் மக்கள்: சுமார் 32 லட்சம் பேர்.
* வேகமாக மூழ்கும் பகுதி: கிழக்கு மடுங்காவில் உள்ள கிங்ஸ் சர்க்கிள் நிலையம் (ஆண்டுக்கு சராசரியாக 2.8 செ.மீ).
* முக்கிய காரணங்கள்: நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சுதல், மிக உயரமான கட்டிடங்கள், மெட்ரோ வளர்ச்சித் திட்டங்கள், ஈரநிலங்களை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துதல்.
* தடுப்பு நடவடிக்கைகள்: இந்திய அரசு நிலத்தடி நீர் மேலாண்மை, நீர்நிலைகளை வரைபடமாக்குதல் மற்றும் உள்கட்டமைப்பு விதிமுறைகளை உருவாக்குதல்.
4. சூரத், குஜராத்
* மூழ்கும் வேகம்: 2014 முதல் 2020 வரை ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ முதல் 6.7 செ.மீ வரை.
* பாதிக்கப்படும் மக்கள்: சுமார் 30 லட்சம் பேர்.
* வேகமாக மூழ்கும் பகுதி: கரஞ்ச் (ஆண்டுக்கு 6.7 செ.மீ).
* முக்கிய காரணங்கள்: விவசாயம், தொழில் மற்றும் வீட்டுப் பயன்பாடுகளுக்காக அதிகளவு நிலத்தடி நீர் உறிஞ்சுதல்.
* தடுப்பு நடவடிக்கைகள்: உகாய் அணையின் செயல்பாட்டை மேம்படுத்துதல், வெள்ளத்தைக் கட்டுப்படுத்துதல், மழைப்பொழிவை முன்னறிவிப்பதற்கான மாதிரிகள், வெள்ள பாதிப்புக்கான முன்னெச்சரிக்கை அமைப்புகள்.
5. சென்னை, தமிழ்நாடு
* மூழ்கும் வேகம்: 2014 முதல் 2020 வரை ஆண்டுக்கு சராசரியாக 0.01 செ.மீ முதல் 3.7 செ.மீ வரை.
* பாதிக்கப்படும் மக்கள்: சுமார் 14 லட்சம் பேர்.
* வேகமாக மூழ்கும் பகுதி: தரமணி (ஆண்டுக்கு சராசரியாக 3.7 செ.மீ).
* முக்கிய காரணங்கள்: விவசாயம், தொழில் மற்றும் வீட்டுப் பயன்பாடுகளுக்காக அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சுதல்.
* அரசு நடவடிக்கைகள்: நிலத்தடி நீர் மேலாண்மை, நீர்நிலைகளை வரைபடமாக்குதல், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கைகளுடன் கட்டுமானங்களைக் கண்காணித்தல் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு உருவாக்கியுள்ளது.
உலக நகரங்களின் படிப்பினைகள்:
ஜகார்த்தா, இந்தோனேசியா
வேகமாக மூழ்கிவரும் நகரங்களுள் ஒன்றாக ஜகார்த்தா கண்டறியப்பட்டுள்ளது. இதன் சில பகுதிகள் 1970களைக் காட்டிலும் 4 மீட்டர் அளவுக்கு மூழ்கியுள்ளன. இதன் காரணமாக, 1,200 கி.மீ தொலைவில் உள்ள போர்னியோ தீவில் ‘நுசந்தரா’ என்ற புதிய தலைநகரத்தைக் கட்டமைக்க இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. நிலத்தடி நீர் உறிஞ்சும் தேவையை நீக்குவதே இதன் நோக்கம். இருப்பினும், புதிய நகரம் பல்லுயிர் பெருக்க இடத்தில் கட்டமைக்கப்படுவதால் சுற்றுச்சூழல் தாக்கங்களுக்காக விமர்சிக்கப்படுகிறது.

டோக்கியோ எப்படி இந்த பிரச்னையை தீர்த்தது?
டோக்கியோ நகரத்தின் சில பகுதிகள் மூழ்குவதாகக் கண்டறியப்பட்டபோது, அந்நகரம் பிரச்சனையின் வேரைக் கண்டறிந்து தீர்க்க ஒரு வேறுபட்ட அணுகுமுறையைப் பின்பற்றியது. நிலத்தடி நீரை உறிஞ்சுவதில் கடுமையான கட்டுப்பாடுகளை டோக்கியோ செயல்படுத்தியதால் 1970களில் அந்நகரம் மூழ்குவது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது.
மேலும், டோக்கியோ ஒரு விரிவான நீர் விநியோக மேலாண்மை அமைப்பை உருவாக்கியது. நகருக்கு வெளியே உள்ள ஆறுகள் மற்றும் வனங்களில் உள்ள அணைகளில் இருந்து நீர் பெறப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, நிலநடுக்கத்தால் சேதமடையாத குழாய்கள் மூலம் வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் விநியோகிக்கப்படுகிறது. விஞ்ஞானிகள், இந்த நடவடிக்கையே டோக்கியோ மூழ்குவதை நிறுத்துவதில் பெரிதும் உதவியதாக வாதிடுகின்றனர்.
Also Read : தீவிர உடல்நல பிரச்னைகளை நகம் காட்டுமா? நகங்களில் ஏற்படும் மாற்றங்கள்…! நிபுணர்கள் எச்சரிக்கை!
டோக்கியோ அணுகுமுறையின் சவால்கள்:
தற்போது டோக்கியோ அதிக அளவில் நிலையானதாக இருந்தாலும், ஜப்பானின் வாசெடா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மிகுவெல் எஸ்டெபேன் கூற்றுப்படி, இதை நிர்வகிப்பதில் ஆகும் அதிக செலவுகள் காரணமாக, மற்ற நகரங்களால் இதை பரவலாகச் செயல்படுத்த முடியுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. இருப்பினும், சில ஆசிய நகரங்கள் டோக்கியோவின் அணுகுமுறையை உதாரணமாகப் பார்க்கின்றன. உதாரணமாக, 1970களில் தைவானில் தைபே நகரம் நிலத்தடி நீர் உறிஞ்சுவதைக் குறைத்து, மூழ்கும் வேகத்தை கட்டுப்படுத்தியுள்ளது.
முடிவுரை:
சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்கள் எதிர்கொள்ளும் இந்த சவாலை சமாளிக்க, டோக்கியோ போன்ற நகரங்களின் அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். நிலத்தடி நீர் மேலாண்மையில் கடுமையான கட்டுப்பாடுகள், நீர்நிலைகளை பாதுகாத்தல், நிலையான கட்டுமான முறைகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக செயல்படுத்துவது வருங்கால சந்ததிகளின் பாதுகாப்பிற்கு அத்தியாவசியமாகும்.
With Input from BBC
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry