காலாவதியாகிறதா நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி லைசென்ஸ்? முத்துராஜனுக்கு சாதகமாக மாறும் சூழல்! சகோதர யுத்தம் பார்ட் – 2!

0
11

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நாளுக்கு நாள் அரங்கேறும் மாற்றங்களால் ஊழியர்கள் கவலையில் இருக்கின்றனர். இதனூடே, தொலைக்காட்சியின் லைசென்ஸ்சும் காலாவதியாகப்போவதாக பரவும் தகவல் அவர்களை நிம்மதியிழக்கச் செய்திருக்கிறது.

விவி மினரல்ஸ் நிறுவனர்களான வைகுண்டராஜன், அவரது தம்பி ஜெகதீசன் ஆகியோரிடையேயான சொத்து பிரச்சனை குறித்து வேல்ஸ் மீடியாவில் ஏற்கனவே பதிவிட்டிருந்தோம். அவர்களது Alliance Braodcastig Pvt. Ltd., நிறுவனம் மூலம் நிர்வகிக்கப்படும் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில், சகோதர யுத்தம் காரணமாக ஊதியப் பிரச்சனை இருப்பதையும் குறிப்பிட்டிருந்தோம். வைகுண்டராஜன் மகன் சுப்பிரமணியன், ஜெகதீசன் மகன் முத்துராஜன் இருவரிடையே பிணக்குகள் நிலவும் நிலையில், சட்ட ரீதியாக முத்துராஜன் கையே ஓங்கியிருப்பதையும் சுட்டிக்காட்டியிருந்தோம்.   

Also Read : சம்பளமின்றி தவிக்கும் நியூஸ் 7 தமிழ் ஊழியர்கள்! சகோதர யுத்தத்தால் உதயமாகிறது புதிய தொலைக்காட்சி!

இந்தச் செய்தியின் எதிரொலியாக, தொலைக்காட்சியின் நிர்வாகத்தை கவனித்து வரும் சுப்பிரமணியன் 15 சதவிகித பிடித்தத்துடன், ஒருமாத ஊதியத்தை வழங்கியுள்ளார். ஆனாலும், கடந்த ஒரே வாரத்தில் ஊழியர்கள் சுமார் 25 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்த பரபரப்புக்கு மத்தியில், இருக்கும் ஊழியர்களை மேலும் கவலை கொள்ளச் செய்வது லைசென்ஸ் விவகாரம். 10.01.2007-ல் Alliance Braodcastig Pvt. Ltd., நிறுவனத்துக்கு தொலைக்காட்சி நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. 09.01.2017ல் உரிமம் காலாவதியாகிறது. 2018 அக்டோபர் மாதம், விவி மினரல்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஐ.டி. ரெய்டு நடந்தது. இதற்குப் பின்னர் உரிமம் புதுப்பிக்கப்பட்டாலும், அதற்கான தொகை 09.01.19 வரை (மத்திய அரசு இணையதளத்தில் சிகப்பு வண்ணத்தால் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதி) செலுத்தப்படாமல் இருக்கலாம் என தெரிகிறது.

ஆதாரம் : http://broadcastseva.gov.in/webpage-User-tvchannels

யார் உரிமத்தை புதுப்பிப்பது என்பதில் சுப்பிரமணியனுக்கும், முத்துராஜனுக்கும் பிரச்சனை இருப்பதால், உரிமம் காலாவதியாகியாகிவிட்டதாக கூறப்படுகிறது. எனவே உரிமத்தை தன்பெயரில் வாங்க சுப்பிரமணியன் முயற்சித்து வருகிறார்.  ஆனால், வருமானவரி மற்றும் அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் இருப்பதால், அவருக்கு உரிமம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், வழக்கில் முத்துராஜன் பெயர் சேர்க்கப்படாததால், அவர் உரிமம் பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இது ஒருபுறமிருக்க, Alliance Braodcastig Pvt. Ltd., நிறுவனத்தில் சாய் மனோஜ் நம்புரு, இந்திரம்மா பொம்பி ரெட்டி, பொம்மி ரெட்டி ஆகியோர் இயக்குநர்களாக உள்ளனர்.  வைகுண்டராஜன் மகன்கள் வேல்முருகன், சுப்பிரமணியன் மற்றும் ஜெகதீசன் மகன்கள் செந்தில்ராஜன், முத்துராஜன் ஆகியோர் இணை இயக்குநர்களாக இருக்கிறார்கள்.

இதில், செந்தில்ராஜனையும், முத்துராஜனையும் நீக்குவதற்கான முன்னெடுப்புகளை சுப்பிரமணியன் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால், தொலைக்காட்சிக்கான தொழில்நுட்பக் கருவிகள் முத்துராஜன் பெயரில் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அத்துடன், யு டியூப் மற்றும் வெப்சைட் டொமைன் ஆகியவை முத்துராஜன் பெயரில் இருப்பதாக கூறப்படுகிறது.

எனவே, இயக்குநர்கள் குழுவில் இருந்து அவர்களை நீக்கிவிட்டால், தொலைக்காட்சி நிர்வாகம் முழுமையையும் கைப்பற்றலாம் என்பது சுப்பிரமணியின் எண்ணம் என்கின்றனர். இதற்கு தேவையான ஆவணப்பூர்வ உதவிகளை நெல் மணியும், வனவாசம் சென்றவரும், வஉசியின் பட்டப்பெயர் கொண்டவரும் செய்கிறார்கள் என்று நியூஸ் 7 வட்டாரங்கள் கூறுகின்றன.

அதேநேரம், தொலைக்காட்சி நிர்வாகத்தை சட்டப்பூர்வமாக கையிலெடுத்துவிட வேண்டும் என்பதில் முத்துராஜன் தரப்பும் தீவிரம் காட்டுகிறது. அவருக்குச் சாதகமாகன சூழலே நிலவுவதாக வழக்கறிஞர்களும் கூறுகின்றனர். இப்படி, முத்துராஜன் கை ஓங்குவது, சுப்பிரமணியின் தீவிர ஆதரவாளர்களான  நெல் மணி, வனவாசம், வஉசியின் பட்டப்பெயர் கொண்டவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

முத்துராஜன் வசம் நிர்வாகம் சென்றுவிட்டால், எந்த தொலைக்காட்சிக்கு செல்வது, வாய்ப்பு கிடைத்தாலும், இதைப்போன்று சில லகரங்களுடன், முக்கியப் பொறுப்பு கிடைக்குமா?  வெளிவட்டாரங்களில் ஆதிக்கம் செலுத்த முடியுமா? என்பது போன்ற கேள்வி அவர்களது மனதைப் பிசைகிறது.
Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry