கேரளாவில் தொழிற்சங்கம் என்ற பெயரில் நடக்கும் அட்டூழியம்! தமிழகத்தில் நிலங்களை வாங்கி குவிக்கும் மலையாளிகள்!

0
145

ஆயிரம் பேருக்கு மேல் வேலை செய்யக்கூடிய தொழிற்சாலைகள், கேரளாவில் எத்தனை இருக்கிறது? என்ற கேள்வியுடனேயே இந்த கட்டுரையை தொடங்கலாம். பாறசாலை முதல் காசர்கோடு வரை, பெரிய அளவிலான தொழிற்சாலைகள் எதுவும் கேரளாவில் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஏன் இல்லை என்கிற கேள்விக்கு கேரளத்தை இடதுசாரிகளிடம் பதிலும் இல்லை.

அரபு நாடுகளில் மிகப்பெரிய தொழிலதிபராக அறியப்படும் லூலூ மால் அதிபர் யூசுப் அலி, எத்தனையோ ஆண்டுகள் கழித்து இப்போது தான் கேரளாவில் கால் பதித்துள்ளார். ரியால்களிலும், தினார்களிலும் புரளும் யூசுப் அலி, தான் பிறந்த கேரளாவின் வளர்ச்சிக்கு கைகொடுக்காததற்கு காரணம், கேரளா முழுவதும் நிலவும் தொழிற்சங்க கெடுபிடிகள்தான்.

ஏற்கனவே சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் படுத்தும் பாடு போதாதென்று, இப்போது பாரதிய மஸ்தூர் சங்கம் எனும் வலதுசாரி தொழிற்சங்கமும் தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்திருக்கிறது.

Also Read : ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்! அடாவடி அமைச்சரால் வீதிக்கு வந்து போராடும் பால் உற்பத்தியாளர்கள்!

கேரளாவில் உள்ள பெரிய நகரங்களில், நான்கைந்து லக்கேஜ்களோடு நீங்களும் உங்கள் நண்பர்களும் பேருந்து நிலையத்தில் இறங்கினால், உங்களிடமிருந்து உரிமையோடு இரண்டு மூன்று லக்கேஜ்களை தங்கள் தோளில் தூக்கி வைத்துக் கொள்வார்கள் சிவப்புச் சட்டை அணிந்த தோழர்கள். விடயம் என்னவென்றால், உங்களோடு சேர்ந்து வரும் நான்கு பேரையும் அவர்கள் சட்டை செய்யவே மாட்டார்கள். அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் லக்கேஜ் மட்டும்தான். எதிர்த்து ஏதாவது நீங்கள் பேச நினைத்தால் நடப்பதே வேறு. இது ஒரு சின்ன எடுத்துக்காட்டு தான்.

கேரளாவில் மிகப் பெரிய தொழில்கள் என்றால், மர வேலைப்பாடுகளை செய்யும் நிறுவனங்கள், பிளைவுட் தொழிற்சாலைகள், மரம் சார்ந்த அனைத்து வகையான தொழில்கள், ரப்பர் மூலமாக உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகை ரப்பர் சார்ந்த உற்பத்தி நிலையங்கள், பாரகன், வாக்கரூ போன்ற புகழ்பெற்ற செருப்பு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் ஆகியவை தான்.

கொச்சியில் உள்ள வொண்டர்லா, கொல்லம் மாவட்டம் புனலூரில் உள்ள பேப்பர் மில், பாலக்காடு மாவட்டத்திலுள்ள அரிசி மில்கள், தேவிகுளம் பீர்மேடு தாலுகாக்களில் உள்ள தேயிலை கம்பெனிகள், கேரள மாநிலம் முழுவதும் பரவிக் கிடக்கும் முந்திரி தொழிற்சாலைகள், மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களில் உள்ள தேக்குமர தொழிற்சாலைகள் என்பதைத் தாண்டி பூதக்கண்ணாடி போட்டு தேடினாலும் கேரள மாநிலத்தில் ஆயிரம் பேருக்கு மேல் வேலை செய்யக் கூடிய எந்தத் தொழிற்சாலையும் இல்லை.

Also Read : அதிகம் உப்பு சாப்பிட்டா..? உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை ரிப்போர்ட்!

உலகில் இரண்டாவது பெரிய குழந்தைகள் ஆடை உற்பத்தி நிறுவனமான கை டெக்ஸ் உரிமையாளர் பாபு ஜேக்கப்பின் குரல் மொழியில் சொல்வதானால், கேரள மாநில அரசு கடைப்பிடிக்கும் தொழில் கொள்கைகள், அங்கு தொழில் செய்ய உகந்ததாக இல்லை என்பதேயாகும்.

50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆடை உற்பத்தியில், தன்னுடைய சொந்த மாநில மக்களுக்கு வேலை வழங்கிக் கொண்டிருந்த கை டெக்ஸ் நிறுவனம், கேரள மாநிலத்தில் ரூ. 3500 கோடி முதலீட்டில் 4 புதிய அலகுகளை உருவாக்கத் திட்டமிட்டிருந்தது.

ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த அவர்களுடைய அலகுகளில், கேரள மாநில அரசின் தூண்டுதலின் பேரில் தொடர்ச்சியாக ஒன்பது முறை நடத்தப்பட்ட சோதனையில் எரிச்சலுற்ற சாபு ஜேக்கப், ஒட்டுமொத்தமாக தன்னுடைய கை டெக்ஸ் நிறுவனம், கேரள மாநிலத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார்.

அவர் அறிவித்த அடுத்த நிமிடம், தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், சாபு ஜேக்கப் விரும்பினால் தனி ஜெட் விமானத்தை அனுப்பிவைக்கத் தயார் என்று அதிரடி காட்டினார்.
ஆனால் கை டெக்ஸ் நிறுவன அதிபர் சாபு ஜேக்கப்பின் அறிவிப்பு குறித்து கேரள மாநில தொழில் துறை அமைச்சர் பி ராஜீவும், முதல்வர் பினராயி விஜயனும், இதுவரை எவ்வித பதிலும் சொல்லவில்லை. இதிலிருந்து அவர்களுடைய தொழில் கொள்கைகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

Watch : Online Rummyயை தடை செய்ய முடியாது | தமிழக அரசு சட்டத்தால் நோ யூஸ் | Cyber Law Advocate Karthikeyan Interview

2004 ஆம் ஆண்டு பாலக்காடு மாவட்டம் பிளாச்சிமடையில் அமைக்கப்பட்டிருந்த கோக்கோ கோலா நிறுவனத்தால், அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் நஞ்சாவதாகக் கூறி எழுந்த போராட்டத்தின் அடிப்படையில், கோலா நிறுவனம் அங்கிருந்து விரட்டப்பட்டு திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள சிப்காட் வளாகத்தில் தஞ்சமடைந்தது.

2018-ஆம் ஆண்டில் ரயில் பெட்டி உற்பத்தி நிலையத்தை பாலக்காடு மாவட்டத்தில் அமைக்க இருப்பதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால் அதன் அதிகாரிகள் நடத்திய முன்னேற்பாட்டு விசாரணையில், ரயில்பெட்டி தொழிற்சாலையை தொடங்கினால், அங்குள்ள தொழிற்சங்கங்கள் ஆண்டு முழுவதும் கதவடைப்பு நடத்துவார்கள் என்கிற முடிவின் அடிப்படையில் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
இதற்காக டெல்லியில் உள்ள ரயில் பவனத்தின் முன்பு, கேரள மாநில முதல்வர் தோழர் பினராயி விஜயன், தன் மாநில எம்.பி.க்களுடன் மறியல் நடத்தியும் வேலை நடக்கவில்லை.

சமீபத்தில் அர்ஜுனா நேச்சுரல்ஸ் என்கிற 300 கோடி மதிப்பிலான ஆயுர்வேத கம்பெனியும், கேரள மாநில அரசின் தொழில் கொள்கைகளை சகிக்க முடியாமல் அங்கிருந்து வெளியேறி சென்னைக்கு வந்து விட்டது.

இன்குலாப் ஜிந்தாபாத் என்கிற முழக்கம் உரிமை மறுக்கப்படும் போது எழுப்பப்பட்டால் பிரச்சனை இல்லை. ஆனால் சதா சர்வகாலமும் உணவுக்கு முன்னும், உணவுக்குப் பின்னும் கூட அதை எழுப்புவதில் என்ன ஆனந்தம் இவர்களுக்கு!

கேரளாவில் இன்றைக்கிருக்கும் ஒரே ஒரு பாரம்பரியமான தொழிற்சாலை என்றால் அது நாயர் டீ கடைகள் மட்டும்தான். சென்னை நகரைச் சுற்றி நிரம்பிக் கிடக்கும் தொழிற்சாலைகளில், 5 விழுக்காடு கூட கேரள மாநிலம் முழுவதும் இல்லை. மூன்று பேருக்கு மேல் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டால், தொழிலை வளப்படுத்துவதை விட, அந்த நிறுவனத்தின் வாசலில் தொழிற்சங்க கொடி ஏற்றுவதிலேயே குறியாக இருப்பார்கள்.

Also Watch : டீசல் கொள்முதலில் மெகா ஊழல் | போக்குவரத்து கழக மெகா முறைகேடு | Tamil Nadu Transport Scam | CK Thulasidoss

ஒரு உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், அடிமாலியிலிருந்து மூணாறு செல்லும் சாலையில் ஈஸ்டர்ன் மசாலா நிறுவனம் செயல்பட்டு வந்தது. தொழிற்சங்கங்களின் கைங்கரியத்தில், அந்த ஆலை தற்போது தேனியிலிருந்து போடி செல்லும் வழியில் கோடாங்கிபட்டியில் இயங்குகிறது. மசாலா பொருட்கள் இங்கு தயாரிக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.

லட்சக்கணக்கானோர் வேலை செய்யும் தேயிலை கம்பெனிகளில் தொழிற்சங்கங்கள் என்ன செய்கிறது என்று பார்த்தால்..! தொழிற்சங்க தலைவர்கள் கம்பெனி கொடுத்த வீட்டில் கவனமாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பார்கள். தேயிலை எஸ்டேட்டில், மூணாறு – மறையூர் வரை சாலை வசதி உள்ளது. ஏனென்றால் அங்கே மலையாளிகள் அதிகம் வசிக்கிறார்கள். தமிழர்கள் அதிகம் வசிக்கும் எஸ்டேட்டுகளில் சாலை வசதியே கிடையாது.

மூணாறில் 55 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிலான நிலங்களை பத்திரப்பதிவே செய்ய முடியாது. இது கண்ணன் தேவன் ஹில்ஸ் பிளான்டேஷன் ஆக்ட்-ன் கீழ் இருக்கிறது. சுருங்கச் சொன்னால் டாடா நிறுவனம் வசம் இருக்கிறது. அவர்களது எஸ்டேட்டுக்கு அரசு சாலை அமைத்துத் தர வேண்டும்.

இன்றைக்கு கேரளாவில் இருந்து பிற மாநிலங்களிலும், பிற நாடுகளிலும் வாழ்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. ஒரு சின்ன மாநிலத்தில் இந்த எண்ணிக்கை என்பது மூன்றில் ஒரு மடங்கு. வேலை வாய்ப்பின்மையும், தொழில் சார்ந்து நகர முடியாத நிலையிலும்தான், கேரள மாநிலம் மலையாளிகளை வெளிநாட்டுக்கு கூட்டங் கூட்டமாக அனுப்பியது.

இதையெல்லாம் தாண்டி கேரளாவிற்கிருக்கும் முதன்மை வருமானம் சுற்றுலா. சுற்றுலா மட்டும் இல்லையென்றால் கேரளாவின் ஒட்டுமொத்த வருமானத்தில் பாதி இல்லை. அதுபோல இந்தியாவிற்கு அன்னியச் செலாவணியை ஈட்டி கொடுப்பதில் மலையாளிகள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.

இன்றைக்கு ஒரு தொழிற்சாலையை கேரளாவில் தொடங்க வேண்டுமானால், வாங்குவதற்கு இடமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பாறசாலை முதல் காசர்கோடு வரை, எர்ணாகுளம் முதல் தாளூர் வரை வாங்குவதற்கு எங்கினும் பட்டா நிலம் இல்லை.

அதனால் தான் தமிழகத்தில் இருக்கும், செழிப்பான இடங்களையும், காய்ந்து கரண்டு போன வனாந்திரங்களையும் மலையாளிகள் வாங்கத் துடிக்கிறார்கள். தொழிற்சங்க பிரச்சனை இல்லை என்பதால் இங்கு தொழில் தொடங்க பேரார்வம் காட்டுகிறார்கள்.

கட்டுரையாளர் :- ச. அன்வர் பாலசிங்கம், ஒருங்கிணைப்பாளர், பெரியாறு – வைகை பாசன விவசாயிகள் சங்கம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry