ஏசியில் திடீர் மின்கசிவு! அறையில் தீப்பற்றியதால் தூங்கிக் கொண்டிருந்த கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழப்பு!

0
6

மதுரையில் ஏ.சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தூங்கி கொண்டிருந்த கணவன்மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை ஆனையூர் அருகே உள்ள எஸ்விபி நகரைச் சேர்ந்த சக்திகண்ணன் என்பவர் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று இரவு பிள்ளைகள் இருவரும் கீழே உள்ள அறையில் படித்துவிட்டு அங்கேயே உறங்கிய நிலையில், மாடியில் உள்ள அறையில் சக்தி கண்ணன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகிய இருவரும் உறங்கியுள்ளனர்.

நள்ளிரவில் வீட்டு அறையில் உள்ள ஏசியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு கரும் புகை சூழத் தொடங்கியுள்ளது. அறையினுள் இருந்து இருவரும் வெளியே வர முயன்றபோது, தீ கொளுந்துவிட்டு எரியத் தொடங்கி, இருவரது உடலிலும் தீப்பற்றியுள்ளது. இதனால் சம்பவ இடத்திலயே இருவரும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை வீட்டின் மாடியில் இருந்து கரும்புகை வெளியே வந்திருப்பதை, பக்கத்து வீட்டில் இருப்பவர்களும், வீட்டின் கீழே தூங்கி கொண்டிருந்த அவர்களது மகனும், மகளும் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து சக்தி கண்ணனின் 17 வயது மகன் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தீயணைப்புத் துறையினர், விரைவாக செயல்பட்டு மாடியில் உள்ள அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சக்தி கண்ணன் மற்றும் அவரின் மனைவி இருவரும் தீயில் கருகி உயிரிழந்தது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கூடல்புதூர் காவல் நிலைய போலீஸார், விபத்தா, தற்கொலை முயற்சியா என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். .சி.யில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சக்தி கண்ணன் இதே பகுதியில் தொழில் செய்து வருகிறார். கணவன் மனைவி இரண்டு பேரும் தீ விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry