முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை பேசும் ‘மாநாடு’! வாரிசு அரசியலுக்கும் குட்டு! எதிர்பார்ப்பை கூட்டும் 2-ம் பாகம்!

0
245

டைம் லூப் எனப்படும் ஒரே காலத்தில் தங்கிவிடுவது என்ற கதைக்களத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மாநாடு’, சிம்பு, வெங்கட் பிரபு உள்ளிட்ட மொத்த படக் குழுவினருக்கும் ஜாக்பாட் என்றே சொல்லலாம்.

துபாயில் இருந்து நண்பனின் திருமணத்திற்காக கோவை வரும் அப்துல் காலிக் (சிம்பு), முதலமைச்சரை (எஸ்.ஏ. சந்திரசேகர்) கொலைசெய்ய அமைச்சரால் (ஒய்.ஜி. மகேந்திரன்) போடப்படும் திட்டத்தை முறியடிக்கிறார். சுருக்கமாக ஒரேவரியில் இந்தக் கதையை சொல்லிவிடலாம், ஆனால் இதனை டைம் லூப் மூலம் திரைக்கதையாக சொல்லியிருப்பதே அசத்தல். ஹாலிவுட் பட ரசிகர்களுக்கு மட்டுமே புரியும் டைம் லூப்பை, தமிழ் ரசிகர்களுக்கு எப்படி கூற வேண்டும் என காட்சிகளால் மிரட்டியிருக்கிறார் வெங்கட் பிரபு. 

ஒரேநாளில் நிகழும்கதை, ஒரேமாதிரியான காட்சிகள் இவைகளை சுவாரஸ்யமாக திரையில் கொண்டு வருவது அவ்வளவு சுலபமானதல்ல. இயக்குநராக அவர் பெருமைபட வேண்டிய படைப்பாக ‘மாநாடு’ அமைந்துள்ளது. அப்துல் காலிக்காக சிம்பு, தனுஷ்கோடி என்ற போலீஸ் அதிகாரியாக எஸ்.ஜே. சூர்யா, இவர்கள் இருவரும் தான் இப்படத்தின் பெருஞ்சுவர். கே.எல். பிரவீனின் எடிட்டிங் சித்திரம் என்றால், யுவன் சங்கர் ராஜாவின் இசை வண்ணங்கள். முதல் பாதியில் சிம்பு சிக்ஸர் அடிக்கிறார், இரண்டாம் பாதியில் எஸ்.ஜே. சூர்யா யார்க்கர் பந்துகளில் சிக்ஸர் அடிக்கிறார். அசுரத்தனமான நடிப்பும் “தலைவரே… தலைவரே…”, “வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு” போன்ற வசனங்கள் பேசும் இடங்களும் மாஸ்டர் கிளாஸ்.

இருவருமே வெரைட்டி காட்டியிருக்கிறார்கள், குறிப்பாக சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி. மகேந்திரன் மூவருக்கும் இடையில் நடக்கும் ஒரு காட்சி அசரடிக்கிறது.  அந்தக் காட்சியில் ஒய்.ஜி. மகேந்திரனும் தன் பங்கிற்கு ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் கதாபாத்திரங்களுக்கு பொருந்தி இருக்கிறார்கள். சிம்பு அடக்கி வாசித்திருப்பது அவரது பாத்திரத்திற்கு வலு சேர்க்கிறது, சண்டைக் காட்சிகளில் செம்ம எனர்ஜி. சிம்புவிற்கு இந்தப் படம்கம்பேக், எஸ்.ஜே. சூர்யாவுக்கு மைல் ஸ்டோன்.

படத்தின் மற்ற பாத்திரங்கள் தேவையான அளவிற்கு சரியாகப்  பயன்படுத்தப்பட்டுள்ளன. திருமண மண்டபத்தில் நடக்கும் சண்டைக் காட்சியும், இரண்டாம் பாதியில் எஸ்.ஜே. சூர்யா டைம் லூப்பை கண்டுபிடிப்பதும் ரசிகர்களிடம் திரைக்கதையின் தன்மையை புரியவைக்கிறது. இந்தப் பெருமையும் படத்தின் மொத்த பலமும் கே.எல். பிரவீனின் எடிட்டிங் தான், கொஞ்சம்கூட பிசிறு தட்டவில்லை. யுவன் சங்கர் ராஜா கேட்கவே வேண்டாம், பின்னணி இசையில் அமர்க்களாமாக மிரட்டியிருக்கிறார். ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவும் நிறைவான பங்களிப்பைச் செய்துள்ளது.

அப்துல் காலிக் என்ற சிம்பு பாத்திரம் மூலம், முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படும் பின்னணியையும், அதன் விளைவுகளையும் மாநாடு இயல்பாக பதிவு செய்துள்ளது.  ஆனால், தீவிரமாகவும், முழுமையான உட்கூறுகளுடனும் எடுக்கப்பட்டதா என்றால் இல்லை. அதற்கான அவசியமும் ‘மாநாடு’ படக்குழுவினருக்கு கிடையாது. தொன்னுறுகளுக்கு பின்னர் தமிழ் சினிமாவில் முஸ்லிம்கள் பாத்திரங்களும் அதன் மூலம் திணிக்கப்பட்ட விசமத்தனங்களுக்கு மத்தியில் மாநாடு படத்தை மருந்தாக எடுத்துக்கொள்ளலாம்.

படத்தின் மொத்த கதைக்களமும் கோவையில் தான். பாபர் மசூதி இடிப்பு, கோவை கலவரம் என உண்மைச் சம்பவங்களை படத்திற்குத் தேவையான வகையில் தொடர்புப்படுத்தியுள்ளது சிறப்பு.  அப்துல் காலிக் என்ற சிம்புவின் பாத்திரமும், அவரையே இஸ்லாமிய வெறுப்பு அரசியல், தீவிரவாதத்திற்கு எதிரான வசனங்களை பேச வைத்திருப்பதும் பிரசாரத்தன்மையில் இருந்து படத்தை விலகிச்செல்ல வைத்துள்ளது. அதேசமயம் தீவிர இந்து அடையாளங்களோடு படத்தில் வரும் வாகை சந்திரசேகர் பாத்திரத்தை நேர்மறையாக காட்டியிருப்பதும் வரவேற்க வேண்டியது.

“அமெரிக்காவில் ஒருத்தன் துப்பாக்கிய எடுத்து சுட்டா, அவன சைக்கோன்னு சொல்றதும், அதையே ஒரு முஸ்லிம் செஞ்சிட்டா அவன தீவிரவாதின்னு அடையாளப்படுத்துறதும் என்ன சார் நியாயம்ன்னு” சிம்பு கேட்பது, முஸ்லிம்கள் மீது தொடுக்கப்படும் உளவியல் ரீதியான தாக்குதல்களை அனைவரும் புரிந்துகொள்ள வகை செய்கிறது. இப்படி இன்னும் சில காட்சிகளும் வசனங்களும் இஸ்லாமிய சமூகத்திற்கு ஆறுதலான அம்சங்களே.

அதேபோல் முஸ்லீம் மணமகளை வேறு மத காதலனுடன் சேர்த்துவைக்க இரண்டு முஸ்லீம் இளைஞர்களே நட்புக்காக உதவுவதும், கலவரத்தை உருவாக்கும் கும்பலில் காவி குண்டர்களுடன் ஒரு முஸ்லீம் அடியாள் இருப்பது என சமவிகித கலப்புசெய்து திரைக்கதை நகர்ந்திருக்கிறது. இன்னொரு பக்கம் சில  இடங்களில் தமிழகத்தின் சமகால வாரிசு அரசியல், மதவாத அரசியல் போன்றவைகளையும் போகிறப் போக்கில் பொதடியில் அடித்துச் செல்கிறது மாநாடு.

மொத்தத்தில் தமிழ் சினிமாவின் வியப்புக்குரிய படைப்பு என்பதால், மாநாடு கவனிக்கப்பட வேண்டிய படம் மட்டும் அல்லாமல், கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டிய படமும் கூட. ‘மாநாடு’ இரண்டாம் பாகத்துக்கான லீடும் இறுதியில் வருவது, இன்னும் எதிர்பார்க்க வைத்துள்ளது.

விமர்சனம் :- களந்தை அப்துல் ரகுமான், பத்திரிகையாளர்

தொடர்புக்கு – kalandhai.abdulrahman@gmail.com

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

*இந்தச் செய்தியை ஒலி வடிவில் கேட்க, மொபைல் ஸ்கிரீனின் வலப்புறம் SHARE என்ற ரவுண்ட் பட்டனை அழுத்தினால், அந்த வரிசையின் கீழே ஹெட்ஃபோன் போன்ற குறியீடு இருக்கும். அதை அழுத்தி ஹெட்செட் உதவியுடன் செய்தியை ஒலி வடிவத்தில் கேட்க முடியும்*