இகாடா மற்றும் டிகாடாவின் சாகசங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானவை. இரண்டு குறும்புத்தனமான, நல்ல உள்ளம் கொண்ட குழந்தைகளைப் பற்றி பிரபல குழந்தைகள் புத்தக எழுத்தாளரும், கதை சொல்லியுமான சித்ரா ராகவன் ‘இகாடா & டிகாடா’ என்ற பெயரில் தொடர் சிறுகதைகள் எழுதி வருகிறார்.
‘இகாடா & டிகாடா’ என்ற மையப் பெயரைத் தாங்கி வரும் சிறுகதைகளை குழந்தைகள் நேசிப்பதுடன், நிஜ உலகில் பல சூழ்நிலைகளைக் கையாள இந்த நாவல் குழந்தைகளுக்கு உதவுகிறது. இதுவே இந்த தொடர் நாவலின் சிறப்பு அம்சமாகவும் இருப்பதால், குழந்தைகளின் மனதை கொள்ளை கொண்டு அனைத்து நாவல்களும் வெற்றி வரிசையில் இடம்பெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக சித்ரா ராகவன் எழுத்தில் IKATA & TIKATA வரிசையின் அடுத்த சிறுகதையாக ‘MIDNIGHT MEDLEY’ புத்தகம் வெளியாகியுள்ளது. 2ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது என புத்தக ஆசிரியர் சித்ரா ராகவன் குறிப்பிடுகிறார்.
புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடைபெற்றது. டெக்கன் கிரானிக்கல் நாளிதழின் ரெசிடன்ட் எடிட்டர் ராமசாமி மோகன், பிரபல ஜோதிட ஆலோசகர் பாரதி ஸ்ரீதர், நியூஸ் 7 தொலைக்காட்சியின் மேனேஜிங் எடிட்டர் தியாகச் செம்மல், ரெயின் ட்ராப்ஸ் சேரிட்டி பவுண்டேன் நிறுவனர் அரவிந்த் ஜெயபால், ரேடியோ ஜாக்கி சக்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். ராமசாமி மோகன் முதல் பிரதியை வெளியிட, அரவிந்த் ஜெயபால், RJ சக்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய பிரபல ஜோதிட ஆலோசகர் பாரதி ஸ்ரீதர், “IKATA & TIKATA என்ற குறுப்புக்கார கதாபாத்திரங்களை உருவாக்கி தொடர்ந்து எழுதி வரும் சித்ரா ராகவனுக்கு பாராட்டுகள். இப்போதுள்ள பல பிள்ளைகளுக்கு புத்தகங்களை படிக்கும் அளவுக்கு பொறுமை இல்லை என்பதால், IKATA & TIKATA தொடரின் சிறுகதைகளை அனிமேஷனாகவும், ஒளி – ஒலி வடிவில் சிறு சிறு சீரிஸாகவும் கொண்டு வர வேண்டும். இதனால் குழந்தைகள் சிறுகதைகளிலுள்ள நல்ல அம்சங்களை எளிதாக உள்வாங்க முடிவதுடன், பெரியவர்களும் பார்த்து குழந்தைகளுக்கு போதிப்பார்கள்” என்று கூறினார்.
நியூஸ் 7 தொலைக்காட்சியின் மேனேஜிங் எடிட்டர் தியாகச் செம்மல் பேசும்போது, “குழந்தைகளுக்கான எழுத்து எது? எப்படி எழுத வேண்டும் என்ற வரையறைக்குள் தமிழ் எழுத்துலகம் வந்தே 15 ஆண்டுகள்தான் இருக்கும். 5 – 6 வயது குழந்தைகளுக்கான படைப்பாற்றல் அடிப்படையில், தங்களைத் தாங்களே உருவகப்படுத்திக்கொள்ளுதல், கேள்வி கேட்டல் போன்ற அவர்களின் திறனுக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில் பெற்றோர் உள்ளனர்.
புத்தகங்கள் செய்துகொண்டிருந்த வேலையைத்தான், பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டமாக எலக்ட்ரானிக் கேட்ஜெட்ஸ் எனப்படும் மின்னணு பொருட்கள் கையில் எடுத்துள்ளன. இந்த பிரம்மாண்டத்தைப் பார்த்து எழுதுவதை பலர் நிறுத்திவிட்டனர். அதேநேரம், பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொண்டு பலர் தொடர்ந்து எழுதி வருகின்றனர். எழுதுவதை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை.
புதுமையை நோக்கி போகும் சமூகமாக நாம் மாறியதால், புத்தங்களை நம் கையை விட்டு போய்விட்டது. இதுபோன்ற சூழலில் சித்ரா ராகவனின் முயற்சி பிரமிப்பாக இருக்கிறது. அவரை அங்கீகரிப்பது அவசியம், அவரது புத்தகத்தை அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும்” இவ்வாறு அவர் பேசினார்.
RJ சக்தி பேசும்போது, “IKATA & TIKATA சிறுகதைத் தொடரை PODCASTல் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தற்போது வெளியாகியுள்ள IKATA & TIKATA வரிசையின் அடுத்த சிறுகதையான ‘MIDNIGHT MEDLEY’யை படித்த இரண்டு சிறுமிகள், அது ஏற்படுத்திய தாக்கத்தை மேடையில் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.
Also Read : மதுக்கடை இல்லாத மதுவிற்பனை! மதுபாட்டில்கள் டோர் டெலிவரி! விற்பனையை முறைப்படுத்த சூப்பர் வழி! Vels Exclusive
எழுத்தாளர் சித்ரா ராகவன் ’இகடா டிகடா’ என்ற தொடரில் 13 நூல்களை வெளியிட்டுள்ளார். அவற்றில் உடன்பிறப்புகளின் குறும்புத்தனமான கதாபாத்திரங்களை சித்தரிக்கும் 13 தனிப்பட்ட சிறுகதைகள் உள்ளன. எஞ்சிய புத்தகங்கள் குழந்தைகளின் நடத்தையில் முன்னேற்றம் மற்றும் அவர்களின் சமூக மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்துவதாக உள்ளன.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry