முறைகேடுகளைத் தடுக்க எங்களுக்கும் சீருடை வேண்டும்! காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் வேண்டுகோள்!

0
177

தமிழக காவல்துறையில், காவல்துறை தலைமை அலுவலகங்களில் ஆவணப் பணிகளுக்காக அமைச்சுப் பணியாளர்கள் பணியில் உள்ளனர். சென்னை டிஜிபி அலுவலகம், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் தமிழகம் முழுவதும் எஸ்பி, டிஐஜி, ஐஜி அலுவலகங்களில் ஏராளமான அமைச்சுப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

காவல் துறையினருக்கு சம்பளம் வழங்குதல், உத்தரவு ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகப் பிரிவு உள்ளிட்ட பணிகளை இவர்கள் மேற்கொள்கின்றனர். அந்த வகையில், காவல் அலுவலக கண்காணிப்பாளர்கள், நிர்வாக அலுவலர், முதுநிலை நிர்வாக அலுவலர், டைப்பிஸ்ட்டுகள், கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள், இளநிலை உதவியாளர்கள், உதவியாளர், அலுவலக உதவியாளர், தகவல் பதிவாளர் போன்ற பதவிகள் உள்ளன.

Also Read : சாராயக் கடை வருமானத்தை நம்பி அரசு இயங்கலாமா? முதலமைச்சருக்கு அபலைப் பெண்ணின் கண்ணீர்க் கடிதம்!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், காவல்துறை அமைச்சுப் பணியாளர் ஒருவரை வேல்ஸ் மீடியா சார்பில் தொடர்பு கொண்டு, கோரிக்கைகள் குறித்து கேட்டோம். அடையாளத்தை மறைத்து பேசிய அவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், காவல்துறை அமைச்சுப் பணியாளர்களின் தனிப்பட்ட பணித்திறன் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், சிறப்பாக பணிபுரியும் நபர்களை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் பதவி உயர்வு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஆனால், இது அறிவிப்பாகவே உள்ளது.

எங்களது வேலைப்பளுவை அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. தொடர்ந்து காவல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகிறது, ஆயிரக்கணக்கில் காவலர்கள், குடிமைப் பணி மற்றும் இந்திய ஆட்சிப்பணி தேர்வு மூலம் காவல் அதிகாரிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். காவலர்களின் எண்ணிக்கை உயர்வதற்கு ஏற்ப அமைச்சுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை. அதிகாரிகள் மட்டத்திலான நிர்வாக அலுவலர், முதுநிலை நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு மட்டும்தான் பணிநியமனம் நடைபெறுகிறது.

Also Read : வைக்கம் போராட்டத்தில் ஈவெராவின் பங்கு என்ன? உண்மையை உடைக்கும் எழுத்தாளர் ஜெயமோகன்!

அலுவலகத்தில் கோப்புகளை எழுதுதல் உள்ளிட்ட அடிப்படை பணிகளை செய்யக்கூடிய உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டால்தான் மொத்த அலுவலகத்துக்கும் வேலைப் பளு குறையும். கண்காணிப்பாளர், நிர்வாக அலுவலர், முதுநிலை நிர்வாக அலுவலர் போன்றவர்கள் வேலை வாங்கும் இடத்தில் இருப்பவர்கள், உதவியாளர், இளநிலை உதவியாளர்கள்தான் வேலை செய்யும் இடத்தில் இருப்பவர்கள் என்பதை அரசு உணர வேண்டும்.

இதற்கெல்லாம் மேலாக, காவல் அமைச்சுப் பணி அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் தொடங்கி அதற்கு மேலான பதவியில் இருப்பவர்களுக்கு பிரத்யேக சீருடை தந்தால் சிறப்பாக இருக்கும்.
காக்கி சீருடை வேண்டும் என்று நாங்கள் கேட்கவில்லை. அலுவலக உதவியாளர் – டைப்பிஸ்ட் போன்றோர், அலுவலகத்துக்கு குறைகள் மற்றும் தேவைகளுக்கு நிவாரணம் தேடி வரும் காவலர்களை தவறாக வழிநடத்துகின்றனர். காவலர்களிடமே இவர்கள் கையூட்டு பெறுவதும் நடக்கிறது.

Also Read : செயற்கை நுண்ணறிவு மூலம் இயக்கப்படும் டிராஃபிக் சிக்னல்! சென்னையில் நெரிசலைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறை!

பிரத்யேக சீருடையோ அல்லது நீதிமன்ற ஊழியர்கள் பயன்படுத்தும் கோட் போன்றோ அல்லது பதவிகளை பளிச்சென தெரியப்படுத்தும் வகையிலான அடையாள வில்லைகளோ இருந்தால், நிவாரணம் தேடி வரும் காவலர்கள் சரியான அலுவலரை அணுக ஏதுவாக இருக்கும். கீழ்நிலைப் பணியாளர்கள், அவர்களை தவறாக வழிநடத்த முடியாது, கையூட்டு பெறுவதும் தடுக்கப்படும்.

காவல்துறையை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எங்களது கோரிக்கைகளை பரிசீலித்து, நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே உரிய அறிவிப்பை வெளியிடுவார் என நம்புகிறோம்.” இவ்வாறு அவர் கூறினார். வீரப்ப மொய்லி தலைமையிலான நிர்வாக மறுசீரமைப்பு ஆணையக் குழு, அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சீருடை வழங்க வேண்டும் பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry