சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.50 உயர்வு! பெட்ரோல், டீசல் விலையும் அதிகரிப்பு! விலை மேலும் எகிறும் என்பதால் மக்கள் அச்சம்!

0
58

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 76 காசு அதிகரித்திருக்கிறது. அதேபோல் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் 137 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் ஒரு லிட்டர் 76 காசுகள் விலை உயர்ந்து ரூ.102.16 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ. 92.19 விற்பனை செய்யப்படுகிறது.

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்ததால் 5 மாநில தேர்தலுக்கு பிறகு எரிபொருட்களின் விலை அதிகரிக்கும் என எதிர்ப்பார்த்த நிலையில், தற்போது அவற்றின் விலை உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 2 சதவிகிதம் உயர்ந்து 118 டாலரில் வர்த்தகமாகிறது. இதன் காரணமாக நேற்று முன்தினம் மொத்த விற்பனையில் டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் உயர்த்தப்பட்டது.

இதன் தாக்கத்தால், பெட்ரோல் ஒரு லிட்டர் 76 காசுகள் விலை உயர்ந்து ரூ.102.16 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ. 92.19 விற்பனை செய்யப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களிலும் இதே அளவுக்கு விலை உயர்வு இருக்கும் என்றும், மொத்தமாக லிட்டருக்கு ரூ.25 வரை உயர்த்தப்படலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுமட்டுமின்றி, தமிழகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 967 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமையல் எரிவாயு விலை கடந்த ஓராண்டின் 9 தவணைகளில் ரூ.255 உயர்த்தப்பட்டிருக்கிறது. இது 36% உயர்வு ஆகும்.

இந்தியாவில் ஏற்கெனவே சமையல் எண்ணெய், காபி தூள், டீ தூள், நூடுல்ஸ் என பல்வேறு வகை உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக விநியோக சங்கிலி தடைப்பட்டதே சமையல் எண்ணெய் போன்றவற்றின் விலை கணிசமாக உயரக் காரணமாக கூறப்படுகிறது.

நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் 6 சதவீதமாக இருந்த பணவீக்கம் தற்போது 7 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதேபோல, மொத்தவிலை பணவீக்கமும் 13.11 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. கோதுமை, பாமாயில் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்வு காரணமாக அவற்றை கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலையை 10 சதவிகிதம் வரை நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையேற்றம் வெகுவாகப் பாதிக்கும் என்பதால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. விலை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுவதால் மக்கள் மத்தியில் அச்சமும் ஏற்பட்டுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry