வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி உயர்கிறது! பணவீக்கம் அதிகரிப்பால் RBI முடிவு!

0
221

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ரெப்போ விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ(REPO) என்பது, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகவும். தற்போது ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியுள்ளதால், ஏனைய வங்கிகளும், தங்களது வாடிக்கையாளர் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும். இதனால் வீடு, வாகனம் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கக்கூடும்.

நிதிக் கொள்கைக்குழு கூட்டத்தின் முடிவை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது, “உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக உலகப் பொருளாதார மீட்சி பாதிக்கப்பட்டுள்ளது. விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சர்வதேச அளவில் நுகர்வுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பணவீக்கம் அதிகரிப்பதற்கு பெரும்பகுதி உக்ரைன் போர் காரணமாக இருக்கலாம். போரால் விநியோக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் பணவீக்கம் 6.7% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 5.7% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டது. பணவீக்க மதிப்பீடு இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டதில் ஆச்சரியமில்லை. ஏனெனில் இந்த உயர்வு மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

பணவீக்கம் உயரும் ஆபத்து தொடர்கிறது. தக்காளி விலையின் சமீபத்திய அதிகரிப்பு, கச்சா எண்ணெய் விலை பணவீக்கத்தை தூண்டியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் பணவீக்கம் 6 சதவீதத்திற்கு மேல் இருக்கும். பணவீக்கத்தை எதிர்பார்க்கப்படும் அளவுக்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தப்படும்.

தற்போதைய உக்ரைன் போர் மற்றும் கரோனா தொற்று பாதிப்பு இருந்தபோதிலும் இந்தியப் பொருளாதாரம் நெகிழ்ச்சியுடன் இருக்கிறது. பொருளாதார மீட்சி வேகத்தை எட்டியுள்ளது. ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என்ற கணபிப்பில் மாற்றம் இல்லை.” இவ்வாறு அவர் கூறினார்.

பிப்ரவரி மாதத்தில் 6.07 சதவீதமாக இருந்த பணவீக்கம் மார்ச் மாதத்தில் 6.95 சதவீதமாக உயர்ந்தது. இது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இல்லாத உயர்வு ஆகும். பண வீக்கத்தை கட்டுப்படுத்தவே ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry