குறையும் தக்காளி விலை! 150% வரை உயரப்போகும் வெங்காயம் விலை! எச்சரிக்கும் ரிப்போர்ட்!

0
32
Onion prices likely to shoot up by this month | GETTY IMAGE

தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வந்த தக்காளியின் விலை சில தினங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. தக்காளியைத் தொடர்ந்து வெங்காயத்தின் விலையும் ஏறக்கூடும் என்று சந்தை ஆய்வு நிறுவனமான CRISIL கூறியுள்ளது.

அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிக வெப்பநிலை மற்றும் பருவமழையின் எதிர்மறையான தாக்கமே இதற்குக் காரணமாக இருக்கலாம். நாட்டில் தற்போது வெங்காயத்தின் விலை சராசரியாக கிலோ ரூ.25க்கு விற்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் இறுதியில் இருந்து வெங்காய விலை படிப்படியாக உயரும். செப்டம்பர் மாதத்தில் வெங்காய விலை கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்கப்படலாம். இருப்பினும் கடந்த 2020-ல் ஏற்பட்ட வெங்காய விலை உயர்வுபோல் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

வரத்து – தேவை இடையேயான ஏற்றத்தாழ்வால் இந்த விலையேற்றம் ஏற்படும். சில்லறைச் சந்தையில் இது செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து எதிரொலிக்கத் தொடங்கும். ராபி பருவத்தில் அறுவடையாகும் வெங்காயங்களின் ஆயுட்காலம் சற்று குறைவுதான். 1 முதல் 2 மாதங்களில் அவை அழுகிவிடும்.

Also Read : அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கான வழிகாட்டி மதிப்பு கடும் உயர்வு! வருவாய்க்காக மக்களை கசக்கிப் பிழிவதா என மருத்துவர் ராமதாஸ் கண்டனம்!

அதுதவிர பிப்ரவரி – மார்ச் காலகட்டத்தில் வெங்காயத்தை பதற்றத்தில் வாங்கிக் குவித்தோர் அதிகம். வெளிச்சந்தையில் வெங்காய இருப்பு குறையத் தொடங்கிவிட்டது. ஆகஸ்ட் இறுதியில் கையிருப்பு வெகுவாகக் குறையும். இதனால் தட்டுப்பாடு காலம் 15 முதல் 20 நாட்கள் நீடிக்கும். இதன் விளைவாக வெங்காய விலை ஏறும்.

காரிஃப் பருவ வெங்காய அறுவடை அக்டோபரில் தொடங்கும். அதன்பின்னர் காரிஃப் வெங்காயம் சந்தைக்கு வருவது அதிகரித்தால் வெங்காய விலை கட்டுப்பாட்டுக்கு வரும். அக்டோபர் – டிசம்பர் விழாக்காலத்தில் வெங்காய விலை நிலைத்தன்மை அடையும்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையில் வெங்காய விலை குறைந்து மக்களுக்கு ஆறுதல் அளித்தது. பருப்பு, தானியங்கள், காய்கறி விலை ஏறியது. இந்தச் சூழலில் காரிஃப் பருவத்தில் வெங்காயம் விதைக்கும் விவசாயிகள் மத்தியில் விலைவாசி உயர்வு தயக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக வெங்காயம் விதைத்தல் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 8 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதேபோல் வெங்காய விளைச்சலும் கடந்த ஆண்டைவிட 5 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டில் ஒட்டுமொத்த வெங்காய உற்பத்தி 29 மில்லியன் மெட்ரிக் டன் என்று கணக்கிடப்படுகிறது. இது கடந்த 2018 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தைக் கணக்கில் கொள்ளும்போது 7 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டு வெங்காய வரத்தில் பெரிய அளவு தட்டுப்பாடு இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஆகஸ்ட், செப்டம்பர் மழை நிலவரம் பொறுத்தே வெங்காயம் விளைச்சல் இருக்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் வெங்காய வர்த்தக மையமான மகாராஷ்டிராவின் லாசல்கானில் பெஞ்ச்மார்க் ஒரு குவிண்டால் ரூ.1,250ல் இருந்து வியாழக்கிழமையன்று ரூ. 1,300 ஆக உயர்ந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு விலை குவிண்டால் ரூ.950 ஆக இருந்தது. கோயம்பேடு சந்தையில், வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாயாக விற்கப்படுகிறது. வெள்ளை வெங்கயாம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்யாகிறது.

கோயம்பேடு சந்தையில் இரண்டு நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளியின் விலை 150 ரூபாயாக இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் கிலோவிற்கு 30 ரூபாய் குறைந்து 120 ரூபாய் வரை விற்கப்பட்டது. இதில், முதல் ரக தக்காளி 120 ரூபாயாகவும், இரண்டாம் ரக தக்காளி கிலோவிற்கு 80 ரூபாயாகவும் விற்பனையானது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry