அமெரிக்காவின் திடீர் இரட்டை நிலைப்பாடு! காஸாவை ஆக்கிரமிக்க வேண்டாம் என இஸ்ரேலுக்கு பைடன் எச்சரிக்கை!

0
29
The war between Israel and the Hamas entered its 10th day | Adobe

இஸ்ரேல் – ஹமாஸ் இயக்கம் இடையேயான போர் 10-வது நாளை எட்டியுள்ளது. இதுவரை இஸ்ரேலில் 1400 பேர் உயிரிழந்தனர். காசாவில் 2670 பேர் உயிரிழந்தனர். 9600 பேர் காயமடைந்துள்ளனர். காசாவில் 23 லட்சம் பேர் சிக்கியுள்ளனர். உயிரிழந்தவர்களில் 29 பேர் அமெரிக்கர்கள். காசாவில் மேலும் 600 அமெரிக்கர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவு அளித்துள்ளது. அதன் வெளிப்பாடாக 2 போர்க்கப்பல்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்புக்காக அமெரிக்க கடற்படை சார்பில் யுஎஸ்எஸ் போர்டு போர்க்கப்பல் ஏற்கெனவே மத்திய கிழக்கு கடல் பகுதியில் முகாமிட்டுள்ளது.

தற்போது ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ராணுவ அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஐசனோவர் போர்க்கப்பலும் இஸ்ரேலுக்கு விரைந்துள்ளது. இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ஹமாஸை அழிப்பது அவசியம். ஆனால் அதற்காக ஹமாஸ் பிடியில் உள்ள காசாவை முழுவீச்சில் இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது தவறு ” என்று கூறியுள்ளார். காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு “ஒரு பெரிய தவறு” என்றும் அவர் கூறுகிறார்.

சிபிஎஸ் தொலைக்காட்சிக்கு பைடன் அளித்துள்ளப் பேட்டியில், “ஹமாஸ், பாலஸ்தீன மக்களின் பிரதிநிதிகள் அல்ல. ஆகையால் இஸ்ரேல் மீண்டும் காசாவை முழுமையாக ஆக்கிரமிப்பது மிகப் பெரிய தவறாக முடியும். காசா ஆக்கிரம்ப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாது. ஹமாஸ் அகற்றப்பட வேண்டும், அதேநேரம் பாலஸ்தீன மாநில அந்தஸ்தை ஆதரிக்கிறோம், இது பல தசாப்தங்களாக அமெரிக்காவின் கொள்கையாக இருந்து வருகிறது.“ என்று தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் செல்வீர்களா என்ற கேள்விக்கு அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகு அழைக்கும்பட்சத்தில் டெல் அவிவ் செல்வேன் என்று கூறியுள்ளார்.

ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக லெபனான் மற்றும் சிரியாவில் இருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தினர், இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்கிய நிலையில், லெபனான் மற்றும் சிரியா மீது இஸ்ரேல் தொடர்ந்து வான்தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் இந்த போர் மேலும் விரிவடையும் அபாயம் நிலவுகிறது.

காசாவில் வான், கடல், தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்தப்போவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “மும்முனை தாக்குதல் உள்பட பல்வேறு தாக்குதல் நடவடிக்கை திட்டங்களை செயல்படுத்த ராணுவம் தயாராகி வருகிறது” என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு காசா எல்லையில் ராணுவ வீரர்களை சந்தித்தார். பின்னர் அளித்தப் பேட்டியில், ‘இனிமேல் தான் நிறைய நடக்கவுள்ளது’ என்று கூறினார். அதன் பிறகே மும்முனை தாக்குதல் குறித்த அறிவிப்பை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டது.

Also Read : இஸ்ரேல் – பாலஸ்தீனம் பிரச்சனையின் பின்னணி! ஹமாஸ் இயக்கம் தோன்றிய வரலாறு! The Israeli-Palestinian conflict!

இதனிடையே வடக்கு காசா மீது இஸ்ரேல் ராணுவம் எந்த நேரத்திலும் தரைவழி தாக்குதலை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வானிலை காரணமாக தரைவழி தாக்குதலை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வானிலை காரணமாக தரைவழி தாக்குதலை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. அதேவேளையில் காசா மீதான வான்தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் காசாவில் நிமிடத்துக்கு நிமிடம் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.

முன்னதாக ஈரான் ஓர் எச்சரிக்கை விடுத்திருந்தது. இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. காசாவை இஸ்ரேல் ஆக்கிரமித்தால் அது போர் எல்லையை விரிவடையச் செய்வதே ஆகும் என்று கூறியிருந்தது. மற்றொருபுறம், பாலஸ்தீனத்தின் வடக்கு காசாபகுதியில் இஸ்ரேலின் முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்த தயாராகி வருகின்றன. இந்தச் சூழலில் பைடனின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry