நீர் நிலைகளை ஆக்கிரமித்துள்ள பங்காரு அடிகளார்? 8-ந் தேதி அகற்ற தமிழக அரசு முடிவு!

0
367

ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்குச் சொந்தமான அறக்கட்டளை மூலம் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, வணிக பயன்பாட்டுக் கட்டிடங்கள் உள்ளிட்டவை செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர், கீழ்மருவத்தூர், சோத்துப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இயங்கி வருகின்றன. இவற்றில் பெரும்பாலான கட்டிடங்கள் அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவர் கடந்த 2018-ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

உயர் நீதிமன்றத்தில் ராஜா தாக்கல் செய்துள்ள மனுவில், “மேல்மருவத்தூர், கீழ்மருவத்தூர், சோத்துப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான நீர்நிலைப் பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளிகள், கல்லூரிகள், திருமண மண்டபங்கள், வணிகக் கட்டிடங்கள், வாகன நிறுத்துமிடம், சித்தர் பீடத்தின் சில பகுதிகள் என எல்லாமே அரசு புறம்போக்கு நிலங்களிலும், நீர்நிலைகளிலும் கட்டப்பட்டிருக்கின்றன.

மேல்மருவத்தூர் ஏரியில் அடிகளார் திருமண மண்டபத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏரியிலேயே கார் பார்க்கிங், கட்டணக் கழிப்பிடம், ஜெனரேட்டர் அறை உள்ளிட்டவை வருவதால், அடிகளார் திருமண மண்டபத்திற்கு தடையில்லா சான்று பெறவில்லை. ஆனால் அந்த திருமண மண்டபம் பல வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சோத்துப்பாக்கம் நீர்நிலைகளில், வீடுகளும் கடைகளும் கட்டப்பட்டிருக்கின்றன. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி மீண்டும் பழைய நிலைக்கு நீர்நிலைகளைக் கொண்டு வரவேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

தகவல் உரிமை சட்டத்தின் மூலம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அந்த கல்யாண மண்டபமே முழுவதுமாக ஏரியில் இருப்பதாக அதிர்ச்சியூட்டும் தகவல் கிடைத்தது. நீர்நிலைகள் உட்பட 93 அரசு இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக மாவட்டம் நிர்வாகம் கூறுகிறது. ஆதிபராசக்தி கல்வி மற்றும் மருத்துவ அறக்கட்டளை மட்டுமின்றி தனி நபர்கள் சிலரும் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 22.03.22 அன்று மேல்மருவத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஏப்ரல் மாதத்திற்குள் இடிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலேயே இருந்தனர். இந்நிலையில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பாக ஆக்கிரமிப்புகளை இடிக்கத் தடை உத்தரவு பிறப்பிக்க கோரி மனு செய்தனர்.

ஏற்கெனவே பிறப்பித்த நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை இடிக்காத காரணத்தினால் ஜூன் 10-ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை இடித்துவிட்டு, 15-ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுத் தரப்பிற்கு உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, வரும் 8-ம் தேதி மேல்மருவத்தூர் ஏரி நீர்நிலைப் பகுதிகளில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு உள்ள 13 குடியிருப்பு வீடுகள் மற்று அடிகளார் திருமண மண்டபத்தின் சில பகுதிகளை அகற்ற செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல் நாத் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 8-ம் தேதி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேல்மருவத்தூர் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை வருவாய்த்துறையின் அகற்ற உள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry